அபிராமி அந்தாதி
பாடல் 72
என் குறை தீர,
நின்று ஏத்துகின்றேன் !
இனி யான் பிறக்கின் ,
நின் குறையே அன்றி ,
யார் குறை காண் ?
இருநீள் விசும்பின்
மின் குறை காட்டி ,
மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய் !
தன் குறை தீர,
என்கோன் ,
சடைமேல் வைத்த
தாமரையே !
இருண்ட வானத்தில் தோன்றும்
மின்னலும் நாணும் வண்ணம் ,
மெல்லிய இடையை உடையவளே !
சிவனும், தன் குறை தீர்வதற்காக ,
தன் சடாமுடிமேல் வைத்துக் கொண்ட
உன் திருவடி தாமரைகளை ,
என் குறைகளெல்லாம் தீரும்
வண்ணம் வணங்குகின்றேன் !
இப்பூவுலகில்,
யான் மறுபடியும் பிறந்தால்,
அது உன் குறையே அன்றி,
வேறு யார் குறையும் அல்ல !
தொடரும் ....
அபிராமி அந்தாதி
பாடல் 71
அழகுக்கு ,
ஒருவரும் ஒவ்வாத வல்லி !
அருமறைகள் ,
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் !
பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள,
யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே !
இரங்கேல் !
உனக்கென் குறையே .... ?
பற்றிக் கொள்வதற்கு ,
தன் அழகுக்கு நிகரில்லாதவளும்,
நான்கு வேதங்களையும் அணிகலன்களாக
பாதத்தில் அணிந்து, சிவந்திருக்கும் பாதங்களை
உடையவளும்,
குளிர்ச்சியும், பெருமையும் உடைய பிறையை
தன் திருமுடியில் சூடியிருக்கும் ,
அழகிய , யாமளை எனும் திரு நாமம் கொண்ட .
கொம்பு இருக்க,
நடந்ததை எண்ணி வருந்தி நிற்கும் நெஞ்சமே !
கலங்காதே !
இனி, உனக்கு ஒரு உறையும் இல்லை !
தொடரும் ......
அபிராமி அந்தாதி
பாடல் 70
கண் களிக்கும்படி
கண்டு கொண்டேன் !
கடம்பாடவியில் ,
பண்களிக்கும் குரல் வீணையும்,
கையும் ,
பயோரமும் ,
மண் களிக்கும்
பச்சை வண்ணமுமாகி ,
மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய
எம்பெருமாட்டி தன்
பேரழகே !
கடம்ப வனத்தில்,
பாடலும் மகிழும் வண்ணம் குரலெழுப்பும் வீணையும் ,
அதனை ஏந்திய கைகளும்,
திருத்தன பாரமும் ,
இப்பூவுலகம் மகிழும் பச்சை நிறமும் கொண்டு ,
மதங்கர் எனும் யாழ் பாணர் குலப் பெண்களில்
ஒருத்தியாக தோன்றிய எம்பெருமாட்டியை ,
கண்குளிர தரிசனம் செய்தேன் !
தொடரும் ........
அபிராமி அந்தாதி
பாடல் 69
தனம் தரும் ,
கல்வி தரும்,
ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் ,
நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்,
பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே !
மணக்கும் பூக்களைச் சூடிய
அபிராமியின் கடைக்கண் பார்வை,
அவள் அடியவர்களுக்கு பெருமையைத் தரும்,
நிலையான செல்வத்தைத் தரும்,
அழியாத கல்வியைத் தரும்,
ஒருநாளும் தளர்ச்சி அடையாத
உறுதியான மன வலிமையத் தரும் ,
தெய்வீக அழைத் தரும் ,
நெஞ்சில் வஞ்சமில்லாத
உறவினரையும், நண்பரையும் தரும் ,
மற்றுமுள்ள நல்லன எல்லாவற்றையும் தரும்,
தொடரும் .....
அபிராமி அந்தாதி
பாடல் 68
பாரும்,
புனலும்,
கனலும்,
வெங்காலும் ,
படர் விசும்பும்.
