Friday, 17 April 2020

சிவ புராணம் ( 10 )





10. கணேசன் திரு அவதாரம் 
ஒரு சமயம் பார்வதி தன் தோழியர் ஜயை, விஜயை இருவருடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது விஜயை தேவியைப் பார்த்து, அம்மா, தங்களுக்கென ஒரு வேலையாள் தனியாக இருக்க வேண்டும். ஈசனுக்கு எத்தனையோ கணங்கள் இருக்கின்றன. அவர்களில் சிலரே தங்களுக்கும் சேவை செய்ய நியமிக்கப்பட்டிருக் கின்றனர்; அவர்கள் ஈசனின் கட்டளைக்கு அடிபணியக் கூடியவர்கள் அன்றோ? நம்  கட்டளையை மட்டும் ஏற்றுப் பணி செய்யக் கூடிய ஒருவன் நமக்கென இருக்க வேண்டாமா?" என்றாள்.
அந்தச் சமயத்தில் தேவி தோழியின் வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் விரைவிலேயே ஏற்பட்டது.
அன்றையதினம் தேவி, அந்தப்புரத்தில் நீராடிக் கொண் டிருந்தாள். அச்சமயம் பார்வதியைக் காணவேண்டுமென்று வந்த ஈசனை வாசலிலிருந்த நந்திதேவர், தேவி நீராடுகிறார், தற்போது செல்ல வேண்டாம்" என்று சொல்லியும் கேளாமல், உள்ளே சென்றார். எதிர்பாராத நிலையில் நாதனைச் சந்திக்க நேர்ந்ததால், தேவி பெரிதும் பரபரப்பு அடைந்து விட்டாள். அதற்கேற்ப அவள் தோழியரும், அம்மா, இம்மாதிரி நேரக் கூடாதே என்றுதான் அன்று நாங்கள் சொன்னது. நம்முடைய ஆளாக இருந்திருப்பானாகில் ஈசனை உள்ளே விட்டிருக்க மாட்டான் அன்றோ. நந்திதேவர் எவ்வாறு கைலாசநாதனைத் தடுத்து நிறுத்துவார்?" என்று அவள் குழம்பிய உள்ளத்துக்குத் தூபமிட்டனர்.
அவர்கள் சொல்வதுபோல் பார்வதிக்கும் தன் கட்டுப்பாட்டில் இயங்கும் பணியாள் ஒருவன் தேவை என்பது விளங்கியது. கையிலே ஜலத்தை எடுத்துத் தன் உடலில் தேய்த்து உருட்டி எடுத்தாள். சிவபெருமானைத் தியானித்து அவரைப் போலவே பிரணவ ஸ்வரூபியான ஒரு புத்திரனைத் தோற்றுவித்தாள். மங்கள ரூபத்தோடு தேஜோமயமாய் விளங்கும் அவனுக்குக் கணண் என்று பெயர் கொடுத்து, குமாரா, நீ என்னால் தோற்றுவிக்கப்பட்ட பிரிய மைந்தன். உன் சேவை எனக்கு இருக்க வேண்டுமென்றே உன்னைத் தோற்றுவித்தேன். என் அனுமதியின்றி நீ எவரையும் அந்தப்புரத்தில் நுழைய விடாது காத்து வரவேண்டும்" என்றாள்.
கணனும் தேவியை வணங்கி, அம்மா, தாங்கள் இட்ட பணியை மகிழ்ச்சியோடு ஏற்று, அவ்வாறே நடந்து வருவேன்" என்றான்.
பார்வதி பெருமகிழ்ச்சியோடு புத்திரனை அணைத்து முத்தமிட்டு, அவன் வேலைக்கு உதவியாகத் தண்டம் ஒன்றும் கொடுத்தாள். அன்றிலிருந்து கணன், தாயின் அந்தப்புரத்தைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்தான்.
சுவாமி, தேவியார் நீராடச் சென்றிருக்கிறார்கள். இப்போது உள்ளே போகக் கூடாது" என்றான்.
என்றைக்குமில்லாது அன்றையத் தினம் தம்மை யாரோ  அன்னியன் தடுத்து நிறுத்தியதைக் கண்டதும் ஈசன் ஆச்சரியமுற்றார்.
அடே! நான் யார் தெரியுமா? சங்கரன்!" என்றார் சிவன்.
அவனோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
இப்போது யாரும் உள்ளே செல்ல முடியாது" என்றான் உறுதியோடு.
அடே , நீ யார் என்னைத் தடுத்து நிறுத்த? உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? உன்னை வேலைக்கு அமர்த்தியிருக்கிறாளே அவளுடைய கணவன் நான்" என்று சொன்ன சிவன், அவனை ஒதுக்கிவிட்டு உள்ளே செல்ல முற்பட்டார்.
சிவனானாலும் அனுமதிக்க மாட்டேன்" என்று தன் தண்டத்தினால் சிவனை தடுத்தார், கணன்.
இப்போது யாரையும் உள்ளேவிடக் கூடாது என்பது தேவியாரின் கண்டிப்பான உத்தரவு. சற்றுப் பொறுத்தால் நீராடித் திரும்பி விடுவார்கள்" என்றான்.
சிவபெருமானுக்குக் கோபம் வந்துவிட்டது. தம்மோடு வந்திருந்த கணங்களைப் பார்த்தார்.
இந்த மூர்க்கனுக்கு நாம் யாரென்று தெரியவில்லை. நம்மிடமே வாதாடுகின்றான். இவனுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பியுங்கள்" என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று விட்டார்.
சிவகணங்கள் கையில் தண்டத்தோடு நிற்கும் கணனைப் பார்த்து நையாண்டி செய்தனர். அடே, நாங்கள் யார் தெரியுமா? சிவகணங்கள். எங்கள் பராக்கிரமம் தெரியாது விளையாடுகின்றாய் !" என்றனர்.
அதிகப் பேச்சு வேண்டாம். நீராடித் திரும்பும் வரை யாரையும் உள்ளே விடவேண்டாம் என்பது தேவியின் உத்தரவு. நானோ காவல்காரன். உத்தரவுப்படி நடக்கக் கடமைப்பட்டவன். இங்கே யாரும் நிற்காதீர்கள். ஓடிப் போய் விடுங்கள்" என்றான்.
அவன் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் ஏளனமாகச் சிரித்தனர்.
அற்பப் பதரே! உனக்கு அத்தனை ஆணவமா? சரியான பாடம் கற்பிக்காது நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம்" என்று கொக்கரித்தபடி அவனை நெருங்கி நாற்புறமும் தாக்கத் தொடங்கினர்.
தேவியால் தமக்களிக்கப்பட்ட தண்டத்தை கைகளில் மாற்றி மாற்றிச் சுழற்றிக் கொண்டு கணன் சிவகணங்களிடையே புகுந்து அவர்களை அடித்து விரட்டினான். அவன் தாக்குதலைச் சமாளிக்க முடியாது அவர்கள் திரும்பி ஈசனை அடைந்தனர்.
பிரபோ, பார்ப்பதற்கு அவன் சாதாரணமாகத் தோன்றினாலும் மிகுந்த பராக்கிரமம் உடையவனாக  இருக்கிறான். ஒருவனாகவே இருந்து கொண்டு எங்கள் அனைவரையும் பக்கத்தில் நெருங்க விடாது சுழன்று சுழன்று விரட்டி அடித்து விட்டான்" என்றனர்.
அவர்கள் வார்த்தையைக் கேட்ட நந்திதேவர் அவர்கள் மீது சீறி விழுந்தார்.
உங்களுக்கு வெட்கமாக இல்லை? அவன் அடித்து விரட்டினான் என்று சொல்லிக் கொண்டு திரும்பி வந்திருக்கிறீர்களே!" என்று கடிந்து பேசியவராய் அவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
நந்தி தேவர் தலைமையில் சிவகணங்கள் மறுபடியும் சண்டைக்கு வருவதைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டான் கணன். அவர்களை எதிர்ப்பது எங்ஙனம்? தன்னைத் தோற்றுவித்த தேவியை மனத்தில் தியானித்தான்.
தேவி! தங்கள் கட்டளைப்படி நான் என் பணியை நிறைவேற்றி வருகிறேன். சிவகணங்கள் அத்துமீறி என்னோடு சண்டைக்கு வருகிறார்கள். தாங்கள் தான் அவர்களை எதிர்க்கும் சக்தியை எனக்கு அளிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.
கணனை நெருங்கிய சிவகணங்கள் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே அவனை அடிக்கத் தொடங்கினர். கணன் தேவியை மறுபடியும் தியானித்துப் பிரார்த்தித்தபடி தண்டத்தை சுழற்றி அவர்களைத் தாக்கினான். அவனால் கொடுக்கப்படும் அடிகள் ஒவ்வொன்றும் கணங்களைக் கிறுகிறுத்து விழச் செய்தன. அவன் உடலில் விழும் ஒவ்வொரு அடிக்கும் பதிலாக பத்துப் பதினைந்து கணங்கள் தரையில் சாய்ந்தன.
நந்திதேவர் பிரமித்து விட்டார். கணன் சாதாரணமானவன் அல்லன் என்பதை உணர்ந்தார். அவன் ஒருவனாகவே அத்தனை பேரையும் எதிர்ப்பதைக் கண்ட போது அவனை வெல்வது சுலபமான காரியம் அல்ல என்பதை அறிந்தார். விரைவில் சிவகணங்கள் அனைவரையும் அடித்து வீழ்த்தி விடுவான் என்று தோன்றியது. சிவபெருமானிடம் திரும்பிச் சென்று அங்குள்ள நிலவரத்தைத் தெரிவித்தார்.
இதற்குள் செய்தி தேவலோகமெங்கும் பரவிவிட்டது. யாரோ ஒருவன் சிவகணங்களை எதிர்த்துத் தாக்கி விரட்டி அடிப்பதாக கேள்விப்பட்டு விஷ்ணு, பிரம்மன் முதலானோர் கைலாசத்துக்கு ஓடிவந்தனர். அந்தச் சமயத்தில்தான் நந்தி தேவர் அங்கே வந்து கணனின் பிரதாபத்தை விவரித்தார். 
சிவனுக்கு அளவுக்கதிகமாகக் கோபம் வந்து விட்டது. தாமே நேரில் வருவதாகக் கூறி புறப்பட்டார். அவரோடு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரும் புறப்பட்டனர்.
அந்தப்புர வாயிலில் ஏதோ குழப்பம் நிலவுவதாகத் தோன்றவே, பார்வதி, தோழியர் இருவரையும் அழைத்து என்ன விஷயமென்று பார்த்து வருமாறு அனுப்பினாள். அவர்கள் இருவரும் வாயிலுக்கு வந்து பார்த்துவிட்டுத் திரும்பினர்.
தேவி, நம் கணன் தனக்கிடப்பட்ட வேலையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறான். ஈசன் வந்த போது தாங்கள் நீராடச் சென்றிருப்பதாகவும், சிறிது பொறுத்து வருமாறு தெரிவித்தானாம். அவருக்குக் கோபம் வந்து விட்டதாம். தம்மோடு  வந்திருந்த சிவகணங்களை அழைத்து அவனுக்குத் தாம் யார் என்பதை விளக்குமாறு சொல்லி விட்டுப் போய்விட்டாராம். சிவகணங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு அடிக்க ஆரம்பிக்கவே, தாங்கள் அளித்த தண்டத்தைக் கொண்டே அவர்களை விரட்டி அடித்தானாம். அடிபட்டு ஓடிய சிவகணங்கள் நந்திதேவரை அழைத்து வந்தனராம். அவராலும் கணனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது விஷ்ணு, பிரம்மா முதலானோர் சண்டைக்கு வருகிறார்களாம். உடலெங்கும் அடிபட்டிருந்தும் கணன், யார் வேண்டுமானாலும் வரட்டும்!" என்று வீரத்தோடு சவால் விடுகிறான்" என்றனர்.
தோழியர் வார்த்தையைக் கேட்ட பார்வதி பெருமிதம் அடைந்தாள். அதே சமயம் சிவகணங்களின் அடாத செய்கை பற்றிக் கோபமும் உண்டாயிற்று. மனத்தால் இரண்டு சக்திகளைத் தோற்றுவித்தாள்.
வாயிலில் கணன் சிவகணங்களை எதிர்த்து நிற்கிறான். நீங்கள் இருவரும் இப்போதே சென்று அவனுக்கு ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றுங்கள்" என்று கட்டளையிட்டாள்.
அப்படியே, தேவி!" என்று இரு சக்திகளும் பார்வதியைப் பணிந்து புறப்பட்டனர்.
விஷ்ணு, பிரம்மன் முதலானோரோடு சிவபெருமான் புறப்பட்டதும் ஆறுமுகனும் தந்தையை நெருங்கிப் பணிந்தான்
தந்தையே! நான் சென்று வருகிறேன்" என்று அனுமதி கேட்டான், ஆறுமுகன்.
சிவகணங்களை விரட்டி விட்ட மமதையில் நிற்கும் அந்த அற்பனுக்குத் தகுந்த பாடம் கற்பித்து வா, குமரா!" என்று ஈசன் ஆசீர்வதித்தார்.
