Friday, 24 April 2020

சிவபுராணம் ( 13 )

13. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் புண்ணிய தலம் 

நர்மதை நதி தீரத்தில் கர்ணகி என்றொரு நகரம் இருக்கிறது. அப்பட்டணத்தில் வசித்து வந்த அந்தணன் ஒருவன், காசி யாத்திரை போக விருப்பம் கொண்டான். அவனுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் பத்திரமாகப் பாதுகாத்து வரும்படியும் விரைவிலேயே தான் திரும்பி விடுவதாகவும் மனைவியிடம் சொல்லி, விடைபெற்றுக் கொண்டு  அவன் புறப்பட்டான்.
காசியை அடைந்ததும் அந்தப் பிராம்மணன் அங்கே சிறிது காலம் தங்க விரும்பினான். அவ்வாறு இருந்து வரும் போது ஒரு நாள் அவன் காலம் முடிந்து விட்டது.
கணவன் காசியில் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் மனைவி பெரிதும் துக்கித்தாள். கணவனைப் பிரிந்து வாழ அவளுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. இருந்தாலும், தன்னை நம்பி பாதுகாப்பில் விட்டுச்சென்ற இரு குமாரர்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைத்  தட்டிக் கழிக்க அவள் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே அவர்கள் நலனுக்காகவே அவள் உயிர் வாழ வேண்டியதாயிற்று.
நாட்கள் கடந்தன். பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். அவர்களுல்லுத் தகுந்தப் பெண்களைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள் அவள். சொத்துக்களை இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துத் தன் செலவுக்கும் சிறிது வைத்துக் கொண்டாள்.
காலம் உருண்டோடியது. தனக்கு அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் அவள். தான் அதிக நாட்கள் உயிரோடிருக்க முடியாதென்பதை உணர்ந்ததும், தனக்காக வைத்திருந்த பொருளைத் தரும காரியத்தில் செலவிட்டாள். அவள் நடமாட்டம் ஒடுங்கியது; படுத்த படுக்கையானாள். கண் பார்வை மந்தமாகியது; காது கேட்கவில்லை; பேசக்கூட முடிய வில்லை. ஆகாரம் இறங்காததால் உடல் நாறாக மெலிந்து விட்டது.
தாய் படும் வேதனையைக் கண்ட புதல்வர் இருவரும் மனம் வருந்தினர். எத்தனையோ தருமங்கள் செய்தும், தாய் தன் அந்திமக் காலத்தில் இவ்வாறு வருந்த நேருகிறதே எனத் துக்கித்தனர். ஒருநாள் புதல்வர் இருவரும் படுக்கையில் கிடந்த தாயை நெருங்கி அம்மா, ஏதோ ஒரு குறைதான் உன்னை இப்படி வருத்துகிறது. மனத்தில் எது இருந்தாலும் அதைச் சொன்னால் எங்களால் இயன்றவற்றைச் செய்வோம்" என்று கேட்டனர்.
குழந்தைகளே, எனக்குப் பெரிய மனக்குறை ஏதும் இல்லை. உங்கள் தந்தையார் காசியில் காலகதி அடைந்து மோக்ஷத்தைப் பெற்றார். அவரோடு சென்று கங்கா ஸ்நானம் செய்யவேண்டும் என விரும்பினேன். அன்றைய சூழ்நிலையில் அது நிறைவேறவில்லை. அவரோடு சென்றிருந்தால் நானும் காசியிலேயே உயிரை விட்டிருப்பேன். காசியில்தான் மரணம் கிட்டவில்லை. நான் இறந்த பின்னர் என் எலும்புகளை எடுத்துச் சென்று கங்கையில் சேர்ப்பீர்களா? அது ஒன்றுதான் என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது!" என்றாள் அவள்.
அம்மா, நீ கொஞ்சம் கூடச் சந்தேகப்பட வேண்டாம். நாங்கள் சொன்ன காரியத்தைச் செய்யாது விடமாட்டோம் என்பது உனக்கே தெரியும். உன் எலும்புகளை அவசியம் கங்கையில் சேர்ப்பிப்போம்" என்றனர் புதல்வர் இருவரும்.
அவள் தன் மூத்த மகனான சுவாதனை அழைத்து, சுவாதா, நீதான் பெரியவன். ஆகவே நீதான் கங்கையை அடைந்து என் அஸ்தியைக் கரைக்க ணே்டும்" என்றாள்.