ஊரும்,
முருகு,
சுவை,
ஒளி,
ஊறொலி
ஒன்றுபடச் சேரும் ,
தலைவி சிவகாம சுந்தரி
சீரடிக்கே !
சாரும் தவமுடையார்
படையாத
தனமில்லையே !
ஐம்பெரும் பூதங்கள் , தங்களின் இயற்கை குணங்கள்
அனைத்தையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு
தஞ்சமடைவது , தலைவி சிவகாம சுந்தரியின்
சிறப்புமிக்க திருவடிகளை !
இத்தகைய சிறப்பு மிக்க அபிராம வல்லியின்
பாதங்களைச் சேரும், அவளருள் பெற்ற
அடியார்கள் , தனக்கே உரியதென்று
பெறாத செல்வம் ஒன்றுமே இல்லை .
தொடரும் .....
அபிராமி அந்தாதி
பாடல் 67
தோத்திரம் செய்து ,
தொழுது,
மின்போலும் நின் தோற்றம்
ஒருமாத்திரைப் போதும்
மனத்தில் வையாதவர் ,
வண்மை,
குலம் ,
கோத்திரம் ,
கல்வி,
குணம் குன்றி ,
நாளும் குடிகள் தோறும்
பாத்திரம் கொண்டு
பலிக்கு உழலா நிற்பர்,
பாரெங்குமே !
தேவி !
உன்னைத் தொழாமலும்,
துதிக்காமலும்,
மின்னலைப் போன்று
சுடர் விடும் உன் தோற்றத்தை,
ஒரு மாத்திரைப் பொழுதாவது
( ஒரு கண நேரமாவது )
நினைக்காமல் இருப்பவர்கள் ,
இவ்வுலகத்தில் எங்கிருப்பினும்,
பெருமை,
குடிப் பிறப்பு,
கோத்திரம்,
கல்வி,
நற்குணம் ஆகியவற்றில் குறைபெற்று,
வீடுகள் தோறும் பாத்திரமெடுத்து
பிச்சையெடுக்கும் கதிக்கு ஆளாவர் !
தொடரும்......
அபிராமி அந்தாதி
பாடல் 66
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் ,
நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது
பற்றொன்று இலேன் ,
பசும் பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் !
வினையேன் தொகுத்த
சொல் அவமாயினும்,
நின் திரு நாமங்கள்
தோத்திரமே !
தங்க நிறம் கொண்ட மேரு மலையை
வில்லாகக் கொண்ட சிவபெருமானுடன்
வீற்றிருக்கும், அபிராம வல்லியே !
சிற்றறிவினை உடைய நான்,
உன் பெருமை வாய்ந்த செயல்கள்
ஒன்றையும் அறியேன்.
சிவந்த தளிரைப் போன்ற
நின் திருவடியைத்தவிர
வேறொன்றின் மேல் பற்றில்லை, எனக்கு .
உன்மேல், அந்தாதியாக தொகுத்த
பல சொற்களுக்கு அர்த்தமில்லாது போனாலும்,
இடையிடையே கூறிய
உன் திருப்பெயர்களெல்லம்
உன்னைத் தொழுது போற்றும்,
தோத்திரங்களே !
தொடரும் .....
அபிராமி அந்தாதி
பாடல் 65
ககனமும், வானமும் ,
புவனமும் காண ,
விற் காமன் அங்கம்
முன் தகனம் செய்த
தவம் பெருமாற்கு
தடக்கையும், செம்முகமும்
முந்நான்கு , இரு மூன்றெனத்
தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ ?
வல்லி !
நீ செய்த வல்லபமே !
இந்த பூவுலகும், வானுலகும், மற்றுமுள்ள
அண்டங்களும் அறியும்வண்ணம்,
காமனை தகனம் செய்த ,
சிறந்த தவ யோகியான சிவ பெருமானுக்கு,
ஓராறு முகமும், ஈராறு கரங்களையும்
கொண்ட சிறந்த ஞானியுமான
குமரனை உண்டாக்கியது,
உன் செயல் அல்லவா ?
அபிராம வல்லியே !
தொடரும் .....
அபிராமி அந்தாதி
பாடல் 64
வீணே ,
பலிகவர் தெய்வங்கள் பால் சென்று ,
மிக்க அன்பு பூணேன் !
