Thursday 30 April 2020

சிவ புராணம் ( 15 )

15. தாருகாவனத்தில் திவ்ய நாடகம் 




ஒரு சமயம் தேவதாரு வனம் எனப்பட்ட தாருகா வனத்திலுள்ள முனிவர்கள் யாகமே எல்லாப் பலனைக் கொடுக்கக் கூடியதென்றும், யாகத்தைத் தவிர வேறு ஆண்டவன் இல்லை என்றும் எண்ணம் கொண்டு பகவானை மறந்து இருந்தனர். அதே போல முனிபத்தினிகள் கற்பு ஒன்றே சிறந்தது எனக் கொண்டு பகவானை ஆராதிப்பதை விட்டு விட்டனர். அவர்கள் அறியாமையை நீக்க ஈசன் விருப்பம் கொண்டார்.

மகாவிஷ்ணுவை அழைத்து அழகிய பெண்ணைப் போன்று உருவம் எடுத்துக் கொள்ளச் செய்தார். விஷ்ணுவும் அவ்வாறே தம்மைப் பலவாறு அலங்கரித்துக் கொண்டு கண்டோர் மயங்கும் பெண் வடிவைக் கொண்டார்.

இப்படியே புறப்பட்டுச் சென்று தாருகா வனத்தில் யாகம் செய்யும் முனிவர்கள் முன்னிலையில் நடமாடி அவர்கள் உள்ளத்தில் மோகம் உண்டாகச் செய்"  என்றார் ஈசன்.

விஷ்ணு தாருகாவனத்தை அடைந்தார். அங்கே யாகம் செய்யும் முனிவர்கள் முன்பு, வீணையில் இனிய நாதம் எழுப்பினார். இன்னிசையால் கவனம் ஈர்க்கப்பட்ட முனிவர்கள் தாங்கள் செய்து வந்த யாக காரியங்களை நிறுத்திவிட்டு நாதம் எங்கிருந்து வருகிறதென்று சுற்றும்முற்றும் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் பார்வை, பெண் வடிவிலே வந்திருக்கும் விஷ்ணுவின் மீது பட்டதும் அங்கேயே லயித்துவிட்டது. அத்தனை அழகு வடிவம் கொண்ட பெண்ணை அவர்கள் அதுவரைப் பார்த்ததே இல்லை. அவள் மீது வைத்த பார்வையை மீட்கச் சக்தியின்றி அவளையே பார்த்தபடி இருந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் தம்மிடம் அடிமையாகி விட்டன என்பதை உணர்ந்து மெல்ல இசைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார் விஷ்ணு.