அவனும் அவ்வாறே செய்வதாக அவளுக்கு வாக்குக் கொடுத்தான். அந்த மன நிறைவிலே அவளும் இவ்வுலக வாழ்வை நீத்தாள்.
தாய்க்குச் செய்யவேண்டிய கருமங்களை ஒரு குறைவு மில்லாது செய்து முடித்தான் சுவேதன். முதல் மாசியத்துக்குப் பிறகு, சேமித்து வைத்திருந்த தாயின் எலும்புகளை ஒரு துணியில் முடிந்து கொண்டு காசிக்குப் புறப்பட்டான். அவனோடு துணைக்காக ஒரு வேலைக்காரனும் புறப்பட்டான்.
காலையில் புறப்பட்ட இருவரும் அஸ்தமிக்கும் வேளையில் ஒரு கிராமத்தை அடைந்தனர். அன்றிரவு அக்கிராமத்திலுள்ள அந்தணன் ஒருவனின் வீட்டில் தங்கி காலையில் மீண்டும் புறப்பட நிச்சயித்தனர்.
சுவேதன் நீராடி சந்தியாவந்தனம் முதலானவற்றை முடித்துக் கொண்டு சிவ நாமங்களை ஜபித்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வீட்டுக்காரன் பால் கறக்கப் பசுவின் கன்றை அவிழ்த்து விட்டான். அடுக்களையில் இருந்த மனைவியை அழைத்துப் பால் கறக்குமாறு சொல்லி விட்டுக் கன்றை  பிடித்துக் கொண்டு பசுவிடம் சென்றான். கன்று அவன் காலை மிதித்து விட்டது. அதனால் வலி பொறுக்க முடியாத அவன் கம்பினால் கன்றைப் பலமுறை அடித்துவிட்டான். அப்போதும் அவன் கோபம் தீரவில்லை. பாலைக் கறந்து கொண்டதும், பாலூட்ட விடாமல் கன்றைப் பிடித்து இழுத்துக் கட்டி விட்டான்.
கன்று படும் கஷ்டத்தைக் கண்டு பசு அழுதது. அதைக் பார்த்த கன்று அம்மா, ஏதோ கர்ம வசத்தால் நான் இன்று இத்துன்பம் அடைந்தேன். அதற்காக நீ ஏன் அழுகிறாய்?" என்று கேட்டது.
குழந்தாய், நீ வேதாந்தம் பேசுகிறாய். எனக்கு அது தெரியாததல்ல. முன் ஜன்மத்தில் சிரித்துக் கொண்டே செய்த பாவத்தை இந்த ஜன்மத்தில் அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டும். இருப்பினும் சம்சார மாயை ஒன்று இருக்கிற தல்லவா, அதில் சிக்காதவர் யார்? நான் படும் அவஸ்தையை அவனும் உணர்ந்தால் என் துக்கம் தீரும். நாளை காலையில் பால் கறக்க அவன் குமாரன் உன்னை அவிழ்த்துவிட்டு என்னிடம் வருவான். அவனை என் கொம்புகளால் முட்டிக் கொன்று விடப் போகிறேன். அவன் தகப்பனுக்கு அப்போது தெரியும் என் வேதனை!" என்றது பசு.
அம்மா, என்ன காரியம் செய்யப் போகிறாய் நீ? நினைத்துப் பார்த்தாயா? பிரம்மஹத்தியை வலியத் தேடிக் கொள்ள முடிவு செய்துவிட்டாயா? ஏற்கனவே நாம் செய்த கர்மாக்களுக்குத் தான் இப்போது அனுபவிக்கிறோமே. இன்னும் வேறு பாவம் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா?" என்று பதைபதைத்துக் கேட்டது கன்று.
குழந்தாய், உனக்குத் தெரியாது. நீயோ சிறுவன். என் மடியில் பால் இருப்பினும் உன்னை நெருங்கவிடாது, கட்டிப் போட்டிருக்கிறானே அந்தப் பாவி, தாயுள்ளம் என்ன வேதனைப் படுகிறது என்பது அவனுக்குத் தெரியுமா?" என்றது பசு.
கன்று வேதனையோடு சிரித்தது.
அம்மா உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நீ என் தாய், நான் உன் மகன், இந்த உறவு எல்லாம் எதுவரை? அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பிறவிப் பயனை அடைந்து துன்பமோ இன்பமோ அடைகிறார்கள். அப்படியிருக்க என் பொருட்டு நீ எதற்காகப் பிரம்மஹத்தியைத் தேடிக் கொள்ள வேண்டும்" என்றது.