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் !
நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் !
ஒருபொழுதும் திருமேனிப் பிரகாசம்
அன்றிக் காணேன்,
இருநிலமும்,
திசை நான்கும் ,
ககனமுமே !
வீணாக உயிரைக் கொல்லும் ,
சிறு தெய்வங்களிடம் பக்தி கொள்ளேன் !
உன்னிடம் மட்டுமே பக்தி கொள்வேன் !
ஒரு காலத்திலும் உன்னையன்றி ,
வேறொருவரைத் துதியேன் !
இப்பூமியிலும்,
நான்கு திசைகளிலும் ,
ஆகாயத்திலுமாய்
எங்கும் நிறைந்திருக்கும்
நின் திருமேனியின் திரு ஒளியைத் தவிர
வேறொன்றையும் காணேன் !
தொடரும் .....
அபிராமி அந்தாதி
பாடல் 63
தேறும்படி சில ஏதுவும் காட்டி
முன்செல் கதிக்கு கூறும் பொருள்
குன்றில் கொட்டும் தறி குறிக்கும் !
சமயம் ஆறும்
தலைவி இவளாய் இருப்பது
அறிந்திருந்தும்,
வேறு சமயம் உண்டென்று
கொண்டாடிய, வீணருக்கே !
பெரியோர்களால் போற்றப்பட்ட
ஆறு சமயங்களுக்கும்,
தெய்வமாய் இருப்பது
அபிராமியே என்று அறிந்திருந்தும்,
வேறு சமயங்களும் உண்டென்று கருதி ,
அதனைக் கொண்டாடும் வீணர்களுக்கு,
அவர்கள் நற்கதி அடையும் பொருட்டு,
சில பிரமாணங்களைக் காட்டி
அறிவிரை கூறியது,
குன்றினை தகர்ப்பது போன்றது !
தொடரும் ......
அபிராமி அந்தாதி
பாடல் 62
தங்கச் சிலை கொண்டு
தானவர் முப்புரம் சாய்த்து ,
மத வெங்கண்
கரியுரி போர்த்த செஞ்சேவகன்
மெய் அடைய
கொங்கைக் குரும்பைக்
குறியிட்ட நாயகி !
கோ கனகச்
செங்கைக் கரும்பும்,
மலரும் ,
எப்போதும் என் சிந்தையதே !
தங்க நிறம் கொண்ட மேருமலையை
வில்லாகக் கொண்டு ,
அசுரர்களின் திரிபுரத்தை அழித்தவனும் ,
சிவந்த கண்களையுடைய மத யானையின்
தோலைப் போர்த்தியவனுமாகிய
சிவனின் உடலில்,
உன் அங்கங்களின் அடையாளத்தை
பதித்திட்ட நாயகியே !
தாமரை மலரைப் போன்ற
சிவந்த உன் கைகளில் உள்ள
கரும்பு வில்லும்,
மலரம்புகளும்
எப்போதும் என் மனதில் நிற்கும் !
தொடரும் .....
அபிராமி அந்தாதி
பாடல் 61
நாயேனையும்,
இங்கு ஒரு பொருளாக
நயந்து வந்து,
நீயே,
நினைவின்றி ஆண்டு கொண்டாய் !
நின்னை,
உள்ள வண்ணம்
பேயேன் அறியும்
அறிவு தந்தாய் !
என்ன பேறு பெற்றேன் !
தாயே !
மலைமகளே !
செங்கண் மால்
திருத் தங்கச்சியே !!
உலகத்து உயிர்களுக்கெல்லாம் அன்னையே !
மலை மகளே !!
அழகிய சிவந்த கண்களை உடைய திருமாலின் தங்கையே !!
நாயைப் போன்ற என்னையும்,
உன் திருவருளுக்கு உரியவனாகக் கருதி,
எனக்குத் தெரியாமலேயே , என்னை ஆட்கொண்டாய் !
உன்னை, நீ உள்ள வண்ணம் , இந்தப் பேயேனும் அறிய, அறிவு தந்தாய் !
அடியேன் , எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன், தாயே !!!
தொடரும் ......