முனிவர்கள் தாங்கள் செய்து வந்த யாகத்தை மறந்தனர். தம் மனைவியரை மறந்தனர். பெண்ணாக வந்திருக்கும் விஷ்ணுவோடு புறப்பட்டு விட்டனர். அவர்கள் உள்ளங்களில் அந்த மோகன வடிவமே நிறைந்திருந்தது. அவள் அழகைப் பற்றிய நினைவே அவர்கள் சிந்தனையில் குடி கொண்டிருந்தது.
யாகசாலையில் இருந்த முனிவர்கள், விஷ்ணுவின் மாயையில் சிக்கி அவர் புறப்பட்ட அதே நேரத்தில் சிவ பெருமான் பரதேசியைப் போன்று வேடம் கொண்டு திகம்பரராய் கையில் ஓடு ஏந்தி உடுக்கை அடித்துப் பாடியபடி முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். ஒவ்வொரு வீடாக ஏறி உடுக்கையின் நாதத்துக்கேற்பப் பாடிக் கொண்டு பிக்ஷை கேட்டார்.
யாரோ பரதேசி பிச்சை கேட்டு வந்திருக்கிறான் என்று வெளியே வந்த முனி பத்தினிகள் ஒருகணம் திகைத்து விட்டனர். பிச்சைக்கு வந்திருப்பவனின் சுந்தர வடிவத்தைக் கண்டதும் அவர்கள் உள்ளங்களில் கள்ளம் புகுந்துவிட்டது. அவனைப் பார்க்கப் பார்க்க அவர்கள் உள்ளங்களில் இன்பம் ஊற்றெடுத்தது. அவனோடு பேசுவதிலேயே அவர்கள் ஓர் இன்பம் கண்டனர். பகவானின் மாயையல்லவா?
சிவபெருமான் அங்குள்ள முனிவர்கள் அத்தனை பேருடைய வீடுகளிலும் ஏறி இறங்கி முனி பத்தினிகளின் மனத்திலே ஆசைக் கனல் கொழுந்துவிட்டெரியச் செய்தார். அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு பல விதமாக உரையாடினர். மனத்துக்கு இதமான பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தினர். தேனிலே அமர்ந்த ஈயைப் போன்று அவர்கள் சிவபெருமானை விட்டுப் பிரிய மனமின்றித் தவித்தனர். அவர்களுடைய மனநிலையை அறிந்த ஈசன், மெல்ல அங்கிருந்து தவச் சாலையை நோக்கி நகர்ந்தார். முனி பத்தினிகளுக்கு அவர் புறப்பட்டு விட்டாரே என்ற வருத்தம்.
இருப்பா! அதற்குள் புறப்பட்டுவிட்டாயே...!" என்று அவரை மேலும் பாட்டுக்கள் பாடும்படி வற்புறுத்தினர். ஈசனோ மெல்ல அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்குவது போல நிற்பதும் உடனே புறப்பட்டுச் சிறிது தூரம் நகர்வதுமாக இருந்தார். முனி பத்தினிகளும் தங்கள் இல்லங்களை மறந்து அவரோடு புறப்பட்டு வந்தனர்.
அப்போது எதிர்புறமாக மற்றொரு கூட்டம் வந்தது. அவர்கள் வேறு யாருமல்ல, விஷ்ணுவின் மாயையில் சுழன்று அவர் பின்னால் வந்த முனிவர்கள்தான். விஷ்ணுவின் மோகன வடிவத்தைக் கண்களால் பருகி ஆனந்தித்து அவர் பின்னாலேயே வந்து கொண்டிருந்த முனிவர்கள் தூரத்தே வந்து கொண்டிருக்கும் பெண்களின் கூட்டத்தைக் கண்டதும் திடுக்கிட்டனர். அவர்களில் ஒருவர், அக்கூட்டத்தில் முனி பத்தினிகள் இருக்கிறார்கள் என்று அறிவித்ததும் மற்றவர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர்.
யாரோ பரதேசி ஒருவன் உள்ளத்து உணர்ச்சிகளை எழுப்பும் பாடல்களைப் பாடுவதும் அவன் பாட்டைக் கேட்டு முனிபத்தினிகள் மெய் மறந்து அவனைப் புகழ்வதையும் பார்த்த முனிவர்களுக்குச் சொல்ல முடியாத கோபம் எழுந்தது.