குழந்தாய், நான் உறுதியாக இந்த முடிவுக்கு வந்தாகி விட்டது. பிரம்மஹத்தி தோஷத்துக்காக நான் பயப்படவில்லை. வரட்டும்; என் வெண்மை உடல் கருமையாகிவிடும். அந்தத் தோஷத்தை நீக்கிக் கொள்ளும் மார்க்கம் எனக்குத் தெரியும். அதன்படி கருமையாகிவிட்ட என் உடலை மறுபடியும் வெண்மையுடையதாகச் செய்துவிட முடியும்" என்றது.
பசுவுக்கும் கன்றுக்கும் நிகழ்ந்த வாதத்தைக் கேட்ட சுவாதன் பெரிதும் ஆச்சரியமடைந்தான். அவனுக்குத்தான் மிருக பாஷை தெரியுமே! விடியற்காலையிலேயே எழுந்து பிரயாணப்பட வேண்டுமென்று நினைத்திருந்தான். பசுவின் வார்த்தைகளைக் கேட்ட அவனுக்கு அந்த நிகழ்ச்சியைக் காண வேண்டுமென்று விருப்பம் உண்டாயிற்று. மேலும் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொள்ளும் மார்க்கம் தனக்குத் தெரியுமென்று பசு கூறியதைக் கேட்டது முதல், அந்த வழியைத் தானும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவன் துடித்தான். ஆகவே, விடியற்காலைப் பிரயாணத்தைத் தள்ளிப் போட்டு விட்டான்.
விடியற்காலையில் வீட்டுக்காரன் வந்து சுவாதனை எழுப்பினான்.
ஐயா, சூரியோதயத்துக்கு முன்னரே புறப்பட வேண்டுமென்று சொல்லியிருந்தீர்களே, மறந்து விட்டீர்களா? எழுந்திருங்கள்" என்று எழுப்பினான்.
 
வேலைக்காரனுக்கு ஓய்வு போதவில்லை. நேற்று பிற்பகல் அதிக நேரம் இளைப்பாறவில்லை. அதனால் மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னான். ஆகவே, கொஞ்சம் மெதுவாகவே புறப்படலாம் என்றிருக்கிறேன்" என்றான் சுவாதன்.
அதற்குப்பிறகு வீட்டுக்காரன், தன் மகனை அழைத்து, மாடு பால் கறப்பதற்காக கன்றை அவிழ்த்து விடச் சொல்லி விட்டு வெளியே சென்றான். பையனும் எழுந்து வந்து கன்றை அவிழ்த்துவிட்டு விட்டுப் பசுவை நெருங்கினான். அவன் எதிர்பாராத நேரத்தில் பசு ஒரு பாய்ச்சல் பாய்ந்து அவனைக் கொம்புகளால் குத்தித் தூக்கி எறிந்தது. பையன் குடல் சரிந்துஐயோ!’ என்று அலறிக் கொண்டே தரையில் விழுந்தான்.
மைந்தனின் கூக்குரல் கேட்டு உள்ளிருந்து அவன் தாய் ஓடி வந்தாள். பக்கத்து வீடுகளிலிருந்து ஆட்கள் ஓடிவந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த பையனைத் தூக்கினர். அதற்குள் அவன் ஆவி பிரிந்து விட்டிருந்தது.
செய்தி கேட்டு வீட்டுக்காரன் அலறிக் கொண்டு ஓடி வந்தான். மைந்தன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பினான். பசுவைக் காணக் காண அவன் ஆத்திரம் பன்மடங்காகியது. மூங்கில் தடியால் பசுவை அடித்து நொறுக்கி, அதை  வீட்டை விட்டு விரட்டினான்.
பிரம்மஹத்தி தோஷத்தால் உடல் கருமையாகி விட்டப் பசு அந்தணன் வீட்டை விட்டுப் புறப்பட்டு வெகு வேகமாகச் சென்றது. சுவாதன் அதையே கவனித்துக் கொண்டு அதனை பின்தொடர்ந்து சென்றான். சேவகனும் அவனைப் பின் தொடர்ந்தான்.
