2013, 28 டிசம்பர் அன்று காலை 3 மணி அளவில் பெங்களூரிலிருந்து புறப்பட்ட நாங்கள் மாண்டியா வழியாக ஸ்ரீ ரங்கபட்டினத்தை ஐந்தரை மணிக்கு அடைந்தோம்.
வண்ண வண்ண அலங்காரத்திலிருந்த ரங்கநாதரைக் கண்டு சொக்கி, தாயார் மகாலக்ஷ்மியையும் கண்டு மகிழ்ந்த நாங்கள் , வந்த வழியிலேயே சிறிது தூரம் திரும்பி, தலைக்காடு செல்லும் பாதையில் பன்னூர் வழியாக, சிவசமுத்திரத்திற்கு செல்லும் வழியில் ( மிக அருகில் ) மத்ய ரங்கத்தை அடைந்தோம்.
அமைதியான இடம். அதிர்வுகள் உள்ள இடம். அரங்கநாதரை தரிசித்து பின் தாயார் ரங்கநாயகியையும் தரிசித்தோம். அரசியைப்போல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் தாயாரிடம் வணங்கி விடைபெற்றோம்.
பின் கொள்ளேகால், ஹனூர், ராம்புரா வழியாக அந்தியூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு என ஸ்ரீரங்கத்தை சுமார் 4 மணி அளவில் அடைந்தோம். நிறைய பக்தர்கள் அரங்கனின் தரிசனத்திற்காக காத்திருக்க, அரங்கனின் திருவருள் சுமார் பத்து மணியளவில் கிடைக்கப் பெற்றோம்.
மறுநாள், ஞாயிறு விடியலில், ஆயிரம் கண்ணுடையாளை சமயபுரத்தில் தரிசித்து பின் ஆணைக்காவலில் அகிலாண்டேஸ்வரியின் அருள் பெற்றோம்.
திருச்சியில், மாணிக்க விநாயகரை தரிசிக்க எண்ணியிருந்த நாங்கள் நேரம் பற்றாக்குறையின் காரணமாக அவரை தவிர்த்து, தஞ்சாவூர் பாதையில் வாகனத்தை திருப்ப, எங்கள் எதிரே கம்பீரமாக ஒரு யானை. அலறி அடித்துக்கொண்டு வாகனத்திலிருந்து இறங்கி வணங்க, ஓரவிழியால் எங்களைப் பார்த்தவாறே கடந்தார்.
மாணிக்க வினாயகரே! உன் பொற்பாதம் சரணம்.
தஞ்சையில் புன்னை நல்லூர் மாரியம்மனின் அருள் பெற்று, திருக்கடையூர் அபிராமியை நோக்கி விரைந்தோம். கண்டோம், அருள் பெற்றோம்.
பின், சிதம்பரத்தில் நடராஜரையும், சிவகாமியையும், தரிசித்து பின் எல்லைக் காளியை வணங்கி திரும்பும் வழியில் அண்ணாமலையாரின் கோபுர தரிசனம் கண்டு, பெங்களூர் திரும்பினோம்.
இப்பயணத்திற்கு, ஆனுமதியும், ஆசீர்வாதமும் வழங்கி,
உறுதுணையாயிருந்த என் குருவிற்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குருர் சாட்சாத் பரப்ரும்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ .
களம்பூர் பெருமாள் செட்டியார்
No comments:
Post a Comment