மயூர வாகனத்திலேறி வந்த சுப்பிரமணியனைக் கண்டதும் கணன் சற்று தயங்கினான். தேவியின் மைந்தனல்லவா வந்திருப்பது!
அதே சமயம் கணனுக்கு உதவியாகப் பார்வதி தோற்றுவித்த சக்திகள் இருவரும் பக்கத்தில் வந்து நின்றனர். இமைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரும் பூதாகாரமான உடலைக் பெற்று ஹுங்காரம் செய்தனர். அவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே சிவகணங்கள் நடுநடுங்கினர். கணன் ஒருவனாக இருக்கும் போதே அவனை வெற்றி காண முடியவில்லை. அப்படியிருக்க, அவனுக்கு உதவியாக பயங்கர சக்திகள்  இருவர் வந்திருக்கின்றனரே !
மனம் குழம்பும் சிவகணங்களைத் தைரிய வார்த்தைகள் சொல்லித் தேற்றியவாறு ஆறுமுகன் அஸ்திரங்களைப் பொழிந்தான். அவற்றுள் ஒன்று கூட கணனை நெருங்கவில்லை. அவனை நெருங்குவதற்கு முன்னரே  சக்திகள் இருவரும் பாய்ந்து அந்த அஸ்திரங்களை விழுங்கினர். அந்த வேடிக்கையைக் கண்டு சிரித்துக் கொண்டு நின்றான் கணன்.
ஆறுமுகனுக்கு வியப்புத் தாங்கவில்லை. எப்படியெல்லா மோ அஸ்திரங்களை மாற்றி மாற்றி எய்தார். ஒன்றுகூடக் கணனை நெருங்கவில்லை. கை களைத்து விட்டது.
தூரத்தே நின்று கொண்டு அவர்கள் யுத்தம் செய்வதைக் கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணு ஈசனிடம், பரமேச்வரா! அவனை அற்பமாக எண்ணக்கூடாது. மாயாஜாலத்தில் சிறந்தவனாக இருப்பான் போல் தோன்றுகிறது. இரு சக்திகளைத் தோற்றுவித்து நாம் எய்யும் பாணங்களை விழுங்கச் செய்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனை நாம் வஞ்சகமாகத்தான் வீழ்த்த வேண்டும். நான் அவனோடு போரிட்டு அவன் கவனம் பூராவும் என்னிடம் இருக்குமாறு செய்து கொள்ளுகிறேன். தாங்கள் அந்தச் சமயத்தில் அவனை வீழ்த்தி விடலாம்" என்றார்.
ஈசன் அதற்குச் சம்மதிக்கவே, விஷ்ணு சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு ஆறுமுகனுக்கு உதவியாக யுத்தத்தில் இறங்கினார். விரைவிலேயே சக்திகள் இருவரும் விஷ்ணுவின் அஸ்திரங்களுக்குப் பலியாயினர். தன்னந்தனியாகத் தண்டத்தைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கும் கணனைக் கண்டதும் ஆக்ரோஷமாகத் தமது சக்கராயுதத்தை ஏவினார்.
தீ ஜ்வாலையுடன் உக்கிரமாக நெருங்கி வரும் சக்கரத்தைக் கண்டதும் கணன், தேவியை மனத்தில் தியானித்தான்.
தாயே ! நீதான் இத்தருணத்தில் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று பிரார்த்தித்தபடி தன் கையிலிருந்த தண்டத்தை ஓங்கி வீசினான்.
கணன் வீசிய தண்டம் சீறிவரும்  சக்கரத்தை  வழியிலேயே தடுத்துப் பொடி பொடியாக்கி விட்டது.
விஷ்ணுவுக்கு அபரிமிதமாகக் கோபம் வந்து விட்டது. அடுத்த கணமே மற்றொரு சக்கரத்தை ஏந்திக்கொண்டு கணனை நெருங்கினார். அதற்குள் சிவகணங்கள் அனைவருமாக சூழ்ந்து கணனை தாக்க, சிவபெருமான் கணன் மீது தனது திரிசூலத்தை வீசி வீழ்த்தினார். கணனது தலை துண்டிக்கப்பட்டது.
எங்கும் ஒரே ஆரவாரம், தங்களுக்கு இதுவரை எதிர்ப்புக் காட்டி வந்தவன் வீழ்ந்து விட்டான் என்றதும் சிவகணங்கள் மகிழ்ச்சியால் குதித்தனர். தேவர்கள் சிவகோஷம் எழுப்பினர்.
வெளியே கேட்கும் ஆரவாரம் அந்தப்புரத்தின் உள்ளே இருந்த தோழிகளைத் திடுக்கிட வைத்து. வாசலுக்கு ஒடி வந்தனர். கணன் உயிரிழந்து கிடப்பதையும் சிவகணங்கள் வெற்றிக் களிப்பில் இருப்பதையும் கண்டு பரபரப்போடு உள்ளே ஓடினர்.
அம்மா ! நம் கணன் இறந்து விட்டானம்மா! தேவர்கள் அவனை அழித்து விட்டனர்!" என்று நெஞ்சம் பதைபதைக்கக் கூறினார்கள்.
என்ன?... கணன் இறந்து விட்டானா?..." என்று திடுக்கிட்டுக் கேட்டாள், பார்வதி.
ஆம்... தேவி!... கணன் வஞ்சகத்தால் கொல்லப்பட்டான்" என்றொரு குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினர் மூவரும்.
அங்கே நாரதர் நின்று கொண்டிருந்தார்.
பிரம்மபுத்திரா, என்ன சொன்னாய்?..." என்று கேட்டாள் பார்வதி.
ஆம் தேவி! கணனைத் தேவர்கள் வஞ்சகமாகக் கொன்று விட்டனர். விஷ்ணு தாங்கள் தோற்றுவித்த சக்திகளை அழித்து விட்டுக் கணனுடன் போருக்குச் சென்றார். கணனுடைய முழுக்கவனமும் விஷ்ணுவிடம் இருக்கும்போது கைலாசநாதன் சூலத்தை ஏவி அவனை அடித்து வீழ்த்தி விட்டார்."
நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட பார்வதி ரௌத்திரா காரமாகி விட்டாள்.
வஞ்சகத்தால் என் குமாரனை அழித்த தேவர்களை என்ன செய்கிறேன் பார்!" என்று சீறினாள்.
தேவியின் கோபத்திலிருந்து ஆயிரக்கணக்கான சக்திகள் தோன்றினர்.
இப்போதே சென்று தேவர்களை அழித்து நிர்மூலமாக் குங்கள்!" என்று உத்தரவிட்டாள்.
தேவியின் கோபத்தைக் கிளறிவிட்டு விட்டு நாரதர் தேவர்களிடம் வந்தார். அவர்களோ நின்று பேசக்கூட நேரமின்றி ஓடினர். தேவியால் அனுப்பப்பட்ட சக்திகள், தேவர்களிடையே புகுந்து அவர்களை அடித்தும் உதைத்தும் துரத்தின. சக்திகளின் பிடிகளில் சிக்கிக்கொண்ட தேவர்களும், சிவ கணங்களும் கொசுவைப் போன்று நசுக்கி எறியப்பட்டனர்.
சற்று முன்பு வரை மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியிருந்த அந்த இடத்தில் இப்போது கூச்சலும் குழப்பமுமே நிறைந்திருந்தன. சக்திகளின் பிடியில் அகப்படாத சிவகணங்களும் தேவர்களும் ஓடிவந்து சிவபெருமானைச் சரண் அடைந்தனர்.
பிரபோ, சர்வேசா ! தேவி பெரும் கோபத்தில் இருக்கிறாள். கணன் இறந்த செய்தி கேட்டவுடன், அவர்களின் கோபம் எல்லை மீறிப்போய் விட்டது..." என்றார் நாரதர்.
நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் மேலும் நடுங்கினர்.
கைலாசபதே ! எங்களைக் காப்பாற்ற வேண்டும் " என்று அனைவரும் ஒரு முகமாகச் சிவனை வேண்டினர். ஈசனும் பிரம்மனை அழைத்துத் தேவியைச் சமாதானம் செய்யுமாறு அனுப்பினார்.
விஷ்ணு, இந்திரன் மற்றும் முக்கியமான தேவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு பிரம்மதேவன் தேவியிடம் வந்தார். பலவித ஸ்தோத்திரங்களால் தேவியைப் போற்றிப் புகழ்ந்து வணங்கினர்.
தேவி, சாந்தம் கொண்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும். தேவர்களும் சிவகணங்களும் தங்களால் அனுப்பப்பட்ட சக்திகளால் அழிக்கப் படுகின்றனர். அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்" என்று வேண்டினர்.
தேவியோ அவர்கள் கோரிக்கைக்கு இணங்க மறுத்து விட்டாள்.
இப்போது எல்லோரும் ஓடி வருகிறீர்களே, யுத்தம் நடப்பதற்கு முன்பு நீங்கள் தலையிட்டு அதைத் தவிர்த்திருக்கலாமே. என் குமாரனை வஞ்சகத்தால் அழித்து விட்டு, இப்போது சமரசத்துக்கு வருவது எவ்விதம் ஏற்கக் கூடியதாகும் ? என் குமாரனை உயிர்ப்பிக்க வழி  காணுங்கள். அதன் பிறகே மற்றவை பற்றி யோசிக்கலாம்" என்று உறுதியாகச் சொல்லி விட்டாள்.
அதன் பிறகு பிரம்மதேவன், தேவர்களுடன் ஈசனிடமே திரும்பி வந்தார்.
பிரபோ! குமாரன் உயிர் பிழைத்தால்தான் தேவி சாந்தமடைவார்கள் போல் தோன்றுகிறது. தங்களையே எதிர்த்த குற்றத்தை மன்னித்துக் கணனை எழுப்பித் தரவேண்டும். கணனை உயிருடன் கண்டால் தேவியின் கோபம் பஞ்சாக பறந்து விடும்" என்றார் பிரம்மதேவன்.
பிரம்மதேவனின் கோரிக்கையை விஷ்ணு மற்றும் தேவர்களும் ஆமோதித்தனர். குமாரன் பிழைத்து எழுந்தால் தான் தேவர்கள் அழிவிலிருந்து மீள முடியும் என்ற நிலைமை ஆகி விட்டது.
அனைவருடைய வேண்டுகோளை ஏற்று ஈசன், வடக்கு திசையில் காணப்படும் முதல் விலங்கின் தலையைக் கொய்து வரும்படி பணித்தார். அவ்விதமே கொண்டு வரப்பட்ட யானை ஒன்றின் சிரசை கணனுக்குப் பொருத்தினர்.
தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதுபோல் தரையிலிருந்து எழுந்திருந்த கணனை ஓடிப் போய் இரு கைளாலும் வாரித் தூக்கிக் கொண்டார் பிரம்மதேவர்.
மற்றும் சக்திகளால் உயிர் இழந்த தேவர்களும் சிவகணங்களும் உயிர்பெற்று எழும்படியும் செய்தார்.
குமாரா! உன் பராக்கிரமம் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். உன்னைக் காண வேண்டுமென்று தேவி துடித்துக் கொண்டிருக்கிறாள். வா, இப்போதே நாம் அங்குச் சென்று உன் அன்னையைத் தரிசிப்போம்" என்று சொல்லி அவனைப் பார்வதியிடம் அழைத்துச் சென்றார். அவர் பின்னால் தேவர்களும் தேவியின் புகழ் பாடிச் சென்றனர்.
ஈசனால் கொல்லப்பட்ட குமாரன் உயிர் பெற்று வருவதைக் கண்டதும் பார்வதியின் கோபம் மறைந்துவிட்டது.
குமாரா!..." என்று ஆவலோடு ஓடி வந்து அவனைத் தூக்கி அணைத்து முத்தமிட்டாள்.
தேவி, தங்கள் கருணை பொழியும் முகத்தைக் காணும் போது, நாங்கள் விவரிக்க இயலாத ஆனந்தம் அடைகிறோம்!" என்று போற்றினர் தேவர்கள்.
குமாரா ! வெளியே உன் தந்தை காத்திருக்கிறார். அவரைத் தரிசித்து அவர் அனுக்கிரகத்தைப் பெறுவோம்!" என்று சொல்லி, பார்வதி குமாரனை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
தேவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். விரோதம் நீங்கி பாசம் பிணைக்கப் போகும் அந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காண சிவ நாமங்களைப் பூஜித்துக் கொண்டே, தேவியோடு புறப்பட்டனர்.
சிவனை நெருங்கிய பார்வதி, குமாரனோடு அவரை மும்முறை வலம் வந்து வணங்கினாள்.
பிரபோ! சந்தர்ப்ப வசத்தால் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அதைத் தாங்கள் மறந்துவிட வேண்டும். இதோ தங்கள் குமாரன் கணன். எங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று பணிவோடு பிரார்த்தித்தாள்.
கணன் ஈசனை மீண்டும் வணங்கி தந்தையே! என் செய்கையை மன்னிக்கும்படி பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்" என்றான்.