அடே தூர்த்தா! என்ன காரியம் செய்கிறாய்? ஆண்கள் இல்லாத நேரத்தில் பெண்களிடம் இச்சையாகப் பேசி அவர்கள் மனத்திலே உணர்ச்சியைத் தூண்டுகிறாயே! உன்னை என்ன செய்கிறோம் பார்" என்று கடிந்து பேசி அவனைப் பலவாறு சபித்தனர்.
அவர்கள் சாபம், பிக்ஷாடனராக வந்திருந்த பகவானை ஒன்றுமே செய்யவில்லை. ஈசன் சிரித்தபடி அவர்களைப் பார்த்தார்.
இப்போது என்ன ஆயிற்று" என்று கேட்டார்.
அப்போதுதான் முனிவர்களுக்கு மெல்லச் சந்தேகம் தோன்றியது. வந்திருப்பது பெரிய யோகியாக இருக்கலாமோ என்று எண்ணினர்.
ஐயா, நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்?"என்று கேட்டனர்.
முனிவர்களே, நானும் உங்களைப் போன்று ஒரு முனிவனே. இவ்வனத்தில் நீங்கள் ஒன்றுகூடித் தவம் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு நானும் இங்கே தங்கி தவம் மேற்கொள்ளலாமென்று என் மனைவியுடன் வந்தேன். ஆகாரத்திற்காக யாசித்துக் கொண்டே இந்த ஆசிரமத்தில் நுழைந்தேன்..."
உங்கள் மனைவி எங்கே?" என்று கேட்டனர் முனிவர்கள்.
அதோ! உங்கள் மத்தியில்தான் இருக்கிறாள்!..." என்று பெண் வடிவிலே நிற்கும் விஷ்ணுவைச் சுட்டிக் காட்டினார். பின்னர் அவரை நெருங்கி, இவ்வளவு நேரமாக எங்கே சென்றாய்? ஆற்றுக்குப் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றாயே!" என்று கேட்டார்.
ஆற்றங்கரையிலே கூட்டம் இருந்தது. அதனால் சற்று தாமதமாயிற்று. திரும்பி வரும்போது உங்களைக் காண வில்லை. யாகசாலை பக்கம் போயிருப்பீர்களோ எனப் பார்த்து வந்தேன்" என்றார் விஷ்ணு தேனினும் இனிய பெண் குரலில்.
ஐயா!... " என்று கூப்பிட்டனர் முனிவர்கள்.
என்ன?..."
தவம் செய்ய விருப்பம் தெரிவித்தீர்கள். இந்தப் பாதகியை அனுப்பிவிட்டுத் தாங்கள் எங்களோடு வாருங்கள்" என்று அழைத்தனர்.
அதெப்படி முடியும்? அவள் என் மனைவி அல்லவா? தவிர, மனைவியோடு தவம் செய்வதுதான் சிறந்ததெனச் சொல்லப்பட்டுள்ளதே!...
ஐயா, தாங்கள் கூறுவது ஒருவிதத்தில் சரிதான். ஆனால் தங்கள் மனைவியோ களங்கமுள்ளவள். பிற ஆடவர்களிடம் சிரித்துப் பேசி அவர்களோடு இன்ப வார்த்தைகளை உரையாடுகிறாள். ஆகவே அவள் ஒதுக்கப்பட வேண்டியவளே!..." என்றனர் முனிவர்கள்.
ஈசன்கலகலவென்று சிரித்தார்.
மிகவும் நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு. என் மனைவி களங்கமுள்ளவள் எனக் கூறும் உங்கள் யோக்கியதை மட்டும் என்ன? உங்கள் மனைவியர் மட்டும் கற்பிற் சிறந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ? திகம்பரனாகிய என்னை அவர்கள் தலை நிமிர்ந்து பார்க்கலாமா? பார்க்கவே கூடாதென்றால் என்னைச் சூழ்ந்து கொண்டு உணர்ச்சி மயக்கமாக வார்த்தையாடுவதை என்னவென்று கூறுவது? உங்கள் யோக்கியதை இப்படி இருக்கிறது. இந்த இடத்தில் தவம் செய்தால் என் குறிக்கோள் நிறைவேற மார்க்கமே கிடையாது. நான் வருகிறேன்" என்று கோபம் கொண்டவர் போல நடித்து விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு வேகமாக நடந்தார். இருவரும் நேராக வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் விடைபெற்றுத் திரும்பினர்.