அந்தணன் வீட்டை விட்டு புறப்பட்ட பசு நேராக நர்மதை தீரத்தை அடைந்தது. அங்கே நந்திகேச்வரர் சாந்நித்தியம் கொண்டிருக்கும் இடத்தை அடைந்து நதியில் நீராடி வெளிப் பட்டது. கரையேறியதும் அதன் கருமை வெண்மையாகி இருந்தது.
அதைக் கவனித்த சுவாதன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவனாய், ‘ஆஹா, இந்த க்ஷேத்திரத்தில் இவ்வளவு மகிமை குடி கொண்டிருக்கிறதா!’ என்று வியந்தான்.
அப்போது அவன் முன்பு சர்வாலங்கார பூஷிதையான பெண் ஒருத்தி தோன்றினாள்.
ஐயா, தாங்கள் யார்? எங்கு போகிறீர்கள்?" என்று கேட்டாள் அவள்.
சுவாதன் அவளிடம் எதையும் மறைக்கவில்லை. தான் ஊரை விட்டுப் புறப்பட்ட காரணத்தையும், வழியில் அந்தணன் வீட்டில் நடந்த சம்பவத்தையும், பசுவைப் பின் தொடர்ந்து தான் வந்ததையும், பிரம்மஹத்தி தோஷத்தால் கருமை அடைந்திருந்த பசுவின் உடல், நதியில் நீராடியதன் காரணமாகத் தோஷம் நீங்கி, வெண்மையாகியதைக் கண்டு தானும் நதியில் நீராடிப் புண்ணியத்தை அடையப் போவதாகத் தெரிவித்தான்.
அதைக் கேட்ட அந்தப் பெண் முகம் மலர, ஐயா, இந்த இடத்தின் விசேஷம் சொல்ல முடியாது. நந்திகேச்வரர் தம்மைத் தரிசிப்பவரின் சகல பாவங்களையும் நீக்கி அஷ்ட ஐசுவரியங் களையும் அளிக்கிறார். நீ கங்கைக்குச் சென்று உன் தாயின் அஸ்தியைச் சேர்க்கக் கிளம்பி வந்தாய். உன் பிரயாணம் இதோடு முடிவடைந்துவிட்டது. இன்று வைசாக சுத்த சப்தமி நாள். இன்றைய தினம் கங்கா தேவியே நந்திகேச்வரரைத் தரிசிக்க இங்கு வருகிறாள். நர்மதையில் அவள் நீராடிப் பகவானைப் பூஜிக்க வருகிறாள்ஆகவே, நீ நர்மதையிலேயே உன் தாயின் எலும்புகளைச் சேர்ப்பித்து விடலாம். கங்கையில் சேர்த்த பலனைப் பெற்று உன் தாய் திவ்விய தேகம் அடைந்து விண்ணுலகம் செல்வாள். முன்பு ஒரு சமயம் ருஷிகை என்பவள் இங்குத் தினமும் நீராடி நந்திகேச்வரரை ஆராதித்து வந்தாள். அவள் இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்ட படியால், உள்ளத்தில் பகவானை இருத்தி, சதா அவன் நினைவிலேயே காலத்தைக் கழித்து வந்தாள்.
பக்கத்திலிருந்த மூடன் என்னும் அரக்கன் அவளைச் சிவபூஜை  செய்யாது இருக்குமாறு தொந்தரவு செய்து வந்தான். அவளோ அவன் வார்த்தைகளைச் சிறிதும் சட்டை செய்யாது பூஜையை நடத்தி வந்தாள். நர்மதை நதியைக் கங்கையாகப் பாவித்து பூஜை செய்து நீராடியும் பகவானை வழிபட்டும் வந்தாள்.
எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் தன் வார்த்தைகளைக் கேட்காமல் சிவபூஜை செய்வதைக் கண்ட அந்த அரக்கன் கோர ரூபத்தை எடுத்துக் கொண்டு அவளை நெருக்கிப் பயமுறுத்தினான். ருஷிகை தான் பூஜித்து வந்த சிவலிங்கத்தை அணைத்தபடி, சர்வேசா, இந்த அரக்கன் என்னைப் பூஜை செய்யவிடாது அச்சுறுத்துகிறானே. பக்தர்களைக் காத்து ரக்ஷிக்கும் பிரபுவான தாங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று பிரார்த்தித்தாள்.