சிவபெருமானின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. மகனை வாரி எடுத்துத் தம் மடி மீது அமர்த்திக் கொண்டார்.
குமாரா ! உன் பராக்கிரமம் வெளிப்படவே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது" என்று சொன்ன சங்கரன், தேவர்களைப் பார்த்து, இவன் என் குமாரன்!" என்றார்.
தேவர்களின் ஆரவாரம் விண்ணை எட்டியது. அந்த ஆரவாரம் ஓய்ந்ததும் ஈசன் மீண்டும் தேவர்களைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்.
பிரபோ! சந்தர்ப்ப வசத்தால் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அதைத் தாங்கள் மறந்துவிட வேண்டும். இதோ தங்கள் குமாரன் கணன். எங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று பணிவோடு பிரார்த்தித்தாள்.
கணன் ஈசனை மீண்டும் வணங்கி தந்தையே! என் செய்கையை மன்னிக்கும்படி பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்" என்றான்.
சிவபெருமானின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. மகனை வாரி எடுத்துத் தம் மடி மீது அமர்த்திக் கொண்டார்.
குமாரா ! உன் பராக்கிரமம் வெளிப்படவே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது" என்று சொன்ன சங்கரன், தேவர்களைப் பார்த்து, இவன் என் குமாரன்!" என்றார்.
தேவர்களின் ஆரவாரம் விண்ணை எட்டியது. அந்த ஆரவாரம் ஓய்ந்ததும் ஈசன் மீண்டும் தேவர்களைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்.
குமாரா! உன்னைச் சிவப்பு நிற மலர்களால் பூஜிப்பவர்களுக்குச் சகல காரிய சித்தியும் அளிப்பாயாக!" என்று அனுக்கிரகம் செய்தாள் பார்வதி. பின்னர், தான் தோற்றுவித்த சக்திகள் அனைத்தையும் தன்னோடு ஐக்கியமாகும்படி செய்தாள்.
பாத்திரபத மாதம் சுக்கிலபக்ஷம் சதுர்த்தி அன்று சந்திரோதய சமயத்தில், முதல் ஜாமத்தில், உச்சஸ்த கிரக  பஞ்சக யோகத்தில், பார்வதி கணனைத் தோற்றுவித்ததால் அந்தச் சமயத்தில் அன்று முதல் விரதம் இருந்து, மறு வருஷம் அந்த தினம் வரை பிரதி சதுர்த்திகளிலும் விரதத்தை நியமமாகக் கடைப்பிடித்து, கணபதியைப் பூஜித்து வருபவர்களுக்குச் சகல சௌக்கியங்களும் கிடைக்குமாறு சிவபெருமான் அனுக்கிரகம் செய்தார்.
ஹரி ஓம்!!

Sunday, 12 April 2020

சிவபுராணம் ( 9 )

9. சிவலிங்க பூஜை
ஈசனின் மகிமைகளைக் காணக் காண தேவர்கள் அவர் அருள்கடாக்ஷம் தங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினர். அவரை ஆராதித்துத் தினமும் பூஜிக்க தங்களுக்குச் சிவலிங்கங்கள் கிடைக்கச் செய்யுமாறு விஷ்ணுவைப் பிரார்த்தித்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று, தேவதச்சனை அழைத்து, தேவதச்ச, சகல காரணபூதரான சிவபெருமானின் திரு அருட்பிரசாதம் என்றும் கிடைக்கும்படி செய்ய, அவரைத் தினமும் ஆராதித்து வர, தேவர்களாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆகவே எங்கள் அந்தஸ்துக்கேற்ப ஒவ்வொருவருக்கும் சிவலிங்கங்கள் செய்து அளிக்க வேண்டும்" என்றார்.
தேவதச்சனாகிய விசுவகர்மா அவ்வாறே ஒவ்வொரு தேவருக்கும் அவரவர் அந்தஸ்துக்கேற்ப சிவலிங்கங்கள் செய்து அளித்தான்.
இந்திரனுக்குப் பத்மராகத்தால் செய்யப்பட்ட லிங்கம் கிடைத்தது. குபேரனுக்கு ஸ்வர்ண லிங்கமும், யமனுக்கு கோமேதக லிங்கமும் கொடுக்கப்பட்டன. வருணன் நீல லிங்கத்தைப் பெற்றான். விஷ்ணு இந்திர நீலத்தால் செய்யப்பட்ட அழகிய லிங்கத்தைப் பெற்றார். பிரம்மனும் ஸ்வர்ணத்தால் செய்யப்பட்ட லிங்கத்தைப் பெற்றார். அஷ்ட வசுக்களும் விசுவ தேவர்களும் வெள்ளியாலான லிங்கத்தைப் பெற்றார்கள். வாயுவுக்குப் பித்தளை லிங்கம் கிடைத்தது. பார்த்திவ லிங்கத்தை அசுவினி தேவர்கள் பெற்றார்கள். பார்த்திவ லிங்கம் மணியால் செய்யப்பட்டது. பிராமணர்கள் ஸ்படிக லிங்கத்தைப் பெற்றார்கள். துவாதசாதித்தர்களுக்கும், சோமனுக்கும் முத்து லிங்கத்தை வழங்கினான். இலக்குமி தேவிக்கு தாமிர லிங்கத்தையும், வஜ்ர லிங்கத்தை அக்னிக்கும் வழங்கினான். மயன் சந்தன லிங்கம் பெற்றான். அனந்தன் முதலிய நாகராஜர்கள் பவள லிங்கத்தையும், தைத்தியர்களும், அரக்கர்களும் கோமய லிங்கம் எனப்படும் சாணத்தால் செய்யப்பட்ட லிங்கத்தையும் பெற்றார்கள். பிசாசங்களுக்கு இரும்பு லிங்கம் கிடைத்தது. பார்வதி தேவிக்கு  நவநீத லிங்கத்தைக் கொடுத்தான் விசுவகர்மா. நிருதி, மரத்தால் செய்யப்பட்டதான தாரு லிங்கத்தை அடைந்தான். யோகிகள் பஸ்ம லிங்கத்தைப் பெற்றார்கள். சாயாதேவி மாவினால் செய்யப்பட்ட லிங்கத்தையும், சரசுவதி இரத்தின லிங்கத்தையும், யக்ஷர்கள் தயிரால் செய்யப்பட்ட லிங்கத்தையும் பெற்றனர். இந்த விதமாக விசுவகர்மா தேவர்களுக்கும் மற்றவர்களுக் கும் அவரவர் கௌரவத்துக் கேற்ப லிங்கங்ளைத் தயாரித்து அளித்தான். அவர்களும் அவனால் கொடுக்கப்பட்ட லிங்கங்களைப் பயபக்தியோடு பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். சிலர் அவற்றைத் தலைகளில் தாங்கி ஆனந்தக் கூத்தாடினார்கள். மற்றும் சிலர் அவற்றை மார்போடு சேர்த்து அணைத்துத் தங்கள் உள்ளங்களில் இருத்திக் கொண்டதாக ஆனந்தப்பட்டனர். ‘ஹரஹர சம்போ, சங்கரா’ என்ற கோஷம் எட்டுத் திசைகளிலும் சென்று மோதி எதிரொலித்தது. அவர்களுக்கிடையே தென்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்ட விஷ்ணு, தம்மை மறந்து ஈசனைத் தியானித்தார். மகிழ்ச்சிக்கிடையில் எவரும் வழிதவறி நடந்து சிவபராதிகளாகி விடக்கூடாதென்று அவர்களுக்குச் சிவ பூஜை பற்றி உபதேசிக்க முன்வந்தார் நான்முகன்.
எத்தனையோ பிறவிகளில் மானிடப் பிறவி அரிது. மானிடனாகப் பிறந்தவன், அவனவன் குலத்திற்கேற்ப விதிக்கப்பட்ட கர்மாக்களை விடாது கடைபிடித்து வரவேண்டும். ஆயிரம் கர்மாக்களைச் செய்வதைவிடத் தீர்த்த யாத்திரை விசேஷமாகச் சொல்லப்பட்டது. தவம் மேற்கொள்வது அதனிலும் மேம்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தியானம் இன்னும் மேலானதாகக் குறிக்கப்பட்டுள்ளது. தியானத்தின் மூலம் ஒருவன் பரப்பிரம்மத்தைத் தன் இதயத்திலேயே தரிசிக்கிறான். அவன் பிரம்மஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான்.
பரமானந்தத்தை உண்டு பண்ணுவதும், பரிசுத்தமானதும், அழிவு இல்லாததும், நிஷ்களமானதும் சர்வபரிபூரணமானது மான சிவலிங்கத்தை அவன் தன் மனத்திலேயே காண்கிறான். இது இருவகைப்படும். பாஹ்ய லிங்கம் என்றும், அந்தர லிங்கம் என்றும் அழைப்பர். அதாவது, ஸ்தூலமான கண்ணுக்குப் புலப்படக்கூடியது பாஹ்ய லிங்கம் என்றும், சூக்ஷமமான ஞானக் கண்ணுக்குப் புலப்படக்கூடியது அந்தர லிங்கம் என்றும் பொருள்படும்.
அஞ்ஞானிகளுக்குப் பாஹ்ய லிங்க பூஜை நியமிக்கப் பட்டிருக்கிறது. ஞானிகளுக்கு விக்கிரக ஆராதனை தேவையில்லை. உயரே செல்ல படிகள் அவசியம். அதுபோல ஞானம் இல்லாதவனுக்கு விக்கிரக ஆராதனை அவசியமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. பக்தியோடு பூஜித்தால் தான், ஒருவன் தான் கோரிய பலனை அடைவான். இல்லையேல் அவன் செய்யும் வழிபாடு வியர்த்தமாகும். அது மட்டுமல்ல, சிரத்தையின்றிப் பூஜை செய்வதால் அவன் கீழான நிலையையே அடைவான். 
உருவ வழிபாடு மூலம்  ஒருவன் தான் செய்த பாபங்களை ஒழித்த பின்னரே, ஞானமார்க்கத்தில் பிரவேசிக்க முடியும். யோகீஸ்வரர்களுக்கு ஞானமும், ஞானத்தை அடைய திடமான பக்தியும், பக்திக்குப் பிரதிமா பூஜையும், பூஜைக்கு ஸத்குருவை அடைவதும், ஸத்குருவை அடைய சத்சங்கத்தோடு உறவும் படிப்படியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வழிகளைத் தவறாது பின்பற்றுபவன் நிச்சயம் யோகீஸ்வரனாக விளங்கு வான். அவனுக்கு எப்போதும் பகவத்தரிசனம் கிடைக்கும். பேதமின்றி அவன் எல்லா மனிதர்களிடமும் தன்னையே காண்பான். சிவரூபமாயிருக்கும் அவனைக் கண்ட மாத்திரத்திலேயே சகலவிதமான பாபங்களும் நசிந்துப்போகும்.
கிரஹஸ்தாச்ரமத்தில் இருப்பவனுக்குப் பிரதிமா பூஜையே விதிக்கப்பட்டிருக்கிறது. வேரிலே ஊற்றப்படும் நீர் எப்படி தண்டு வழியாகக் கிளை, இலை மற்றும் இதர இடங்களுக்கும் பரவுகிறதோ அதைப்போல் சகலபுவன காரணரான சிவபெருமானைப்  பூஜிப்பதால் தேவர்கள் அனைவரும் திருப்தி அடைவர். சிவனைப் பூஜை செய்யாது தேவர்களைப் பூஜிப்பதால் யாதும் பயனில்லை. அது மரத்தின் கிளைகள் மீது விடப்படும் நீரைப் போன்று வியர்த்தமாகிவிடும்.