மறுநாளே தாருகாவனத்து முனிவர்களுக்குக் கேடுகாலம் ஆரம்பமாகி விட்டது. முனிவர்கள் நோய் வாய்ப்பட்டனர். அதன் காரணமாக அவர்களால் நித்திய கர்மாக்களைச் சரிவர செய்ய முடியவில்லை. ஆசிரமத்தில் லக்ஷ்மீகரம் போய் விட்டது. அமைதி நிரம்பிய வாழ்க்கை மாறி தினமும் வேதனைப்பட்டுத்  தவித்தனர்.
நாளுக்கு நாள் இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது. காரணம் தெரியாது தவித்த முனிவர்கள் எல்லோருமாகப் பிரம்மதேவனை அடைந்து தங்களுக்கு நேர்ந்துள்ள துயரைத் தெரிவித்தார்கள்.
முனிசிரேஷ்டர்களே! பகவானுக்குச் செய்த அபசாரமே உங்களை இப்படித் துன்புறுத்துகிறது. யாகமே எல்லாவற்றையும் கொடுக்கவல்லது என்றும், வேறு கடவுள் இல்லை என்றும் நீங்கள் எண்ணியிருந்தீர்கள். உங்கள் மனைவியரோ கற்பிற் சிறந்தது வேறு இல்லை என பகவானை ஆராதிப்பதை விட்டு விட்டனர். உங்கள் அறிவிலே படிந்திருந்த மயக்கத்தை நீக்கவே பகவான் கைலாசநாதன் மஹா விஷ்ணுவோடு பிக்ஷாடனராகத் தாருகா வனம் வந்திருந்தார். நீங்களோ அவரது உண்மைச் சொரூபத்தை உணராது உங்கள் மனைவியரை நெறி கெட்டு நடக்குமாறு பரதேசி தூண்டினான் என்று சபித்தீர்கள். அதன் பலனைத்தான் நீங்கள் இப்போது அனுபவிக்கிறீர்கள்" என்றார்  பிரம்மதேவன்.
முனிவர்களுக்கு அப்போதுதான் உண்மை புரிந்ததுசர்வேசுவரன் அவ்வளவு நெருக்கத்தில் இருந்தும் அவரை உணராது போனோமே என்று அவர்கள் வருந்தினர். மறுபடியும் பிரம்மதேவனை வணங்கி, பிரபோ ! நாங்கள் இத்தனை காலமாக அறியாமையால் பகவானை மறந்து இருந்து விட்டோம். இப்போது தான் எங்கள் கண்கள் திறந்தன. எங்கள் தவறுக்கு நாங்கள் பெரிதும் வருந்துகிறோம். எங்களை மன்னித்து நாங்கள் கடைத்தேறும் மார்க்கத்தைத் தாங்கள் தான் காட்டவேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.
பிரம்மதேவன் அவர்களுக்குச் சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்து, பஞ்சாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்தார்.
நீங்கள் இந்த லிங்கத்தை எடுத்துச் சென்று தினமும் தவறாது ஆராதித்து பஞ்சாக்ஷரியை ஜபித்து வந்தீர்களானால் சிவபெருமானின் அருள் பெறுவீர்கள்" என்றார்.
முனிவர்கள் சிவலிங்கத்தைப் பக்தியோடு பெற்றுத் தங்கள் இருப்பிடம் கொணர்ந்து பிரதிஷ்டை செய்தனர். தினமும் லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, பஞ்சாக்ஷரியை ஜபித்து வந்தனர்.
அவர்கள்
பூஜையில் மகிழ்ச்சி அடைந்த ஈசன், மறுபடியும் விஷ்ணுவோடு பிக்ஷாடன கோலத்தில் தாருகாவனம் வந்தார்.
இம்முறை அவரைப் பார்த்து முனிபத்தினிகள் சித்தம் பேதலிக்கவில்லை. அவரைப் பக்தியோடு வரவேற்று கால் அலம்பி பிக்ஷை இட்டனர். முனிவர்களும் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்தோட பகவானையும் விஷ்ணுவையும் வேத கோஷங்களால் வரவேற்று அர்க்கியம் முதலானவைகளைக் கொடுத்து உபசரித்தனர்.


