Tuesday 26 May 2015

வைகாசி  மாதப் பயணம் .. ( 2 )

அருணகிரியாரின்  பெருமைகளைக் கண்ட  சம்பந்தான்டான் ,
ஒரு சூழ்ச்சி  வலை விரிக்கிறான்.  அரசர் ,  தன்  கண் பார்வையை
திரும்பப்  பெறுவதற்கு , தேவ லோகத்திலிருந்து  பாரிஜாத
மலரைக் கொண்டு வர வேண்டும் என்றும், அது  அருணகிரியாரால்
மட்டும்தான்  முடியும் என அரசரிடம்  கூறுகிறான் .  அருணகிரியாரும்,
அரசனின் கட்டளைப்படி  தேவலோகம் சென்று பாரிஜாத மலரைக்
கொண்டுவர  முடிவெடுக்கிறார். தேவ லோகத்திற்கு  பூத உடலுடன்
செல்ல  முடியாது  என்பதினால் , வேறு உருவத்தில் செல்ல
முடிவெடுத்து , கிளி கோபுரத்தின் மேலேறிய போது , அங்கு
இறந்து கிடக்கும் கிளியின் உடலைக் காண்கிறார்.


சித்தர்கள், அஷ்டமா சித்திகளையும்  ஆண்டவன் அருளால்
கை வரப் பெற்றவர்கள். பரகாயப் பிரவேசம் எனப்படும்  கூடு விட்டு
கூடு  பாயும் சித்தியை  கைவரப் பெற்ற  அருணகிரிநாதர் ,
தன் பூத உடலை  ஒருபுறம்  கிடத்தி விட்டு, கிளியின் உடலில்
பாய்ந்து, தேவலோகம் செல்கிறார்.  இந்த தருணத்திற்காகவே
காத்திருந்த  சம்பந்தாண்டான் , அருணகிரியாரின்  உடலை
எரித்து விடுகின்றான் ...

சம்பந்தாண்டான்,  அருணகிரியாரின்  உடலை  எங்கு
எரியூட்டியிருக்க முடியும்.. ?

மேலும்,  அருணகிரியாரின் உடலை   சுமந்து கொண்டு,
கோபுரத்திலிருந்து  கீழே இறங்கிய சம்பந்தாண்டான் , ஒரு
ஒதுக்குப்புறமான  இடத்தை  தேடியிருப்பானா  அல்லது
கோபுரத்துக்கு  அருகிலேயே  எங்காவது  எரியூட்டியிருப்பானா ?


ஆத்திரக்காரனுக்கு  புத்தி மட்டு  அல்லவா.. ?  எனவே ,
சம்பந்தாண்டான் ,  கோபுரத்திற்கு  அருகிலேயே எரியூட்டியிருக்க
வேண்டும்  என்பது  என்னுடைய கருத்து...

பழி வாங்கும் எண்ணத்தில்  இருப்பவர்களுக்கு , சில
குரூரமான எண்ணங்கள்  தோன்றுவது இயல்பு.

" அருணகிரியின்  வேண்டுதலுக்கு இணங்கி,  அரசருக்கு 
காட்சி கொடுத்தாயே .... முருகா... ,  இங்கே பார்  உன் பக்தனின் 
கதியை..."  என்ற  எண்ணத்தில் அருணகிரியாரின் உடலை ,
கம்பத்து இளையனாரின்  சன்னதியின்  பின்புறம்  எரியூட்டியிருக்கவும்
வாய்ப்பு  இருக்கிறதல்லவா ?

ஸ்ரீ ரமணர்,  நிஷ்டையில் இருந்த  பாதாள  லிங்கம் ,
இந்த மண்டபத்திற்கு  அருகில் உள்ளது.

ஸ்ரீ  சேஷாத்ரி சுவாமிகளும் , தன்  பெரும்பாலான நேரத்தை
கம்பத்து  இளையனாரின்  சன்னதியில்  கழித்திருக்கிறார்.

சாதாரணமாக, சித்தர்களும், ஞானிகளும் , மற்றொரு சித்தரோ
அல்லது ஞானியோ  இருக்கும் இடத்திற்கு  அருகிலேயே
இருந்திருக்கின்றனர்.

மேலும், இந்த மண்டபத்தின்  தூண்களில்,  சில  சித்தர்களின்
உருவங்கள்....

இந்த எண்ணத்தின்  அடிப்படையில்,  இந்த மண்டபம்
அருணகிரியாருக்கு  உரியதாக இருக்கக்கூடும்  என்ற  முடிவிற்கு
வந்திருந்த  நாங்கள் ,  அருணகிரி நாதரையும், அங்கிருக்கும்
சித்தர்களையும்  வழிபாட்டு , முன் சென்றோம்..

யானை  முகனை  வழிபாட்டு, சிவனின்  முதற் சீடராம்
நந்தி தேவரை வலம்  வந்து , முன் செல்ல ,
எதிரே  கிளி  கோபுரமும் , கோபுரத்து  இளையனாரும் ...

தொடரும்..........






Monday 25 May 2015




வைகாசி  மாதப் பயணம் ( 1 )

16/05/2015 அன்று  பெங்களூரிலிருந்து  திருவண்ணாமலை நோக்கி பயணம். 
பேருந்தில்  நானும் , நண்பரும்  பயணித்தோம்.