தினமும் சூரியோதயத்துக்கு முன்பு எழுந்திருந்து பகவானைத் துதித்து தேகசுத்தி செய்து கொண்டு பின்னரே நீராடவேண்டும். நீராடுவதுபற்றி சாஸ்திரங்களில் எத்தனையோ விதிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை, சிரார்த்த தினம், கிரகண தினங்கள், மஹாதானம் செய்யும் காலம், உபவாச தினங்கள் ஆகிய நாட்களில் வெந்நீரில் நீராடுவது கூடாதாம். அதே போல எண்ணெய் ஸ்நானத்துக்கும் விதிகள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் ரோகம் உண்டாகும்;  திங்கட்கிழமை தேஜசை அளிக்கும்; செவ்வாய்க் கிழமை ஆயுள் குறைவு படும். புதன்கிழமை லக்ஷ்மி கடாக்ஷம் கிட்டச் செய்யும். வியாழக்கிழமை ஸ்நானம் செய்வதால் தரித்திரம் பீடிக்கும். வெள்ளிக்கிழமை  தேகசுகம் கெடும்.  சனிக்கிழமை அன்று எண்ணெய் ஸ்நானத்தால் சுகம் ஏற்படும். எண்ணெய் ஸ்நானம் செய்யக் கூடாதென்று விதிக்கப்பட்ட நாட்களில் செய்யவேண்டிய அவசியம் நேரிட்டால் அந்தத் தோஷம் நீங்கச் சில பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமையில் புஷ்பமும், செவ்வாய்க்கிழமையில் சிறிது மண்ணும், வியாழக்கிழமை அருகம் புல்லும், வெள்ளிக் கிழமை ஒரு துளி ஜலமும் எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்
நீராடி, புத்தாடை உடுத்தி, நிர்மலமான மனத்தோடு பூஜைக்கு உட்கார வேண்டும். வெறும் தரையில் அமரக் கூடாது. மரத்தால் செய்யப்பட்ட பலகையைப் போட்டு அதன்மீது தூய்மையான வஸ்திரம் விரித்து அமரவேண்டும். மான்தோல் மிகவும் விசேஷமானது. நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது மிகவும் அவசியமானது. திலகமின்றிச் செய்யப்படும் பூஜை எவ்வித பலனையும் அளிக்காது. கங்கையைத் துதித்து மந்திர பூர்வமாக மூன்று தரம் ஆசமனம் செய்து பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் விநாயகரைச் சிவந்த மலர்களால் பூஜித்துப் பின்னர் முறைப்படி நந்திகேச்வரர், துவாரபாலகர்களான மகோதரர்கள், பார்வதி ஆகியோரைப் பூஜித்து, கடைசியில் லிங்கரூபத்தில் சிவபெருமானைப் பூஜிக்கத் தொடங்க வேண்டும்.
முறைப்படி சிவபெருமானை மந்திரங்களைச் சொல்லி லிங்கத்தில் ஆவாகனம் செய்து, அர்க்யம் முதலியன விட்டு, அத்தர், பன்னீர், சந்தனம் முதலிய பரிமள திரவியங்களால் அபிஷேகிக்க வேண்டும். பிறகு சுத்த நீரால் அபிஷேகம் செய்து திலகம் இட்டு, மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தாமரை, கொன்றை, ஆத்தி, மல்லிகை, ரோஜா, வில்வம், தர்ப்பை, அறுகு, கருவூமத்தை, துளசி ஆகியவற்றால் மகேச்வரனை அர்ச்சிக்க வேண்டும்.
அர்ச்சனை முடிந்ததும் தூப, தீப, நைவேத்தியங்கள் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு பகவானுக்குக் கற்பூர ஆரத்தி காட்டி உங்கள் மனோபீஷ்டத்தை நிறைவேற்றும்படி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். பின்னர் பஞ்சாக்ஷர ஜபம் செய்து சிவ ஸ்தோத்திரங்களைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்து பூஜையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தாமரை மலர், வில்வம், சதபத்திரம் ஆகியவற்றால் அர்ச்சிப்பவன் பெரும் தனத்தை அடைவான். பரிசுத்தமான பத்துகோடி மலர்களால் சிவனைப் பூஜிப்பவன், ராஜபோகத்தை அடைவான். ஐம்பதினாயிரம் மலர்களால் பூஜிப்பவன், ரோக நிவர்த்தி அடைவான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கப் பன்னிராயிரத்து ஐந்நூறு மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். சத்துரு பயம் நீங்கப் பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கோடி மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் ஞானம் உண்டாகும். ஐந்து கோடி மலர்களால் அர்ச்சிப்பவனுக்கு, முக்தி கிடைக்கும். அரைக் கோடி மலர்களால் அர்ச்சித்து, மிருத்யுஞ்சய மந்திரத்தை ஐந்து லட்சம் தடவை ஜபித்தால் சிவபெருமான் பிரத்தியட்சமாவார்.
லட்சம் அறுகம் புல்லால் அர்ச்சனை செய்பவனுக்குத் தீர்க்காயுசு ஏற்படும். லட்சம் கருவூமத்தையால் அர்ச்சித்தால் புத்திரப் பிராப்தி உண்டாகும். லட்சம் சரவீர புஷ்பங்களால் அர்ச்சிப்பவனுக்கு சர்வ ரோகங்களும் நீங்கிவிடும். மல்லிகை, அழகிய மனைவியையும், மலைமல்லி, தானிய சம்பத்தும் கொடுக்கும். செண்பகம், தாழம்பூ ஆகிய இரு மலர்களும் சிவபூஜைக்கு உகந்ததல்ல.
தாழை எவ்வாறு சிவபூஜைக்கு தகுதியில்லாமல் போயிற்று என்பதை இந்த புராண சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பிதுர்வாக்கிய பரிபாலனம் நிமித்தமாகத் தம்பி லக்ஷ்மணனுடனும் மனைவி சீதையுடனும் கானகம் வந்த போது ஒரு சமயம் பல்குநதி தீரத்தில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் ராமரின் பிதாவான தசரதனின் சிரார்த்த தினம் வந்தது.
தந்தைக்குச் சிரார்த்தம் செய்ய ஸ்ரீராமர் பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அரிசி முதலானவற்றைச் சேகரித்து வரும்படி லக்ஷ்மணனை அனுப்பி வைத்தார். புறப்பட்டுச் சென்ற லக்ஷ்மணன் வெகு நேரமாகியும் வராதது கண்டு ராமர் அவனைத் தேடிக்கொண்டு புறப்பட்டார்.
சிரார்த்த காலம் சமீபித்து விட்டது. இருவரும் திரும்பி வரவில்லை. சீதை தவியாய்த் தவித்தாள். குறித்த நேரத்தில் சிரார்த்தத்தை முடிக்காவிடில் அன்றைய தினம் வியர்த்தமாகி விடும் என்று வேதனைப்பட்டாள்.
தர்பசம், இங்குதி ஆகிய பழங்களைக் கொண்டுவந்து வேக வைத்து அவற்றால் கிடைக்கும் மாவினால் பிண்டம் செய்து பிதுர்களுக்குச் சமர்ப்பித்தால் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரத்தில் ஒரு விதி இருக்கிறது. சிரார்த்த காலம் முடிந்து விடப்போகிறதே என்று தவித்த சீதை, அந்த விதியை நினைவுக்குக் கொண்டுவந்து அவ்வாறே இங்குதிப் பழங்களைக் கொண்டு வந்து அக்கினியில் வேகவைத்து மாவு  எடுத்துப் பிண்டம் செய்து தயாராக வைத்தாள். அந்த நேரத்தில் ராம லக்ஷ்மணர்கள் திரும்பி வந்தாலும் சமைக்க நேரமாகி விடுமல்லவா!
பிண்டத்தைத் தயார் செய்ததும் சீதை, ‘பிதுர்கள் வர நேரமாகிவிட்டதே, கிராமத்துக்குச் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லையே’ என்று வருந்தினாள். அப்போது அவள் முன்பு தேஜோமயமாகப் பிரகாசிக்க பிதுர்கள் தோன்றினர்.
சீதே! பிண்டத்தை எங்களுக்குச் சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுகிறோம்" என்று தசரதர் கேட்டார்.
சுவாமி! என் கணவர் செய்யவேண்டிய காரியத்தை நான் செய்யலாமா? அவர் இல்லாத நேரத்தில் நான் செய்த காரியத்தை அவர் எவ்விதம் நம்புவார்?" என்று வருத்தத்தோடு கேட்டாள் சீதை.
சீதே! வருத்தப்பட வேண்டாம். காலம் கடந்து விடாமலிருக்க நீயே உன் கையால் எங்களுக்குப் பிண்டம் சமர்ப்பிக்கலாம். அதற்குத் தகுந்த சாட்சிகளை வைத்துக் கொள் போதும்" என்றார் தசரதர்.
அவ்வாறே பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நால் வரையும் சாட்சிகளாக வைத்துக் கொண்டு சீதை பிதுர்களுக்குப் பிண்டம் சமர்ப்பித்தாள். அவர்களும் அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு போய்ச் சேர்ந்தனர்.
சிறிது நேரத்துக்கெல்லாம் கிராமத்துக்குச் சென்றிருந்த ராம லக்ஷ்மணர் இருவரும் சாமான்களோடு திரும்பி வந்தனர்.
சீதே! நேரம் ஆகிவிட்டது. மேலும் தாமதம் செய்யாமல் விரைவில் சமையல் முடிக்க வேண்டும். அதற்குள் நாங்களும் நீராடித் திரும்புகிறோம்" என்றார் ராமர்.
அப்போது சீதை அவரைப் பார்த்து, நாதா! சிரார்த்தம் குறித்த காலத்தில் முடிந்துவிட்டது. நீங்கள் இப்போது செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று சொல்லி நடந்ததைக் கூறினாள்.
அதெப்படி முடியும், சீதை? கர்த்தாக்கள் நாங்கள் இல்லாமல் அது நடந்ததாக ஆகாதே!" என்றார் ராமர்.
பிதுர்கள் அதிக நேரம் காத்திருக்க முடியாதென்றனர். அவர்களின் பரிபூரண சம்மதத்தின் பேரில்தான் பிண்டம் அளித்தேன். சாட்சிகளும் இருக்கின்றன" என்று சொன்ன சீதை பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நான்கையும் சாட்சிகளாகக் கூறினாள்.
ராமருக்கு ஆச்சரியமாயிருந்தது, அப்படியும் நடந்திருக் குமா என்பதை அறிய சாட்சிகள் நால்வரையும் அழைத்துக் கேட்டார். பகவான் செய்ய வேண்டிய ஒரு காரியத்தில் அவர் வருவதற்குள் அவசரப்பட்டுக் கொண்டு சீதை முடித்து விட்டதற்குத் தாங்கள்  சாட்சிகளாக இருந்தோம் என்பதை அறிந்தால் அவர் கோபிப்பாரே என்ற பயத்தில் அவை நான்கும் தங்களுக்கு எதுவும் தெரியாதென்று சொல்லி விட்டன.
ராமருக்குக் கோபம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் மனைவியிடம் கடிந்து பேசக் கூடாதென்று, சமையலை முடிக்குமாறு சொல்லிவிட்டு நீராடித் தமது காரியங்களைத் தொடர்ந்தார். சங்கல்பம் செய்துகொண்டு பிதுர்களைச் சிரார்த்த பிராம்மணர்களில் ஆவாகனம் செய்யும்போது, வானிலே அசரீரி ஒன்று கேட்டது.
ஹே ராமா, நீ ஏன் இரண்டாம் முறை எங்களைச் சிரார்த் தத்துக்கு அழைக்கிறாய்? நாங்கள் ஒரு முறை சீதையின் கையால் பிண்டம் அளிக்கப்பட்டுத் திருப்தி அடைந்து விட்டோம்" என்று பிதுர்கள் அசரீரிபோல் அறிவித்தனர்.
அதைக் கேட்ட பின்னரே ராமர் நடந்ததை உணர்ந்து சாந்தமானார். அதே நேரத்தில் கணவர் தன்னை நம்பாதிருக்க நேரிட்டதே என்று சீதை வேதனைப்பட்டாள். அதற்குக் காரணமாக  இருந்த பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நான்கையும் அவைகளின் நடத்தைக்காகச் சாபமிட்டாள்.
உங்களைச் சாட்சிகளாக வைத்துக் கொண்டு நான் சிரார்த்தத்தை முடித்திருக்க, நீங்கள் அதை என் கணவருக்குத் தெரிவிக்காமலிருந்து வீட்டீர்களே! பல்கு நதியே, நீ அந்தர்வாஹிநியாக, அதாவது பிரவாகமே இல்லாது போகக் கடவது! பசுவே, உன் வாய் யோக்கியமாக இல்லாது போய் விட்டதால் உன் முகத்தில் இருக்கும் லக்ஷ்மீகரம் உன் பின் பக்கத்தில் போகக்கடவது. தாழம்பூவே! என்னால் பூஜிக்கப்படும் சிவபெருமானுக்கு நீ உகந்ததாக இல்லாமல் போகக்கடவது. அக்கினி தேவனே, எல்லா தேவர்கட்கும் முகஸ்வரூபியாக விளங்கும் நீ, ஸர்வ பக்ஷகனாகக் போகக்கடவது. சுத்தம் அசுத்தம் என்ற பாகுபாடு இன்றி அசுத்தத்தையும் ஸ்வீகரிக்கக் கூடியவனாக ஆகக்கடவது" என்று சபித்தாள் சீதை. அச்சாபம் காரணமாகவே சிவபூஜைக்குத் தாழம்பூ உகந்தது அல்ல எனக் கூறப்படுகிறது.
செண்பக மலர் சாபம் பெற்றதற்கும் புராண கதை உண்டு.
ஒருசமயம் கோகர்ணேச்வரர் எனத் திருப்பெயரொடு தென் திசையில் விளங்கிவரும் சிவபெருமானைத் தரிசிக்க வேண்டுமென்று நாரதர்  வந்தார்.  அவ்வாறு அவர் வரும் போது சிவபெருமானின் சந்நிதானத்துக்கு எதிரில் செண்பக விருக்ஷ மொன்றையும், அதில் மலர்ந்திருக்கும் மலரைப் பறிக்க வந்திருந்த அந்தணன் ஒருவனையும் கண்டார். நாரதர் மீட்டிக் கொண்டுவந்த இனிய இசையில் மயங்கிய அந்தணன், சிறிது நேரம் தன் வேலையை மறந்து அங்கேயே நின்றான்.