முனிவர்களின் உபசரிப்பிலே பெரிதும் மகிழ்வுற்றுக் கைலாசநாதன் அவர்களுக்குத் தமது திவ்விய ரூபத்தைக் காட்டி அவர்கள் துயரம் நீங்குமாறு அருளினார். முனிவர்கள் அவரைப் பணிந்து என்றும் அங்கேயே இருக்க வேண்டுமென்று வேண்ட, சிவபெருமான் அவ்வாறு சம்மதித்து, நாகேசர் என்ற திருநாமத்தோடு அவர்கள் பூஜித்து வந்த லிங்கத்திலே சாந்நித்தியம் அடைந்தார்.

ஹரி ஓம் !!!

Tuesday 28 April 2020

சிவ புராணம் ( 14 )

14. அத்ரி ஆசிரமத்தில் கங்கை


நந்திகேச்வர லிங்கத்தின் மகிமையை உரைத்த சூதர், நைமிசாரண்ய வாசிகளுக்கு மேலும் அனேக லிங்கங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

தப்திநதி தீரத்திலும் அனேக லிங்கங்கள் இருக்கின்றன. குமாரேசுவரர், சித்தேசுவரர், ஸ்தநேசுவரர், ராமேசுவரர், ரூஷீசுவரர், பம்பேசுவரர், நந்தேசுவரர், பஞ்ச புஞ்ஜேசுவரர் ஆகிய லிங்கங்களைத் தரிசிப்பவன் சர்வாபீஷ்டங்களும் நிறைவேறப் பெறுவான்.

பூர்ண நதி தீரத்தில் பூர்ணகேசுவரரும், விரேசுவரரும் இருக்கின்றனர்.
கோதாவரி நதி தீரத்தில் கபாலேசுவரர், சக்கரேசுவரர், சந்திரேசுவரர், தௌதபாபேசுவரர்,  பீமேசுவரர், சூரியேசுவரர் ஆகியோர் இருப்பிடம் கொண்டுள்ளனர்.

திருப்திகா நதி தீரத்திலே, திரியம்பகேசுவரர், கோகர்ணேசுவரர், நாருகேசுவரர், ராமேசுவரர், நந்தேசுவரர், விமலேசுவரர், கண்டகேசுவரர் ஆகியோரைத் தரிசிக்கலாம். இவர்களைப் பூஜித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். திருப்திகா நதி கடலிலே சேரும் சங்கமத்தில் தர்மேசுவர லிங்கம் இருக்கிறது.

மேற்குக் கடற்கரையிலே சித்தேசுவரர், பிவேசுவரர், அந்தகேசுவரர் இருக்கின்றனர். அற்புதாசலத்தில் சங்கரேசுவரர், நர்த்தமேசுவரர், கோடீசுவரர் ஆகியோரைக் காணலாம்.
கௌசிகா
நதி தீரத்திலே அசலேசுவரர், நாகேசுவரர், அநந்தேசுவரர், யோகேசுவரர், வைத்திய நாதேசுவரர், கோடீசுவரர், சப்தேசுவரர், பத்ரேசுவரர், சண்டீசுவரர், சங்கமேசுவரர் ஆகியோரை  வழிபடலாம்.

தென் திசையில் காமதம் என்றொரு வனம் இருக்கிறது. அங்கே பிரம்மாவின் புத்திரரான அத்திரி முனிவர் தம் மனைவி அனுசூயையோடு தவம் செய்து வந்தார்.

ஒரு சமயம் எங்கும் மழை பெய்யவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக மழை பெய்யாததால் வறட்சி உண்டாயிற்று. குளம், ஆறு, கிணறு ஆகிய நீர் நிலைகளில் தண்ணீர் சுத்தமாக வற்றி விட்டது. பயிர்ப் பச்சைகள் கருகின. பசுமை என்பதே பார்க்க முடிய வில்லை. அதன் காரணமாக உஷ்ணக் காற்று வீசத் தொடங்கியது. ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆடுமாடுகள் மடிந்தன. தண்ணீர் கிடைக்காததால் மக்கள் நித்திய கர்மாக்களை விட்டனர்.

