வைகாசி மாதப் பயணம் ( 1 )
16/05/2015 அன்று பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி பயணம்.
பேருந்தில் நானும் , நண்பரும் பயணித்தோம்.
கிருஷ்ணகிரியிலிருந்து செங்கம் வரை, கரடு முரடான பாதை.
இந்த பாதை எப்போது செப்பனிடப்படும் என்பது அரசியல் வாதிகளுக்கே
வெளிச்சம்...
கையில் லக்கேஜ் குறைவாக இருந்தால், பெங்களுரிலிருந்து திருப்பத்தூர்
( கிருஷ்ணகிரி - பர்கூர் வழி ) சென்று , அங்கிருந்து திருவண்ணாமலை
சென்றால் , பயணம் ஓரளவிற்கு நன்றாக இருக்கும்.
( சிங்காரப் பேட்டையிலிருந்து செங்கம் வரை - சுமார் 20 km மட்டுமே கரடு முரடான பாதை ) . 2.30 மணி (pm ) அளவில் திருவண்ணாமலை அடைந்தோம். வழக்கம் போல PKS Lodge இல் (opp state Bank of India ) லக்கேஜுகளை வைத்துவிட்டு, ஹோட்டல் Kannaa வில் மதிய உணவு. ஒய்வு எடுக்க நேரம் இல்லை... அடுத்த பயணத்திற்காக வாடகைக் கார் ஏற்பாடு செய்ய வேண்டிய நிர்பந்தம். ஒரு சிலருடன் பேசி வாடகைக்காரை ஏற்பாடு செய்து கொண்டோம்.
இன்று ( 16/05/15 ) மாத சிவராத்திரி ..
ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் அருள்மிகு உண்ணாமுலை தாயாரே , அண்ணாமலையை கிரிவலம் வருவதாக ஐதீகம்.
மாலை 5 மணி அளவில் பெரிய கோவிலை அடைந்தோம் .
அருணை பெரிய கோபுரத்தில் வீற்றிருந்து ,
அல்லல் போக்கி, வல்வினை போக்கி ,
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை நீக்கி,
போகாத் துயரம் போக்கி , நல்ல குணம்
அதிகமாக வரமருளும் செல்வக் கணபதியைக்
கை தொழுது , முன் நடந்தோம்..
சில அடிகள் முன் நடந்ததும், இடது பக்கத்தில் ,
சிறிது உயரத்தில் ஓர் உருவ சிலை..
பெரிய கோபுரத்தை கட்டிய வள்ளால மகாராஜாவாக இருக்குமோ ?
எந்த விதக் குறிப்பும் இல்லை...
இன்றைய அரசியல்வாதிகளைப் போன்று , தனக்குத் தானே சிலை
வைத்துக் கொண்டிருப்பாரா , வள்ளால மகாராஜா ?
இல்லை என்றே உள் மனது கூறுகின்றது ....
ஆனால், சிலையின் முகமோ ,
சீனர்களின் முகத்தை நினைவு படுத்துகிறது..
மாபெரும் சித்தர்களான போகர் , கோரக்கர் போன்றவர்கள்
சீனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது.
எனவே, இந்த சிலை ஒரு சித்தரைத்தான் குறிப்பிடுகிறது
என்ற எண்ணத்துடன் , அவரை வணங்கி முன் செல்கின்றோம் .
அடுத்து .... கம்பத்து இளையனார் சன்னதி.
அருணகிரி நாதரின் வேண்டுதலுக்கு இணங்கி , முருகன் ,
அரசனுக்கும் , சம்பந்தான்டானுக்கும், மற்றவர்களுக்கும் ,
கம்பத்திலிருந்து வெளிப்பட்டு , காட்சி கொடுத்த இடம்.
இதை குறிக்கும் வகையில் , சன்னதியின் முகப்பில், இடது புற
தூணில் , மயில் மீது இருக்கும் முருகனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
கம்பத்து இளையனாரை வணங்கி, சன்னதியை வலம் வரும் வழியில்
குறுக்கிடுவது ...ஒரு மண்டபம்...!
ஆலயத்திற்கு வரும் அன்பர்கள் அனைவரும் அந்த மண்டபத்தை
ஏறெடுத்தும் பார்க்காமல் செல்கின்றனர்.
இந்த மண்டபத்தின் 2 அல்லது 3 துண்களில் , கோபுரத்தில்
கண்ட சித்தரைப் போன்ற உருவச் சிலைகள்.
இச்சிலைகள் சில சித்தர்களைத்தான் குறிப்பிடுகிறது என்றால் ,
இந்த மண்டபம் மிக மிக மகத்துவம் வாய்ந்தது..!
அப்படி என்றால் , இங்கிருக்கும் சித்தர் யாராக இருக்கக்கூடும் ?
சில பல ஐயங்கள். என்னுடைய எண்ண ஓட்டங்கள் .... மறு பதிவில்.. !
No comments:
Post a Comment