கிருஷ்ணகிரியிலிருந்து   செங்கம்  வரை,   கரடு முரடான  பாதை. 

இந்த பாதை  எப்போது  செப்பனிடப்படும்  என்பது  அரசியல்  வாதிகளுக்கே 
வெளிச்சம்...

கையில்  லக்கேஜ்  குறைவாக  இருந்தால்,  பெங்களுரிலிருந்து  திருப்பத்தூர் 

( கிருஷ்ணகிரி -  பர்கூர்  வழி ) சென்று , அங்கிருந்து  திருவண்ணாமலை 
சென்றால் , பயணம்  ஓரளவிற்கு  நன்றாக  இருக்கும்.
  ( சிங்காரப் பேட்டையிலிருந்து  செங்கம் வரை - சுமார்  20 km மட்டுமே  கரடு முரடான  பாதை ) .   2.30 மணி (pm ) அளவில் திருவண்ணாமலை  அடைந்தோம்.  வழக்கம் போல  PKS  Lodge இல்  (opp  state Bank of India ) லக்கேஜுகளை  வைத்துவிட்டு,  ஹோட்டல் Kannaa வில்  மதிய உணவு.  ஒய்வு  எடுக்க நேரம்  இல்லை... அடுத்த பயணத்திற்காக  வாடகைக் கார்  ஏற்பாடு செய்ய வேண்டிய  நிர்பந்தம்.  ஒரு சிலருடன் பேசி  வாடகைக்காரை  ஏற்பாடு  செய்து கொண்டோம்.  


இன்று  ( 16/05/15 )  மாத சிவராத்திரி ..  

ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் அருள்மிகு உண்ணாமுலை  தாயாரே , அண்ணாமலையை  கிரிவலம்  வருவதாக  ஐதீகம். 

மாலை  5 மணி  அளவில்  பெரிய கோவிலை  அடைந்தோம் .  


அருணை  பெரிய கோபுரத்தில்  வீற்றிருந்து , 

அல்லல் போக்கி, வல்வினை போக்கி , 
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை நீக்கி, 
போகாத் துயரம் போக்கி ,  நல்ல குணம் 
அதிகமாக  வரமருளும்  செல்வக் கணபதியைக்   
கை தொழுது , முன் நடந்தோம்..  

சில  அடிகள்  முன் நடந்ததும்,  இடது  பக்கத்தில் ,

 சிறிது  உயரத்தில்  ஓர்  உருவ சிலை..
பெரிய  கோபுரத்தை  கட்டிய  வள்ளால  மகாராஜாவாக  இருக்குமோ ? 
எந்த விதக் குறிப்பும்  இல்லை... 
இன்றைய  அரசியல்வாதிகளைப் போன்று , தனக்குத் தானே  சிலை  
வைத்துக் கொண்டிருப்பாரா , வள்ளால  மகாராஜா ?  
இல்லை என்றே  உள் மனது கூறுகின்றது ....
ஆனால், சிலையின்  முகமோ  , 
சீனர்களின்  முகத்தை  நினைவு   படுத்துகிறது.. 
மாபெரும்  சித்தர்களான  போகர் , கோரக்கர்  போன்றவர்கள்  
சீனத்தைச்  சேர்ந்தவர்கள் என்று  ஒரு குறிப்பு  உள்ளது.  
எனவே,  இந்த சிலை  ஒரு  சித்தரைத்தான்  குறிப்பிடுகிறது 
என்ற  எண்ணத்துடன் ,  அவரை  வணங்கி  முன் செல்கின்றோம் . 

அடுத்து  .... கம்பத்து  இளையனார்  சன்னதி.   

அருணகிரி நாதரின் வேண்டுதலுக்கு  இணங்கி , முருகன் , 
அரசனுக்கும் , சம்பந்தான்டானுக்கும், மற்றவர்களுக்கும் , 
கம்பத்திலிருந்து  வெளிப்பட்டு , காட்சி கொடுத்த இடம்.   
இதை  குறிக்கும் வகையில் , சன்னதியின் முகப்பில், இடது புற 
தூணில் ,  மயில் மீது இருக்கும் முருகனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 
கம்பத்து  இளையனாரை  வணங்கி, சன்னதியை  வலம்  வரும்  வழியில் 
குறுக்கிடுவது ...ஒரு  மண்டபம்...!

ஆலயத்திற்கு  வரும்  அன்பர்கள்  அனைவரும்  அந்த  மண்டபத்தை  

ஏறெடுத்தும் பார்க்காமல் செல்கின்றனர். 
 இந்த  மண்டபத்தின் 2 அல்லது 3 துண்களில் ,  கோபுரத்தில் 
கண்ட  சித்தரைப் போன்ற  உருவச் சிலைகள்.  
இச்சிலைகள்   சில சித்தர்களைத்தான் குறிப்பிடுகிறது  என்றால் , 
இந்த மண்டபம்  மிக மிக மகத்துவம்  வாய்ந்தது..! 
அப்படி என்றால் , இங்கிருக்கும்  சித்தர் யாராக  இருக்கக்கூடும் ? 
சில பல ஐயங்கள்.  என்னுடைய  எண்ண ஓட்டங்கள்  .... மறு பதிவில்.. !