அத்திரி முனிவரின் ஆசிரமத்திலும் இந்தக் கஷ்டம் நீடித்தது. முனிவரின் சிஷ்யர்கள் அங்கே தங்க முடியாது வெளியிடங்களுக்குப் போய்விட்டனர். அனுசூயை மட்டும் கணவனோடு இருந்தாள். அவருக்கு வேண்டிய பணிவிடை களைச் செய்து கொண்டு சிவபூஜையும் நடத்தி வந்தாள். மண்ணைக் கொண்டு சிவலிங்கம் செய்து அதற்குத் தினமும் பூஜை செய்து வந்தாள். தண்ணீர் வற்றிப்போய் செடிகொடிகள் கருகியதும் அனுசூயை பூஜைக்கு வேண்டிய மலர் முதலானவை கிடைக்காமல் கஷ்டப்பட்டாள். இருப்பினும் அதற்காக அவள் பூஜையை நிறுத்தி விடவில்லை. மானசீகமாகவே சிவ லிங்கத்துக்குப் பூஜை செய்து வந்தாள்.
அத்திரி முனிவர் கண்ணை மூடி யோகத்தில் அமர்ந்து விட்டார். அனுசூயைக்கு வேலை எதுவும் இல்லை. ஆகவே அவளும் தன்னுடைய சிவலிங்கத்தைக் கணவனின் முன்பு நிறுத்தி, இருவரையும் வலம் வந்து வணங்கித் தானும் யோகத்தில் அமர்ந்தாள்.
நாட்கள் மெதுவாக நகர்ந்தன; ஒரு வருடம், இரண்டு வருடம் என்று ஐம்பத்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுடைய தவத்தைக் கலைக்க ஒரு சில அரக்கர்கள் முனைந்தனர். ஆனால் அவர்களால் முனிவரையும் அவர் பத்தினியையும் நெருங்க முடியவில்லை. அனுசூயையின் பதிவிரதைத் தன்மையால் அவள் உடலிலிருந்து வீசிய யோகாக்கினி, அரக்கர்களை நெருங்க விடாது தடுத்து நிறுத்தியது.
அத்திரி முனிவரும், அனுசூயையும் செய்யும் தவத்தைப் பற்றித் தேவர்கள் அறிந்தனர். அதைக் காண அவர்கள் காமதம் எனப்படும் அவ்வனத்துக்கு ஓடி வந்தனர். யோகத்தில் அமர்ந்திருக்கும் முனிவரையும், அவர் முன்பு கண் மூடித் தியானத்தில் இருக்கும் பதிவிரதையையும் கண்டு அவர்கள் மகிழ்ச்சி கொண்டனர். அவர்களைப் பலவிதத்திலும் பாராட்டித் திரும்பினர்.
ஆனால் சிவபெருமானும், கங்கையும் மட்டும் திரும்ப வில்லை. தம்மை உள்ளன்போடு பூஜித்த அவர்களுக்கு அருள வேண்டுமென இருவரும் காத்திருந்தனர்.
நிஷ்டையிலிருந்து கண் விழித்த அத்திரி முனிவர், அனுசூயா, ஆசமனத்துக்கு நீர் கொண்டு வா" என்றார்.
தியானம் கலைந்த அனுசூயை, இதோ கொண்டு வருகிறேன், சுவாமி" என்று சொல்லி, பாத்திரத்துடன் ஆசிரமத்துக்கு வெளியே வந்தாள். அங்கு தண்ணீர் ஏது? பல காலமாக எங்கும் வறட்சி நீடிப்பது அவளுக்குத் தெரியாதா என்ன? கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதிருக்கிறதே!" என்று மனத்தில் வேதனையோடு எண்ணித் துக்கித்தாள்.
அப்போது அவள் முன்பு கங்கை தோன்றினாள்.

அனுசூயா, உனக்கு என்ன வேண்டும்? கேள், தருகிறேன்" என்றாள்.

அம்மா, நீங்கள் யார்?" என்று கேட்டாள் அனுசூயை.

அனுசூயா, நான் தான் கங்கா தேவி, உன் பதிவிரதா தர்மத்தையும், நீ கணவனையும், சிவலிங்கத்தையும் பூஜை செய்யும் விதத்தையும் காண வந்தேன்" என்றாள் கங்கை.

தேவி, உங்களைத்  தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது பற்றி என் உள்ளம் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறது. என் கணவர் நிஷ்டை கலைந்து ஆசமனம் செய்ய நீர் வேண்டும் எனக் கேட்டார். எங்கும் நிலவும் வறட்சியால் ஒரு  சொட்டுத் தண்ணீர் கூடக்கிடைக்கவில்லை. எனக்குக் கொஞ்சம் நீர் வேண்டும்" என்று விண்ணப்பித்தாள் அனுசூயை.

பூமியில் ஒரு சிறு குழியை உன் கையால் தோண்டு, நீ விரும்பியபடி தண்ணீர் கிடைக்கும்" என்றாள் கங்கை.

மகிழ்ச்சியோடு அனுசூயை பூமியில் தோண்ட, அந்தச் சிறு குழியிலிருந்து ‘குபுகுபு’ வென்று நீர் குமிழிட்டு வெளிப்பட்டது. பாத்திரத்தில் நீரை நிரப்பிக்கொண்ட அனுசூயை பணிவோடு  கங்கையை வலம் வந்து வணங்கி, தேவி, ஒரு விண்ணப்பம். எங்கள் தவம் நிறைவேறும் வரை தாங்கள் இங்கு இருக்க வேண்டும்" என்று வேண்டினாள்.