அவனைப் பார்த்த நாரதர், நீ யாரப்பா? எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?" என்று கேட்டார். அவனோ உண்மையைக் கூறாது, மலர் பறிக்கத் தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தைக் காட்டி,நான் பிச்சை யெடுக்க வந்திருக்கிறேன், ஐயா!" என்றான்.
அதற்குப் பிறகு நாரதரும் உள்ளே சென்று ஈசனைத் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அதே சமயம் அந்தப் பிராமணனும் செண்பக மலர்களைப் பறித்துச் சென்று பகவானை அர்ச்சித்து விட்டு வெளியே வந்தான்.
என்னப்பா, புறப்பட்டு விட்டாய்?" என்று கேட்டார் நாரதர்.
தான் செய்யும் காரியத்தை எவரும் அறியக் கூடாதென்று அந்தப் பிராமணன் அவரிடம் உண்மையைக் கூறாது, ஐயா! பிச்சையெடுக்க வந்த எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே வேதனையோடு திரும்பிச் செல்கிறேன்" என்று கூறினான்.
நாரதர் சாமானியமானவரா? அவர் முக்காலமும் உணர்ந்த ஞானியல்லவா! அந்தணன் பொய்யுரைத்தான் என்பதை ஞான திருஷ்டியின் மூலம் உணர்ந்து கொண்டார் அந்த திரிலோக சஞ்சாரி. அவருக்குக் கோபம் வந்தது. நேராகச் செண்பக விருக்ஷத்திடம் சென்று, ஏ விருக்ஷமே! இந்தப் பிராமணனுக்கு எத்தனை மலர்கள் கொடுத்தாய்?" என்று கேட்டார்.
அந்தப் பிராமணன் தன் செய்கையை யாருக்கும் உரைக்கக் கூடாதென்று ஏற்கனவே அதனிடம் கேட்டுக் கொண்டிருந்த படியால் அந்த விருக்ஷம் பதில் ஏதும் சொல்லாது இருந்துவிட்டது.
நாரதர் நேராகச் சிவபெருமானுடைய சந்நிதானத்தை அடைந்தார். அங்கே திருவுருவத்தின் முன்பு செண்பக மலர் அர்ச்சிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். அவற்றை எண்ணிய போது நூற்றியொரு மலர்கள் இருப்பதைக் கண்டார்.
நாரதரின் கோபம் உச்சத்தை எட்டியது. அதே சமயம் இன்னொரு பிராமணன் மலர்களை எடுத்துக்கொண்டு வந்தான். அவனைக் கண்டதும் நாரதர், வேதியனே, எக்காரணம் கொண்டு சிவனைப் பூஜிக்க வந்தாய்? இங்கு ஏற்கெனவே பூஜைகள் நடத்தப்பட்டிருக்கின்றனவே, இவை யாரால் நடத்தப்பட்டவை?" என்று கேட்டார்.
சுவாமி, நான் பிறவாப் பேரின்பம் அடைய வேண்டி சிவ பூஜை செய்து வருகிறேன். எனக்கு முன்பு வந்திருந்தவனோ தினமும் ஈசனை நூற்றியொரு செண்பக மலர்களால் பூஜித்தால் அரசனிடம் நல்ல மதிப்பு ஏற்படும் என்பதை அறிந்து அவன் பூஜிக்கத் தொடங்கி, அவ்வாறே அரசனிடம் நன் மதிப்பைப் பெற்றான். தினமும் அந்தணர்களுக்குத் தானம் செய்யும்போது மேற்பார்வையிடக் கூடிய அதிகாரத்தைப் பெற்றான். செண்பக மலர்களால் அர்ச்சிப்பதன் மூலம் அடையக்கூடிய பலன்களை அறிந்த அவன், விடாது அர்ச்சனை செய்து வருகின்றான். இருப்பினும் அவன் உள்ளத்தில் நேர்மை கிடையாது. பேராசை நிறைந்திருக்கிறது. அதன் காரணமாக, அவன் மற்ற பிராமணர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறான். அவன் நட்பைப் பெற்று அவன் சொல்படி கேட்பவர்களுக்கு மட்டுமே அரசாங்கத்தில் தானம் முதலியன கிடைக்கும்" என்று வருத்தத்தோடு தெரிவித்தான்.
செண்பக மலர்களால் பகவானை பூஜித்து நற்பலன் அடைந்த அந்தப் பிராமணன், இவ்விதம் பேராசை காரணமாகப் பிறருக்குத் தீங்கு இழைத்து வருகிறானே என்று எண்ணி நாரதர் வருந்திக் கொண்டிருந்தபோது, அங்கே அந்தண ஸ்திரீ ஒருத்தி வந்தாள். அவள் நேராகப் பகவானை நெருங்கித் தரையில் குனிந்து அவரை நமஸ்கரித்து எழுந்தாள். இரு கரங்களையும் கூப்பி, கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருக, சர்வேச்வரா! எங்களைக் காப்பாற்ற வழியே கிடையாதா? அந்தத் துஷ்டனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனவே. அதற்கு ஒரு முடிவு கிடையாதா?" என்று நெஞ்சம் உருகும் வண்ணம் பிரார்த்தித்தாள்.
நாரதர் அவளை மெல்ல அணுகி, தாயே! உனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம் என்ன? சொல்லு" என்று கேட்டார்.
அந்த அம்மாள் நாரதரை நமஸ்கரித்து, ஐயா, நான் நம்பியிருக்கும் இந்தக் கோகர்ணேசுவரரே நேரில் வந்திருப்பதாக உணருகிறேன். நாங்கள் பரம ஏழைகள். என் கணவருக்கு கால் முடமாகி எங்கும் அதிகமாக நடமாட முடியாதிருக்கிறது. வீட்டிலே வயசு வந்த பெண் இருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் செய்து கொடுத்தாக வேண்டும். ஆகவே வேறு வழியின்றி தானங்கள் வாங்கத் தொடங்கினார்; அரசாங்கத்தில் ஒரு துஷ்டன் இருக்கிறான். அவன் பிறந்தது அந்தணக் குலத்தில் என்றாலும் அதற்குரிய குணப்பண்புகள் கொஞ்சமும் இல்லாதவன். ஏதோ எங்கள் நிலையைக் கண்டு மனம் இரங்கி உதவுவது போல் அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரசரிடம் தானம் பெற்றுக் கொடுத்தான். ஆனால் அதில் பாதி தனக்குரியது என்று பிடிவாதமாக பிடுங்கிக் கொண்டு விட்டான். ஏதோ கொஞ்சமாவது கிடைக்கிறதே என்று நாங்களும் பேசாதிருந்து விட்டோம். இப்போது அவன் அட்டகாசம் அதிகமாகி விட்டது. இதையே அவன் ஒரு தொழிலாகக் கொண்டுவிட்டான். அரசனிடம் எவ்வளவோ முயன்றும் புகார் செய்ய முடியவில்லை. அவனை  மீறிக் கொண்டுதான் எதுவும் அரசனுக்கு எட்ட முடியும்.
இன்று அரண்மனையில் என் கணவருக்கு உபய கோமுகி தானம் கிடைத்தது. பசுவின் கர்ப்பத்திலிருந்து கன்றின் முகம் வெளிவரும் சமயம் அந்தணர்களுக்கு பசுவைக் கன்றோடு தானம் செய்வது பெரும் பாவங்களையெல்லாம் போக்கவல்லது எனச் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அந்தத் தானம் வாங்குவதும் பெரும் பாபமாகும். சாதாரணமாக யாரும் அதை வாங்க முன் வரமாட்டார்கள். நிறையப் பணம் கிடைக்கும் என்று சொல்லி என் கணவரை அழைத்துச் சென்று அந்தத் தானம் வாங்கிக் கொடுத்தான். எங்கள் நிலைமையைக் கருதி நாங்களும் அதற்குச் சம்மதித்துச் சென்றோம்.
வீட்டுக்குத் திரும்பியதும், பின்னாலேயே அந்தப் பிராமணன் வந்துவிட்டான். வழக்கப்படி தானம் கொடுக்கப்பட்ட பொருள்களில் தனக்குப் பாதி உரியது எனப் பொன்னிலும், பொருள்களிலும் பாதியைப் பிடுங்கிக் கொண்டுவிட்டான். அதுமட்டுமல்ல; அந்தப் பாவி பசு மாட்டிலும் தனக்கு உரிமை உண்டு என்று சண்டை போடுகிறான். நாங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை.
தானம் வாங்கிய பசுவை விலை மதிப்பதும், அதைப் பிறரோடு பங்கிட்டுக் கொள்வதும் பெரும் தோஷமாகும். இதை அவன் நன்கு உணர்ந்திருந்தும் பிடிவாதம் பிடிக்கிறான். அதற்கொரு மதிப்புப் போட்டு அதில் பாதியைத் தனக்குக் கொடுத்து விட வேண்டுமென்று சண்டை செய்கிறான்.
பசுவைப் பற்றி நம் சாஸ்திரங்கள் எப்படியெல்லாம் புகழ்கின்றன! பசுவின் உடலிலே சகல தேவர்களும் சாந்நித்தியம் பெற்றிருக்கிறார்கள் அல்லவா?
பசுவின் வலது கொம்பில் கங்கை இருக்கிறாள். இடது கொம்பில் யமுனை  இருக்கிறாள். மத்திய பாகத்தில் சரஸ்வதி இருக்கிறாள். முன் காலில் பிரம்மன் வீற்றிருக்கிறான். பிந்திய பாகத்தில் ருத்திரன் தன் பரிவாரங்களோடு இருக்கிறான். பின் பக்கத்தில் விஷ்ணு இருக்கிறார். பசுவின் பக்கங்களில் அனேக புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. வயிற்றின் வலது பக்கத்தில் மகரிஷிகளும், இடது பக்கத்தில் சகலமான தேவர்களும் இருக்கிறார்கள். வயிற்றின் கீழ்ப்பாகத்தில் புண்ணிய நதிகளும், குளம்பில் வேதங்களும் இடம் கொண்டிருக்கின்றன. பசுவின் பால் மடியில் சமுத்திரங்கள் இருக்கின்றன. இன்னும் இதுபோல் எத்தனையோ சொல்லப் பட்டிருக்கின்றன.
பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்த பலன் கிடைக்கும். கோதானத்துக்குச் சிறந்த பலன்களைச் சொல்லியிருக்கிறார்கள். கோதானம் செய்பவன் பூதானம் செய்த பலனை அடைவானாம். பிராயச்சித்தமே கிடையாது என்று சொல்லப்படும் பாவங்கள் கூட கோதானத்தில் நீங்கி விடக்கூடும். சாணமும் கோமூத்திரமும் உட்கொள்வதால் சகல பாவங்களும் நீங்கப் பெறுவான்.
பசுவைத் தரிசிப்பதாலேயே சில பாபங்கள் நீங்கிவிடும். அதைத் தியானித்துப் பூஜிப்பதோ இன்னும் மேலான பலன்களைக் கொடுக்கக் கூடியதாம். கொம்புக்குப் பொன், குளம்புக்கு வெள்ளி, புட்டத்திற்குத் தாமிரம், நேத்திரத்துக்குப் பவளம், கழுத்துக்கு ஆபரணம், உடலுக்கு வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து, பால் கறக்க வெண்கலப் பாத்திரத்தோடும், கொழு கொழுவென்று இருக்கக்கூடிய கன்றோடு, நன்றாக பால் கறக்கும் இளம் பருவமும் அழகும் கொண்ட பசுவை, அதை வைத்துப் பராமரிப்பவனும், நித்ய கர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டிருப்பவனும் சாஸ்திரங்களை உணர்ந்தவனுமான அந்தணனுக்குத் தானம் செய்வாராகில், அவ்வாறு தானம் செய்பவனுக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும். தானம் பெற்றுக் கொண்டவன் செய்துள்ள புண்ணியத்தில் எட்டில் ஒரு பங்கு தானம்  கொடுத்தவன் அடைவான். கோதானம், பூதானம், வித்யா தானம் இம்மூன்றும் ஒருவனின் நூற்றொரு தலைமுறைகளைச் சொர்க்கவாசத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியவை யென்றால் இன்னும் விவரிப்பதற்கு என்ன இருக்கிறது?
சுவாமி, இவ்வளவு தூரம் சாஸ்திரங்களில் சொல்லப் பட்டிருப்பதை அந்தத் துஷ்டனாகிய பிராமணன் அறிய மாட்டானா, என்ன? அப்பேர்பட்டவன் செய்துவரும் பூஜையைப் பகவான் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்?" என்று மனமுருகக் கூறினாள்.
நாரதரின் உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. ஈசனைப் பார்த்து  பிரபோ! இந்த அக்கிரமத்தை நீங்கள் இன்னமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறீர்களா?" என்று பிரார்த்தித்தார்.