நந்திகேச்வரர் அங்குப் பிரத்தியக்ஷமாகி அரக்கனைத் துரத்தி அவளைக் காப்பாற்றினார். பின்னர் அவள் பூஜித்து வந்த லிங்கத்திலேயே சாந்நித்தியம் கொண்டார். ருஷிகை பூஜித்து வந்த கங்கையும் அவள் முன்பு தோன்றி உனக்கு வேண்டிய வரம் கேள்" என்றாள். அவள் கங்கையை  வணங்கி, தாயே, என் பூஜையை ஏற்று என் முன் தோன்றிய உன் கருணையை எவ்வாறு போற்றுவது? இன்று வைசாக சுத்த சப்தமி நாள். இன்று என் முன்பு தோன்றியது போல் ஒவ்வொரு வருஷமும் இங்கு நீ பிரத்யக்ஷமாகி நர்மதையில் நீராடும் பக்தர்களுக்கு கங்கையில் நீராடிய பலனை அளிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். கங்கை அவ்வாறே செய்வதாக அவளுக்கு வரமளித்துச் சென்றாள். அதன்படி ஒவ்வொரு வருஷமும் வைசாக சுத்த சப்தமி அன்று கங்கை பிரத்யக்ஷமாகிறாள். ஆகவே நீ உன் தாயாரின் அஸ்தியை இன்றைய தினம் இங்கேயே சேர்ப்பிக்கலாம்" என்று சொன்ன அந்த மாது மறுபடியும் அவனைப் பார்த்து ஐயா! நான்தான் கங்கை, நர்மதையில் கலப்பதற்காக  வந்திருக்கிறேன்" என்று சொல்லி மறைந்தாள்.
சுவாதன் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவில்லை. பகவானின் கருணையை எண்ணி வியந்தவனாய் முறைப்படி செய்ய வேண்டியவற்றைச் செய்து தாயின் எலும்புகளை நதியில் சேர்ப்பித்தான்! அதே நேரத்தில் அவன் தாய் திவ்விய ரூபம் பெற்று வானிலே தோன்றினாள்.
மைந்தா! இன்று உன் செய்கையால் நான் பூரண திருப்தி அடைந்து மேலுலகம் செல்கிறேன். உனக்கு சர்வ மங்களங்களும் உண்டாகட்டும்" என்று வாழ்த்திவிட்டு மறைந்தாள்.
மன நிறைவோடு சுவாதன் நீராடி நந்திகேச்வரரைத் தரிசித்து அவரைப் பூஜித்து ஊர் திரும்பினான்.

ஹரி ஓம் !!!

Tuesday, 21 April 2020

சிவ புராணம் ( 12 )

12. ஜோதிர் லிங்கங்களின் விவரம் 
நைமிசாரண்யவாசிகளான முனிவர்களுக்கு சூதர் மேலும் சிவமகாத்மியத்தைக் கூறத் தொடங்கினார்.
சிவபெருமானின் திவ்விய சரிதங்களை ஒருவன் கேட்பானாகில் அவன் சகல பாபங்களும் நீங்கிப் பரிசுத்தனாவான். அவன் மூலம் அவன் வம்சமே விளங்கும்.
நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருத்திராக்ஷமும் கொண்டு சதா சிவநாமங்களை உச்சரிப்பவனை ஒருவன் தரிசிப்பானாகில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் திருவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிட்டும். அவனிடத்தில் சிவநாமமே கங்கையாகவும், விபூதியே யமுனையாகவும், ருத்திராக்ஷமே சரஸ்வதியாகவும் விளங்குவதாகச் சொல்லப்படுகிறது.
ஆயிரத்தொருநூறு ருத்திராக்ஷங்களை ஒருவன் தரிப்பானாகில் அவன் ருத்திர ஸ்வரூபியாக விளங்குவான். ஐந்நூற்றைம்பது ருத்திராக்ஷங்களால் கிரீடம் செய்து அணிபவன் சிவ சாந்நித்தியத்தை அடைவான். உபவீதமாகத் தரிப்பதானால் முந்நூற்று அறுபது ருத்திராக்ஷங்களை அணிய வேண்டும். முக்திக்கு, சிகையில் மூன்றும், இரு காதுகளிலும் ஐந்து அல்லது ஆறும், கழுத்தில் நூற்றொன்றும், புஜத்தில் பதினொன்றும், இரு காதுகளைச் சுற்றிலும் பதினொன்றும், மணிக்கட்டில் பதினொன்றும், பூணூலில் மூன்றும் அணிய வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளது. ருத்திராக்ஷ மணிகளைக் கொண்டு ஒருவன் நூறு முறை சிவநாமங்களை ஜபிப்பானாகில், ஆயிரம் முறை ஜபித்த பலனை அடைவான்.