கங்கை மெல்லச் சிரித்தபடி, அனுசூயா, உன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமானால், உன் கணவருக்குப் பணிவிடை செய்து அடைந்த பலனில் ஒரு மாதத்துக்கான பலனை எனக்குத் தரவேண்டும். தருவாயா?" என்று கேட்டாள்.

அனுசூயை பெரிதும் சந்தோஷித்தபடி, அவ்வாறே ஒரு மாதப் பலனை உங்களுக்குத் தந்தேன்" என்று தத்தம் செய்தாள். பின்னர், நீர் மொண்டிருந்த பாத்திரத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பினாள்.

ஆசமனம் செய்த அத்திரி முனிவருக்கு வியப்பாக இருந்தது. இத்தனை காலமாக அவர் உபயோகித்து வந்த தண்ணீரைப் போல் அல்லாமல் மிகுந்த ருசியோடு அல்லவா இருக்கிறது. அன்றையத்தினம் கொண்டு வந்த நீர்! மனைவியை அழைத்தார்.
பிரியே! இன்று நீ கொண்டு வந்த நீர், புதிய ருசியோடு விளங்குகிறதே. இது நம் ஆசிரமத்தில் கிடைக்கக் கூடிய நீர் அல்ல. எங்கிருந்து கொண்டு வந்தாய்?" என்று கேட்டார்.
அனுசூயை பதில் சொல்லாது தலையைத் தாழ்த்தியபடி நின்றிருந்தாள். தன் பதிவிரதா தர்மத்தைப் புகழ்ந்து கங்கையே வந்திருக்கிறாள் என்று சொல்வதால் கணவனின் முன்னிலையில் தன்னை உயர்த்திக் கூறுவதாக ஆகிவிடுமே என்று பயம் அவள் மனத்தில் நிறைந்திருந்தது. முனிவரோ மீண்டும் அவளைக் கேட்டார்.
தயங்கித் தயங்கி அனுசூயை நடந்ததைத் தெரிவித்து, பிரபோ, என்னை மன்னிக்க வேண்டும்" என்று வேண்டினாள்.

மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட முனிவர் அத்திரி ஆச்சரியமடைந்தார்.
பிரியே, கேட்கவே வியப்பாக அல்லவா இருக்கிறது. முனிவர்களுக்கும் ஞானிகளுக்கும் கிட்டாத பாக்கியம் உனக்கு ஏற்பட்டுள்ளது கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சியுற்றாலும், பூரணமாக நம்ப முடியாதிருக்கிறது. கங்கையை எனக்குக் காட்டுவாயா?" என்றார்.
அனுசூயை கணவனை வணங்கி, தான் நீர் எடுத்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றாள். குழியிலிருந்து நீர் குமிழிட்டுக் கிளம்புவதைக் கண்ட அவர் பரவசமாகி விட்டார்.
பிரியே! உன்னைப் போல் பாக்கியசாலி இருந்திருக்க முடியாது. கங்காதேவியே உனக்குப் பிரத்தியக்ஷமாகி இருக்கிறாள் என்றால் என் தவம் பூர்த்தியாகி விட்டதாக ஆகிறது" என்று மகிழ்ச்சியோடு கூறிய முனிவர் கங்கா நீரிலே நீராடி, ஆசமனம் முதலான செய்து கங்கையை மனத்தால் தியானித்தார்.
அப்போது கங்காதேவி அவர்கள் முன்பு சர்வாலங்கார பூஷிதையாகத் தோன்றினாள். முனிவரும் அவர் பத்தினியும் அவளை வலம் வந்து நமஸ்கரித்தனர்.
அனுசூயா, என் வாக்குப்படி உன் கணவரின் தவம் பூர்த்தியாகும் வரை இங்கிருந்து விட்டேன். சற்று முன்பு முனிவர் தம் வாயாலேயே தவம் பூர்த்தியாகி விட்டதாகச் சொல்லவில்லையா? இனி நான் திரும்பிச் செல்லலாமா" என்று கேட்டாள்.
அனுசூயை அவளை மறுபடியும் நமஸ்கரித்து அஞ்சலி செய்தாள்.
தேவி, உலகிலே மக்கள் படும் துயரம் சகிக்க முடிய வில்லை. தொடர்ந்து மழையில்லாததால் எங்கும் வறட்சியாகி பயிர்ப் பச்சைகள் கருகிவிட்டன. தாங்கள் தயவு செய்து இங்கே நிலைத்து இருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். முனிவரும் அங்கேயே தங்கும்படி கங்கையைப் பலவாறு வேண்டினார்.
அனுசூயை, நான் என்றும் இங்கேயே நிலைத்திருக்க வேண்டுமானால், கணவனைப் பூஜித்து அடைந்துள்ள உன் பலனில் ஒரு வருஷப் பலனை எனக்கு அளிக்கச் சம்மதிப்பாயா?
தானம்
, புண்ணிய தீர்த்த ஸ்நானம், யாகம் ஆகியவற்றால் அடையும் பலனைக் காட்டிலும், பதி விரதையைத் தரிசிப்பவர்கள் மேலான பலனை அடைவார்கள். ஆகவே தினமும் உன்னைத் தரிசித்துக் கொண்டே இங்கிருப்பேன்" என்றாள்.
தங்கம், இரும்பு, சந்தனம் இம்மூன்றும் தன்னை வருத்திக் கொண்டாவது பிறருக்கு நல்லதைக் கொடுக்கின்றன. உயர்ந்தவர்கள் இத்தன்மை வாய்ந்தவர்கள். அதுபோலவே அனுசூயையும் மகிழ்ச்சியோடு கங்கைக்குத் தன் பதி சேவையின் பலனில் ஒருவருடப் பலனைத் தத்தம் செய்தாள். கங்கையும் ஆனந்தத்தோடு அங்கேயே நிலைத்து விட்டாள்.
அப்போது அனுசூயை பூஜித்து வந்த சிவலிங்கத்திலிருந்து ஈசன் ஐந்து திருமுகங்களோடு எழுந்து அவர்களுக்கு காட்சி தந்தார்.
அனுசூயை, உன் பூஜையால் நான் மகிழ்ச்சி அடைந் துள்ளேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.
முனிவரும் அனுசூயையும் ஈசனையும், கங்கையையும் ஒருங்கே வலம் வந்து வணங்கி ஸ்தோத்திரங்களால் துதித்தனர்.
பிரபோ, சர்வேசுவரா, எங்கள் மீது கருணை கொண்டு தாங்கள் தோன்றியிருக்கும் பட்சத்தில், தாங்கள் இந்த ஆசிரமத்திலேயே என்றும் இருந்து மக்களுக்கு சகல சுகங்களையும் அருளி வரவேண்டும்" என்று பிராத்தித்தனர்.
ஈசன் அவர்கள் கோரிக்கையை ஏற்று அவ்வாறு அருளி மறைந்தார். சர்வேச்வரனும் கங்காதேவியும் அத்திரி ஆசிரமத்தில் இருப்பிடம் கொண்டதால் ஆசிரமம் தழைத்து விளங்கத் தொடங்கியது.
வெளியிடங்களிலிருந்தெல்லாம்
முனிவர்கள் அந்த வனத்தில் தவம் செய்து முக்தி பெற வேண்டுமென்று வந்து கூடினர். எல்லோரும் பகவானை ஆராதித்து வழிபட்டனர். ஈசனும்  அவர்கள் பூஜைக்கு மகிழ்ந்து நாட்டிலே நிலவி வந்த வறட்சி நீங்க மழை பொழியச் செய்தார். பயிர்ப் பச்சைகள் தோன்றின. மக்கள் குதூகலத்தோடு பகவானை ஆராதித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். அத்திரி முனிவர் வேண்டிக் கொண்டதன் பேரில் அந்த ஆசிரமத்தில் இருப்பிடம் கொண்ட ஈசன் அத்திரீசுவரர் என்று போற்றப்பட்டார்.


ஹரி ஓம் !!!