நாரதா! அவன் பெரும் பாவியாக இருக்கலாம். ஆயினும் சிவபூஜை செய்து சிவபக்தனாக விளங்கி வருகின்றான். அதனால் முதலில் தான் செய்த பாவங்களுக்குப் பலனை அனுபவித்துப் பின்னர் சிவபூஜை செய்த பலன் அனுபவிக்கட்டும்" என்றார் சிவபெருமான். நாரதர் உடனே அந்தப் பிராமணனைத் திரும்பவும் ஆலயத்துக்கு வரவழைத்தார்.
அடே அயோக்கியா, பகவத் ஆராதனை மூலம் கிடைத்த நல்ல பதவியை நீ துஷ்பிரயோகம் செய்து வந்திருக்கிறாய். உன் மூலம் தானம் பெற்றுச் செல்பவர்களின் பொருள்களில் ஒரு பாதியை பலாத்காரமாக அபகரித்து வந்திருக்கிறாய் ! உன் செய்கை அரக்கத்தன்மை வாய்ந்ததால் நீ அரக்கனாகப் போகக்கடவாய்" என்று சபித்தார்.
நாரதரின் சாபத்தைக் கேட்ட அவன் மிகவும் நடுநடுங்கி விட்டான். அதுகாறும் மமதை கொண்டு திரிந்து வந்த அவன் அப்போதுதான் தன் செய்கைகளின் விளைவை உணர்ந்தான். கண்களில் நீர் ஆறாக வழிய, நாரதரின் கால்களில் விழுந்து கதறித் தன்னை மன்னிக்கும்படி  வேண்டினான். நாரதரும் அவன் மீது இரக்கம் கொண்டு வேதியரே! நீ செய்து வந்த அக்கிரமங்களுக்கான பலனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதனால் விராடன் என்ற பெயரில் அரக்கனாகக் கானகத்தில் திரிந்து வரும் காலத்தில் உனக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் கிடைக்கும். அதனால் உன் பாவங்கள் அழிக்கப்படும். அரக்கப் பிறவி நீங்கி, நீ சிவ பூஜை செய்த பலனை அடைந்து திவ்விய ரூபத்தைப் பெறுவாய்" என்றார்.
பின்னர், நாரதர் செண்பக மரத்தினிடம் சென்று ஏ விருக்ஷமே! நான் கேட்ட போது நீ பதில் கூறாதிருந்து விட்டாய். அதன் பலனால் இன்று முதல் உன் மலர் சிவ பூஜைக்கு உகந்ததாக இல்லாது போகட்டும்" என்று சபித்தார்.
நாரதர் சாபத்தால்தான் செண்பக மலரைச் சிவ பூஜைக்கு உபயோகப்படுத்துவதில்லை.
சிவ பூஜைக்குப் பின்னர் இருபது அந்தணர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷமாம். நூற்றெட்டுத் தரத்துக்கும் குறையாமல் ருத்திர காயத்திரி ஜபிக்க வேண்டும்.
பகவானுக்கு அபிஷேகம் செய்யும்போது சல்லடைக் கண்களை உடைய தாராபாத்திரத்தால் அபிஷேகம் செய்தால் எத்தனையோ நன்மைகள் உண்டாகும். சதருத்திரம், ஏகாதசருத்திரம், ருத்திரம், புருஷஸூக்தம், மிருத்யுஞ்சயம், காயத்திரி, சிவ நாமங்கள் இவற்றைச் சொல்லி அபிஷேகிக்கலாம். சுத்தமான தீர்த்தத்தால் செய்யப்படும் தாரா பூஜையால் சந்தான விருத்தியும் கஷ்டங்கள் நீங்கி சுகமும் உண்டாகும். நெய்யைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகத் திற்கு சர்வரோக நாசம் பலனாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வமிச விருத்தியும் ஏற்படுமாம். சர்க்கரை கலந்த பாலை அபிஷேகித்தால் மந்திரப் பிரயோகங்கள் மூலம் உண்டாகும் கெடுதல்கள் எதுவும் அண்டாது.
வாசனைத் திரவியங்களோடு கலந்த தயிரை அபிஷேகிப்பதால் சத்துருக்கள் அழிவர், தேன் அபிஷேகம் வியாதிகளை நீக்க வல்லது. கருப்பஞ்சாறு சகலமான  துக்கங்களையும் நீக்கிச் சந்தோஷத்தை உண்டாக்கும்.
இவ்வாறு எத்தனையோ விதமாகப் பலன்கள் சிவ பூஜைக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. கணபதி, சுப்பிரமணியர் ஆகிய இருவரோடு கூடிய பார்வதி பரமேச்வரனை ஒருமுறை பூஜித்தாலும் இம்மையில் துன்பங்கள் ஒழிந்து மறுமையிலும் நற்கதி ஏற்படும்.
இந்த விதமாக பிரம்மதேவர் சிவபூஜை செய்வது பற்றி விளக்கிக் கூறிவிட்டுத் தமது லோகம் திரும்பினார். விண்ணவரும் மண்ணவரும் சிவபெருமானைப் பலவிதங்களில் போற்றிப் புகழ்ந்து அவரை பயபக்தியோடு ஆராதித்து வரத் தொடங்கினர்.

Friday, 10 April 2020

சிவ புராணம் ( 8 )

8. தாருகன் வதமும்
திரிபுர தகனமும் 
வருடங்கள் நகர்ந்தன. தேவர்கள் பொறுமை இழக்கத் தொடங்கினர். எந்தக் காரியத்தை உத்தேசித்து அவர்கள் கைலாசநாதனின் திருமணத்துக்கு முயற்சித்தார்களோ அந்தக் காரியம் நிறைவேறாது தாமதப்பட்டு வந்தது. காலம் சீக்கிரமே கனியும் என்று எதிர்பார்ப்புடன் நாட்களைக் கடத்தி வந்தனர். நாட்கள் கடந்தனவே ஒழிய குமாரனின் அவதாரம் நிகழவில்லை.
இனியும் தாமதிக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்ட தேவர்கள், அக்கினி பகவானைப் பார்த்து, அக்கினி தேவா,  நீதான் ஈசனிடம் சென்று குமாரக் கடவுளின் அவதார அவசியத்தை அவருக்கு நினைவூட்ட வேண்டும்" என்று வேண்டினர்.
அக்கினியும் அவர்கள் கோரிக்கைக்கு இணங்கி புறாவாக வடிவம் கொண்டு கைலயங்கிரிக்குப் பறந்து சென்றார்.
தேவியோடு ஆனந்தமாகப் பொழுதைப் போக்கி வந்த பரமேச்வரன் அங்கு வந்த புறாவைக் கண்டதும், யாரடா வந்திருப்பது?" என்று கேட்டபடி கோபமாக எழுந்தார். அப்போது அவரிடமிருந்து வீரியம் வெளிப்பட்டது. அடுத்த கணம், வந்திருப்பது அக்கினி தேவன் என்பதும், அவன் வந்த நோக்கம் குமாரக் கடவுளின் அவதார நிமித்தம் என்பதையும் அறிந்த ஈசன், சாந்தமடைந்து தம்முடைய வீரியத்தைக் கொண்டு சென்று கங்கையில் விடுமாறு தெரிவித்தார்.
அக்கினியும் அவ்வாறே புறா வடிவத்தோடு, ஈசனின் வீரியத்தை அவர் ஆணைப்படி, கங்கையில் விட்டார். கங்கையாலும் அதன் உக்கிரத்தை தாங்க முடியாமல் போனதால் அது தர்ப்பைப் புற்கள் வளர்ந்திருந்த சரவணப் பொய்கை எனப்படும் மடுவில் அதை சேர்த்தது. அந்த க்ஷணமே அழகிய ரூபத்தோடு குமாரன் தோன்றினான்.
அப்போது மடுவுக்கு நீராட வந்த கன்னியர் அறுவர், புற்களிடையே நீரில் மிதக்கும் குழந்தையைக் கண்டு ஓடி வந்து, ‘என் குமாரன்’ என்று தூக்க வந்தனர். அவர்களிடையே பூசலை உண்டாக்க விரும்பாத சிவகுமாரன் ஆறு முகங்களோடு அவர்களுக்குத்  தோற்றமளித்தான். ஒவ்வொருவரும் அவரை வாரி எடுத்து முலைப்பால் கொடுத்தனர். அதன் காரணமாக அவருக்கு ஷண்மாதுரன் (ஷண்முகன்) என்ற பெயர் விளங்கலாயிற்று. மேலும் குமாரக் கடவுளுக்குப் பார்வதி மைந்தன், அக்கினி புத்திரன், ஸ்கந்தன், சரவணபவன், கங்காபுத்திரன் என்ற நாமங்களும் விளங்கலாயின.
கன்னியர் அறுவரும் குமாரனை அன்போடு வளர்த்து வந்தனர். குமாரனின் அவதாரத்தையும், கன்னியர் அறுவரிடம் அவர் வளர்ந்து வருவதையும் நாரதர் மூலம் அறிந்த பார்வதி ஈசனோடு புறப்பட்டுச் சென்று மகனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். குமாரன்அவதரித்து விட்டான் என்பதைக் கேட்ட தேவர்களும் அங்கு வந்து கூடினர். எல்லோரும் தேவியையும் குமாரனையும் பலவாறு தோத்திரங்கள் செய்து வணங்கி, அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக் கொண்டு தாருகனோடு யுத்தத்துக்குப் புறப்படுமாறு வேண்டினர்.
பரமன், குமாரனுக்கு அனேக வித அஸ்திரங்களைக் கொடுத்து, யுத்தத்தில் அசுரனை வெற்றி கொள்ளுமாறு அருளினார். தேவியும் தமது சக்தியை மைந்தனுக்கு அளித்தாள். விஷ்ணு பிரம்மாதியரும் தங்கள் அஸ்திரங்களைக் குமாரக் கடவுளுக்கு அளித்து, அவர் தலைமையில் தங்கள் பரிவாரங்களுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டனர்.
தேவர்கள் பயத்தை விடுத்து யாரோ ஒரு சிறுவன் தலைமையில் யுத்தத்துக்கு வருகிறார்கள் என்பதை அறிந்தபோது தாருகன் பெரும் சீற்றம் கொண்டான். உடனே  வீரர்களைத் திரட்டிக் கொண்டு அவனும் யுத்த சன்னத்தமானான்.
நகருக்கு வெளியே அசுரப் படைகளும் தேவர் படைகளும் சந்தித்துக் கொண்டன. மிகவும் பயங்கரமான யுத்தம் தொடங்கியது. அசுரன் எத்தனையோவித மாய உருக்களைக் கொண்டு  குமாரனுடன் போரிட்டான். குமாரக் கடவுளும் அவ்வப்போது தமது அஸ்திரங்களால் அசுரனின் மாயத் தோற்றத்தை வெளிப்படுத்தித் திக்குமுக்காடி ஓடும்படி செய்தார். ஒரு நாள், இரண்டு நாள் என்று ஆரம்பித்த யுத்தம் பத்து நாட்கள் வரை நீடித்தது. அசுரன் கொஞ்சமும் சளைக்காது சிவகுமாரனோடு யுத்தம் செய்தான். யுத்தத்தை மேலும் நீடிக்க விரும்பாத குமாரக் கடவுள், பத்தாவது நாள் தம் பெற்றோர்களை மனத்தால் தியானித்து, அசுரனின் அழிவு நிறைவேறப் பிரார்த்தித்துக் கொண்டு அஸ்திரம் ஒன்றை விடுத்தார். அசுரனின் மாயாஜாலங்களை அது அழித்து, முன்னேறிச் சென்று அவனைத் தாக்கி, அவன் உயிரைக் குடித்துத் திரும்பியது.
தாருகன் அழிந்தான் என்பதை அறிந்தபோது, தேவர்கள் ஆனந்தப் பரவசமாகி ஓடி வந்து குமாரக் கடவுளின் அடிபணிந்து துதித்தனர். முனிவர்கள் பலவாறு குமாரனின் பெருமைகளைப் போற்றிப் புகழ்ந்தனர். பயம் ஒழிந்து சகல லோகங்களிலும் நிம்மதி ஏற்பட்டது.
தாருகன் வதத்தால் ஏற்பட்ட நிம்மதி, அதிக காலத்துக்குத் தொடர்ந்து இருக்கவில்லை.
தாருகனின் புத்திரர்களான வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் அம்மூவரும், தந்தையின் மரணத்துக்குப் பிறகு தேவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று பிரம்ம தேவனைக் குறித்துத் தவம் மேற்கொண்டனர். கணக்கற்ற வருடங்கள் உடலைப் பலவிதத்திலும் வருத்திக் கொண்டு அவர்கள் காற்றையே உணவாக்கிக் கடுமையாகத் தவம் செய்தனர்.
அவர்கள் மேற்கொண்டிருக்கும் தவத்தை மேலும் நீடிக்க விட்டால், சகல லோகங்களும் யோகாக்கினியில் தகிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்த பிரம்மன் அவர்கள் முன்பு காட்சி தந்து, அசுர குமாரர்களே! உங்களுக்கு வேண்டிய வரம் என்ன?" என்று கேட்டார்.
பிரபோ! எங்களுக்கு யாராலும் எந்த வழியிலும் மரணம் சம்பவிக்காதிருக்குமாறு அனுக்கிரகிக்க வேண்டும்" என்று  மூவரும் நான்முகனை வேண்டினர்.
அசுரகுமாரர்களே! உங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாததாயிருக்கிறது. பிறப்பு என்று இருந்து விட்டால் மரணம் சம்பவித்துத்தான் ஆகும். யாராலும் அதைத் தடுக்க முடியாது. ஆகவே வேறு வரம் ஏதாவது கேளுங்கள்" என்றார் சதுர்முகன்.
மூவரும் சிறிது ஆலோசித்துப் பின்னர் பிரம்மதேவனை வணங்கி, பிரபோ! நாங்கள் கேட்ட அந்த வரத்தைக் கொடுக்க முடியாதென்றால் நாங்கள் விரும்பும் இந்த வரத்தையாவது எங்களுக்கு அளிக்கவேண்டும். நினைத்த மாத்திரத்தில் பறந்து செல்லும் வலிமையுடைய பொன், வெள்ளி, இரும்பாலான மூன்று பட்டணங்கள் எங்களுக்குக் கிடைக்க அருள வேண்டும். அம்மூன்றும் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை ஒன்று சேர வேண்டும். அவ்வாறு மூன்று பட்டணங்களும் ஒன்று சேர்ந்துள்ள சமயத்தில் ஒரே பாணத்தால் அவற்றை ஒருங்கே அழிக்கக் கூடிய சக்தி உள்ள ஒருவனாலேதான் நாங்கள் கொல்லப்பட வேண்டும். இந்த வரத்தைத் தாங்கள் எங்களுக்கு அருள வேண்டும்" என்று வேண்டினர்.
நான்முகன் அவர்கள் கேட்ட வரத்தை அளித்தார். பின்னர் தேவதச்சனான மயனை அழைத்துச் சகல வசதிகளோடு மூன்று பட்டணங்களையும் நிர்மாணித்து அசுர குமாரர்களிடம் ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டுத் தம் இருப்பிடம் சென்றார்.
பிரம்மன் இட்ட உத்தரவுப் பிரகாரம் மயன் பொன், வெள்ளி, இரும்பாலான பட்டணங்களை நிர்மாணித்தார். தாரகாக்ஷனுக்கு பொன்னாலான பட்டணத்தையும், கமலாக்ஷனுக்கு வெள்ளியாலான பட்டணத்தையும், வித்யுன்மாலிக்கு இரும்பாலான பட்டணத்தையும் அளித்தான். பொன்னாலான பட்டணமாகிய காஞ்சனபுரி சுவர்க்கத்திலும், வெள்ளியாலான இரசிதபுரி வானவெளியிலும், இரும்பாலான ஆயசபுரி பூமியிலும் சஞ்சரிக்கும் சக்தி பெற்றிருந்தன.
அசுரகுமாரர்கள் மூவரும், தங்கள் பட்டணங்களில் உற்றார்  உறவினரோடு குடியேறினர். உலகெங்கிலும்  இருந்த அரக்கர்கள் அவர்களை அடைந்தனர்.
ஆயசபுரியான இரும்புப் பட்டணத்திற்கதிபதியான வித்யுன்மாலி, நினைத்த மாத்திரத்தில் தன் பட்டணத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டு சென்றான். இவ்விதமாக அவன் உலகின் பல பாகங்களிலும் சுற்றினான். திடீர் திடீரென உயரே எழுந்து பறந்து சட்டென்று பட்டணத்தை கீழே இறக்குவான். பட்டணத்தின் அடியில் சிக்கிக் கொண்ட மக்களும் பிராணிகளும் கூட்டம் கூட்டமாக உயிரை இழந்தனர். எந்தச் சமயத்தில் பட்டணம் தங்கள் மீது இறங்குமோ என்ற பயத்தில் பூலோகவாசிகள் நடுங்கி வந்தனர். அதனால் அவர்கள் தங்கள் கர்மாக்களைச் சரிவரச் செய்ய முடியாது தவித்தனர். தர்மாசாரங்கள் நசியத் தொடங்கின.
பூலோகத்தில் யாகம் முதலான கர்மாக்கள் சரிவர நடக்காததால், தேவர்களுக்குக் கிடைத்து வந்த அவிர்ப்பாகம் குறைந்து விட்டது. அதனால் அவர்கள் வலிமை குன்றியவர் களானார்கள். அது மட்டுமல்ல; அவர்களால் நிம்மதியாக நடமாடவும் முடியவில்லை. எந்த நேரத்தில் வானமார்க்கமாகப் பறந்து செல்லும் அசுர பட்டணங்கள் தங்கள் மேல் விழுமோ என்ற பயம் அவர்களையும் பீடித்திருந்தது.
எல்லோருமாகப் பிரம்மலோகம் சென்று நான்முகனைச் சரண் அடைந்தனர்.
அன்புமிக்கத் தேவர்களே! அசுரர்கள் மூவரும் எளிதில் அழிக்க முடியாதவாறு வரம் பெற்றுள்ளனர். நாராயணனைக் கேட்போம். அவரால்  இதற்கொரு உபாயம் காண முடியும்" என்று கைவிரித்த நான்முகன், தேவர்களை விஷ்ணுவிடம் அனுப்பி வைத்தார்.
க்ஷீராப்தி சயனரான மகாவிஷ்ணுவும் தேவர்களின் துயரைக் கேட்டுத் தானும் வருந்தினார்.
தேவர்களே! அசுரர்களை அழிப்பதானது நம்மால் இயலாத காரியம். ஆதிபரம்பொருளான சிவபெருமான் ஒருவரே அவர்களை அழிக்கவல்லவர். அவரை ஆராதித்து அனுக்கிரகம் பெறுவோம்" என்று சொன்ன விஷ்ணு, தேவர்களைச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யுமாறு சொன்னார். தேவர்களும் அவரையே முன்னின்று பூஜையைக் குறைவின்றி நிறைவேற்றித் தருமாறு வேண்டினர்.
நாராயணனும் அதை மகிழ்ச்சியோடு ஏற்று சிவ லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். தேவர்களும் அவரோடு தூய உள்ளத்தோடு தங்கள் துயரம் நீங்கப் பரமேச்வரனைத் தியானித்து சிவலிங்கத்தைப் பூஜை செய்தனர்.
பூஜையின் முடிவில் சிவலிங்கத்தினின்று கோர ரூபத்தோடு எண்ணற்ற பூதங்கள் தோன்றி, தேவர்களைப் பணிந்து நின்றன.
சிவானுக்கிரகம் பெற்ற பூதகணங்களே! நீங்கள் அனைவரும் இப்போதே புறப்பட்டுச் சென்று முப்புரங்களையும் எரித்து விட்டு வாருங்கள்" என்றார் விஷ்ணு.
பூதகணங்கள் அசையாது நிற்பதைக் கண்ட விஷ்ணு ஆச்சரியத்தோடு அவைகளைப் பார்த்தார்.
ஏன் நிற்கிறீர்கள்? இப்போதே புறப்படுங்கள்" என்றார்.
பிரபோ, அசுரர் மூவரும் ஈசனிடம் பக்தி பூண்டவர்கள். அவன் பட்டணத்திலிருப்பவர்களும் சிவபூஜை செய்பவர்கள். அவர்கள் எவ்வளவு பாவியாக இருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல, அவர்களுடைய பாபங்கள் அவர்களை நெருங்க முடியாது இருக்கின்றன. அந்த இடத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாதே!" என்றன பூதகணங்கள்.
அப்படியானால் நீங்கள் போகலாம். வேறு உபாயம் பற்றித்தான் யோசிக்க வேண்டும்!" என்றார் விஷ்ணு.
பூதகணங்கள் மறைந்ததும் தேவர்களைப் பார்த்து, நீங்கள் அனைவரும் ஒன்று கூடி அந்தப் பரம்பொருளைத் தியானியுங்கள். அவர் அனுக்கிரகம் இருந்தால் தான் நாம் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும்" என்றார்.
தேவர்கள் நாராயணனைப் பணிந்து விடைபெற்றுச் சென்றனர். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பரமேச்வரனைத் தியானித்தனர். இதனிடையில் விஷ்ணு ஒரு தனியிடத்தில் ஏகாந்தமாகத் தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவரிடமிருந்து ஒரு மாயாபுருஷன் தோன்றினார். மேலும் நால்வரை உண்டாக்கி அப்புருஷனுக்குச் சிஷ்யர்களாகப் பணித்தார்.
பிரபோ! நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தெரிவிக்கலாம்" என்று அவர்கள் ஐவரும் நாராயணனின் தாள் பணிந்தனர்.
இப்போதே நீங்கள் புறப்பட்டுச் சென்று அசுரன் தாருகன் புத்திரர்களான தாரகாஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி ஆகியோருடைய பட்டணங்களை அடைந்து, அங்குள்ள மக்களுக்கும், அசுரர்களுக்கும் இதமான வார்த்தைகளைச் சொல்லி அவர்கள் மனத்தை மயக்கி, சிவபூஜையிலிருந்து வழுவும்படி செய்ய வேண்டும். சிவபூஜையை அலட்சியப் படுத்துவதன் மூலம் அவர்கள் தாங்கள் அடைந்திருக்கும் பகவத் அனுக்கிரகத்தின் வலிமை குறைந்தவர்களாக வேண்டும்" என்றார் நாராயணன்.
அதே சமயம் பிரபோ! பன்னகசயனா!... சகல புவனங்களும் தங்களால் ரக்ஷிக்கப்பட வேண்டும்" என்று பிரார்த்தித்தபடி அங்கே வந்து சேர்ந்தார் நாரதர்.
அவரைக் கண்ட நாராயணன் மகிழ்ச்சி அடைந்து, நாரதா! நல்ல சமயத்தில் தான் வந்திருக்கிறாய். இங்கு உள்ள மாயா புருஷர்கள் என்னால் தோற்றுவிக்கப்பட்டவர்கள். தாருகனின் குமாரர்கள் மூவரும் செய்து வரும் அட்டகாசங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அசுரர்களும் அவனைச் சேர்ந்தோர்களும் சிவபூஜை தவறாது செய்து வருகின்றபடியால் அவர்களை எந்தத் தேவர்களாலும் அசைக்க முடியாது. அவர்கள் தாங்கள் செய்து வரும் நித்திய கர்மாக்களை விடுத்து சிவபராதிகளாக மாறுவதற்காக இவர்களைத் தோற்றுவித்து அங்குச் சென்று பிரசாரம் செய்யுமாறு சொல்லியிருக்கிறேன். நீயும் உடன் சென்று இவர்களுக்குத் தேவையான உதவி செய்ய வேண்டும்" என்றார்.
பிரபோ, தங்கள் விருப்பம் என் சித்தம்" என்று பணிந்த நாரதர், அவரது ஆசி பெற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
விஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்ட மாயா புருஷன் மதாசாரியாராகவும் அவனுடன் வந்த நான்கு பேரும் அவருடைய பிரதம சீடர்களாகவும் நாரதரோடு வித்யுன் மாலியின் ஆயசபுரியுள் நுழைந்தனர். நாரதர் அவர்களை நேராக அசுரனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
நாரதரைக் கண்டதும் வித்யுன்மாலி அவரை வரவேற்று உபசரித்தான்.
சர்வலோக  சஞ்சாரியான நாரதமுனிவரே! ஏது இவ்வளவு தூரம்? காரியம் ஏதுமின்றி இங்கே வரமாட்டீர்களே!" என்று கேட்டான்.
வித்யுன்மாலி! இப்படிச் சஞ்சாரித்துக் கொண்டு வரும் போது இந்த ஆசாரியாரைச் சந்தித்தேன். பகவத் விஷயமாகப்  பிரசாரம் செய்து வருவதாகவும் உன் பட்டணத்துக்கும் போக வேண்டும் என என்னிடம் விருப்பம் தெரிவித்தார். போகும் வழியில் இங்கு அழைத்து வந்து விட்டுவிட்டுச் செல்லலாமென வந்தேன்" என்றார் நாரதர்.
வித்யுன்மாலி மாயாபுருஷனையும் அவனுடன் சிஷ்யர்களாக வந்திருந்த நால்வரையும் வரவேற்று நன்கு உபசரித்தான்.
வித்யுன்மாலி, இந்த மனிதர் சாதாரணமானவரல்ல, மிகுந்த பக்திமான். தர்மோபதேசம் செய்வதில் இவருக்கு நிகர் இல்லை எனலாம்.  நானே இவருடைய உபதேசத்தைக் கேட்டு மனம் களித்து இவரிடம் தீக்ஷை பெற்றேன்" என்றார் நாரதர்.
அப்படியா, சுவாமி! ..." என்று ஆச்சரியத்தோடு கேட்டான் அசுரன்.
ஆம், நீயும் இவரிடம் தீக்ஷை பெற்றால் உன் மகிமை மேலும் பிரகாசிக்கும் என்பது என் அபிப்பிராயம்!" என்றார் நாரதர்.
பட்டணத்தை நினைத்த மாத்திரத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு சென்று கூட்டம் கூட்டமாக மக்களைக் கொலை செய்து வந்த வித்யுன்மாலி, அந்தப் பாபம் காரணமாக புத்தி கூர்மை மழுங்கி இருந்ததால் நாரதருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ள மர்மத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. மேலும் விஷ்ணுவின் உத்தரவினால் அவர் களோடு ஜேஷ்டாதேவியும் பட்டணத்தில் நுழைந்திருந்தாள்.
நாரதரின் வார்த்தைகளில் மயங்கிய வித்யுன்மாலி, மாயா புருஷனை வணங்கி, சுவாமி, அடியேனுக்கும் தீக்ஷை செய்விக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.
மாயாபுருஷன் அசுரனின் வேண்டுகோளை ஏற்று அவனுக்குத் தர்மோபதேசம் செய்தான். அசுரனின் கொடுமை நிறைந்த உள்ளத்துக்கு இதமளிக்கும் வகையில், தர்மங்களை இருபொருள் படும் வகையில் எடுத்துக் கூறினான். விக்கிரக ஆராதனை தேவை இல்லை எனப் பல மேற்கோள்களுடன் எடுத்துக் காட்டினான் மாயாபுருஷன். பூஜை, வழிபாடு முதலானவை, செலவுக்குத் தான் வழி கோலுமே தவிர மற்ற வழிகளில் உதவக் கூடியவை அல்ல எனத் தெரிவித்தான். இன்னும் பல வகைகளில் அசுரன் மனம் களிக்கும் வகையில் எடுத்துச் சொல்லி வந்தான்.
அபரிமிதமான பாபங்களால் முடிவுக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த அசுரன், மாயா புருஷனின் வார்த்தைகளில் மதி மயங்கினான். அவன் உபதேசங்களை வேத வாக்காக  எடுத்துக் கொண்டான். அத்துடன் மட்டுமல்ல, தன் பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் அத்தர்மத்தை உபதேசிக்கச் செய்தான். தன்னுடைய சகோதரர்கள் இருவருடைய பட்டணங்களுக்கும் மாயாபுருஷனை அனுப்பி அங்கும் உபதேசம் செய்யச் சொன்னான்.
விஷ்ணுவால் அனுப்பப்பட்ட மாயா புருஷன், அசுரப் பட்டணங்கள் மூன்றிலும் விதைத்துவிட்டு வந்தவை, நன்கு முளைத்துத் துளிர்விடத் தொடங்கின. மக்கள் சிவபூஜையை விட்டுவிட்டனர். நல்ல காரியங்களில் செலவிட்டு வந்த பொழுதைத் தர்மத்துக்கு விரோதமான காரியங்களில் செலவழித்தனர். இதனால் தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கியது.
இது இவ்வாறிருக்க, சிவபெருமானைத் தியானித்துத் தவம் மேற்கொண்ட தேவர்களுடன் விஷ்ணுவும் சேர்ந்து கொண்டார். அவர்கள் செய்யும் சிவநாமபஜனை கைலாசம் வரை சென்று மோதியது. ஈசன் மகிழ்வுற்றுத் தேவர்கள் முன்பு தோன்றினார்.
உங்களுக்கு என்ன வேண்டும்? என்னைக் குறித்துத் தவம் மேற்கொண்டதன் காரணம் என்ன?" என்று வினவினார்.
பிரபோ, சர்வேச்வரா! தாருகனின் குமாரர்களான அசுரர்கள் மூவரும், தங்கள் தவப் பயனால் நினைத்த மாத்திரத்தில் பறந்து செல்லும் திரிபுரங்களில் இருந்து கொண்டு, எங்களுக்கும் பூலோக வாசிகளுக்கும் இழைத்து வரும் கொடுமைகள் சொல்லி முடியாது. சதா பயத்தில் இருக்கும் முனிவர்களாலும் பூலோகவாசிகளாலும் தங்கள் கர்மாக்களைச் சரிவரச் செய்ய முடியாதிருக்கின்றது. அதனால் நாங்கள் வலுகுன்றி விட்டோம். சுலபத்தில்  சாதிக்க முடியாத அழிவைக் கேட்டுப் பெற்றுள்ள அசுரர்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆயிரம் வருடங்களுக்கொருமுறை முப்புரங்களும் ஒன்று சேரும் போது, ஒரே பாணத்தால் அவற்றை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவனே தங்களை அழிக்கவல்லவன் என அவர்கள் வரம் பெற்றுள்ளார்கள். மகேச்வரா! எங்களைத் தோற்றுவித்தத் தாங்களே எங்களை இத்துயரிலிருந்து மீட்டுக் காக்க வேண்டும்" என்று கோரினர்.
மகாவிஷ்ணு பலவித ஸ்தோத்திரங்களால் ஈசனைப் புகழ்ந்து போற்றி கைலாசநாதா! மாயையால் ஒரு புருஷனைத் தோற்றுவித்து நான்கு சீடர்களோடு அசுரனின் பட்டணங்களுக்குச் சென்று தர்மோபதேசம் செய்யும் மார்க்கமாக அதர்மத்தை அவர்களுக்கு உபதேசித்து அதில் அவர்களை நாட்டம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன். தங்களைக் குறித்து அவர்கள் செய்து வந்த பூஜைகள் அனைத்தும் நின்றுவிட்டன. மேலும் தங்களுக்கு அபசாரம் செய்வது போல் தங்கள் மூர்த்தங்களை அலட்சியப் படுத்தியிருக்கின்றனர். தேவரீர் எங்களுக்குக் கிருபை செய்ய வேண்டும். அசுரர்களின் அழிவு தங்களால் தான் சாதிக்கக் கூடியது"என்று விக்ஞாபித்தார்.
ஈசனின் முகம் மலர்ந்தது, துயரத்தை இப்போதே விடுங்கள். அசுரர்களின் அழிவு நெருங்கிவிட்டது. அவர்களது அட்டகாசத்தை நானும் கவனித்து வருகின்றேன். என்னைக் குறித்துச் செய்து வந்த பூஜையின் பலன், இதுவரை அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து வந்தது. இப்போது அந்தப் பாதுகாப்பு அகன்று விட்டது. அவர்கள் அதர்மங்களால் சூழப்பட்டிருக்கிறார்கள். முப்புரங்களும் ஒன்று சேர ஆயிரம் வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அசுரர்களோடு யுத்தம் செய்யத் தகுந்த இரதம் ஒன்றைத் தயார் செய்யுங்கள். இரதம் தயாராகிவிட்டால் அப்போதே அசுரர்களின் அழிவுக்காலம் தொடங்கிவிட்டது என்பதை அறியுங்கள்" என்று அருளி மறைந்தார்.
சகலமான தேவர்களும் ஆனந்தத்தால் நிறைந்த உள்ளத்தோடு ஈசனைப் பலவாறு துதித்து, தேவ தச்சனான விசுவகர்மாவை அழைத்து இரதம் உருவாக்கும் வேலையை அவனிடம் ஒப்படைத்தனர். விசுவகர்மா மகிழ்ச்சியோடு விஷ்ணு பிரம்மாதி தேவர்களின் பரிபூரண ஆசிபெற்று இரதத்தை உருவாக்குவதில் முனைந்தான். விரைவிலேயே அசுரர்களுடன் யுத்தத்துக்குச் செல்ல ஈசன் ஆரோகணிக்க வேண்டிய இரதம் பிரமிக்கத்தக்க வகையில் உருவாகியது.
அசுரர்களை வதம் செய்வதற்காக ஈசன் ஏறிச் செல்ல இருக்கும் இரதமாக தேவர்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டனர்.
சூரியர், சந்திரர் இருவரும் இரதத்தின் சக்கரங்களானார்கள். அஸ்தகிரியும், உதயகிரியும் இருசுகளாயினர். மந்திரகிரியே இரதமாகியது. ஆகாயம் கொடுமுடியாகியது. தேவர்கள் இரதத்தின் அலங்காரப் பொருள்களானார்கள். நக்ஷத்திரங்களும் திரைச்சீலை மற்றும் அனேக அலங்காரப் பொருள்களாக விளங்கின. விந்தியமலை குடையாகியது. பிரம்மதேவன் கடிவாளத்தைக் கையிலேந்தி சாரதியானார். பிரணவம் குதிரைகளை ஓட்டிச் செல்லும் சாட்டையாக மாறியது. வேதங்கள் நான்கும் குதிரைகளாயின. மேருமலை வில்லாக, வாசுகி அதன் நாணாகியது. சரஸ்வதி வில்லின் நுனியிலே ‘கலகல’ வொலிக்கும் சிறு மணிகளாக விளங்கினாள். விஷ்ணு பாணமானார்.
இந்த விதமாக இரதம் தயாரானதும் தேவர்கள் சிவபெருமானைத் தியானித்தனர். பகவானும் யுத்தத்துக்குப் புறப்படும் அலங்காரங்களோடு அவர்கள் முன் தோன்றி இரதத்தில் ஆரோகணித்தார். முனிசிரேஷ்டர்கள், பகவானின் மங்கள சொரூபத்தைத் தரிசித்து ‘ஜய ஜய’ என்று கோஷமிட்டு நல்வாக்கு அருளினர். தேவியும் திரிபுர சம்காரத்தைக் காணவேண்டுமென்று ஈசனின் அருகில் வந்து அமர்ந்தாள். கங்கை முதலான புண்ணிய நதிகள், பார்வதி பரமேச்வரருக்குச் சாமரம் வீசின.
இரதத்தில் ஆரோகணித்த சங்கரன், ம், இரதம் புறப்படட்டும்" என்று பிரம்ம தேவனுக்கு அனுமதி அளித்தார். நாற்புறமும் தொங்கிக் கொண்டிருந்த மணிகள் ‘கல கல" வென்று சப்திக்க இரதம், அசுரகுமாரர்களின் பட்டணங்களை நோக்கிச் சென்றது. சாரணர், சித்தர் முதலானோர் மலர் மாரி பெய்தனர்.
அசுரப் பட்டணத்தை நெருங்கியதும் ஈசன் வில்லை வளைத்து ஹூங்காரம் செய்தார். அந்தச் சப்தத்தில் அண்ட சராசரங்களும் கிடுகிடுத்தன. தனித்தனியே இருந்த திரிபுரங்களும் காந்தத்தால் ஒன்றையொன்று ஆகர்ஷிப்பது போல் ஈசனின் ஹூங்கார சப்தத்தின் வேகத்தால் தானாக ஒன்று சேர்ந்தன.
பிரபோ! இதுவே தகுந்த சமயம்!" என்று சாரதியம் செய்த பிரம்ம தேவன் கூறினார்.
பாணத்தை நாணிலே இருத்திய சிவபெருமான் பெரும் கோபத்தோடு நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து புறப்பட்ட தீ ஜ்வாலை முப்புரங்களையும் ‘திகு திகு’ வென எரியச் செய்தது. பரமேச்வரன் வில்லை வளைத்துப் பாணத்தை எய்தார். இமைக்கும் நேரத்தில் வில்லிலிருந்து புறப்பட்ட பாசுபதாஸ்திரம் முப்புரங்களையும் அடியோடு நாசமாக்கி அதிலிருந்தோர் அனைவரையும் அழித்துத் திரும்பியது.
ஜய விஜயீபவ!" என்ற கோஷம் அண்டசராசரங்களிலும் எதிரொலித்தது. பிரம்மன், விஷ்ணு முதலானோர், பெரும் சீற்றத்தோடு ருத்திரமூர்த்தியாய் கனல் கக்கும் விழிகளோடு நிற்கும் சிவபெருமானைப் பார்த்துத் தேகம் நடுங்கியவர்களாய் பிரார்த்தித்தனர்.
பிரபோ, சர்வேசா, சர்வலோக சரண்யா, பார்வதி நாதா! அசுரர்கள் மூவரும் அழிந்துவிட்டனர். தேவர்களை ரக்ஷிக்கத் தாங்கள் மேற்கொண்ட காரியம் நிறைவேறி விட்டது. தேவர்கள் பயம் நீங்கியவர்களாய் தங்களை அடிபணிந்து வணங்குகிறார்கள். மகேஸ்வரா, கோபத்தை விடுத்து சாந்தம் கொள்ள வேண்டும்! அப்போதுதான் சகல புவனங்களும் பிழைக்கும்" என்று நெஞ்சுருகிப் பிரார்த்தித்தனர்.
தேவர்களும் பகவானின் உள்ளம் களிப்படையும்படி அவர் நாமங்களைப் பூஜித்தனர்.
விஷ்ணு முதலானோரின் பிரார்த்தனைகளால் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைய, பகவான் கோபத்தை விட்டுச் சாந்தமடைந்தார். தேவர்கள் அவர் பாதங்களில் தலை தாழ்த்திப் பணிந்தனர். ஈசன் அவர்களுக்கு அனேக வரங்களை அளித்து அனுக்கிரகம் செய்துவிட்டு,    தேவியுடன் கைலாயம் திரும்பினார்.

hari Om