ருத்திராக்ஷங்களிலும் பலவகை இருக்கின்றது. ஒரு முகம் உடையது சகல காரிய சித்தியை அளிக்கும். இரு முகம் கொண்டது லக்ஷ்மி கடாக்ஷத்தை அளிக்கவல்லது. மூன்று முகம் உள்ளது, நினைத்த காரியத்தை விருத்தி செய்யும். நான்கு முகங்களை உடையதோ சதுர்வித புருஷார்த்தங்களையும் கொடுக்கக் கூடியதாகும். ஐந்து முகங்களோடு கூடியதோ சகல பாபங்களையும் போக்கி விடும்.
ருத்திராக்ஷங்களில் ஒருமுக மணி கிடைப்பது அரிதாம். அப்படிக் கிடைக்கும் பட்சத்தில், அது இலந்தம்பழம் அளவு இருக்குமானால் சுகம் அதிகமாகும். நெல்லிக்காய் அளவாக இருந்தால் துக்கங்கள் நீங்கும். கடலை அளவு உள்ளது மிகவும் விசேஷமானது. இம்மையில் சகல போகங்களையும் மறுமையில் மோக்ஷத்தையும் கொடுக்கவல்லது. குன்றுமணி அளவு உள்ளது காரிய சாதகம் செய்யும்.
ருத்திராக்ஷங்களை அணிய விரும்புபவன், அவற்றைப் பொருள் கொடுத்தே பெறவேண்டும். பிறரிடமிருந்து தானம் வாங்கக்கூடாது. பணம் கொடுத்து வாங்கச் சக்தியில்லாதவன் தன் புண்ணியத்தைத் தத்தம் செய்தாவது பெற வேண்டும். ருத்திராக்ஷமாலை அணிந்தவனைப் பார்த்தால் பூதப் பிரேத பிசாசங்கள் ஓடிவிடும்.
ருத்திராக்ஷ மகிமையைச் சொல்லி வந்த சூதர் அடுத்து ஜோதி லிங்கங்களைப் பற்றிக் கூறத் தொடங்கினார்.
ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டு உண்டு. சௌராஷ்டிரத்தில் சோமநாத லிங்கம் இருக்கிறது. ஸ்ரீசைலத்திலுள்ள லிங்கத்துக்கு மல்லிகார்ச்சுன லிங்கம் என்று பெயர். உஜ்ஜயினியில் மகாகாள லிங்கமும், ஓங்கார லிங்கமும் இருக்கின்றன. ஹிமோத்திரியில் கேதார லிங்கம் உள்ளது. டாகினியில் பீமசங்கர லிங்கமும், காசியில் விச்வேச்வர லிங்கமும், கோதாவரி தீரத்தில் திரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைத்தியநாத லிங்கமும் இருக்கின்றன. நாகேசுவர லிங்கம் தாருகாவனத்திலும், இராமேசுவர லிங்கம் சேதுவிலும், மஹாராஷ்டிரத்திலுள்ள வெரூலில் குச்மேச லிங்கம் உள்ளன.
ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டின் பெயரையும் எவனொருவன் விடியற்காலத்தில் எழுந்திருந்து பயபக்தி யோடு ஜபிக்கிறானோ அவன் பாபங்களிலிருந்து விடுபட்டுக் காரிய சித்தியை அடைவான். இவற்றைப் பூஜிப்பவர்கள் பிறவி ஒழிந்து பகவானின் சந்நிதானத்தை அடைவார்கள்.
மனத்தால் நினைத்தாலே பாபங்கள் விலகக்கூடிய பஞ்ச பூதலிங்கங்கள் ஐந்து ஆகும்.
காஞ்சீபுரத்தில் பிரதிவி மயமான ஏகாம்பர லிங்கம் இருக்கிறது. காவேரி தீரத்தில் உள்ள ஜம்புகேச்வரத்தில் அப்பு மயமான ஜம்புகேச்வர லிங்கம் உள்ளது. அக்கினி மயமான அருணாசல லிங்கம் அருணாசலம் எனப்படும் திருவண்ணா மலையில் இருக்கிறது. தக்ஷிண கைலாயம் என்று புகழ்பெற்ற சுவர்ணமுகீ தீரத்தில் உள்ள திருக்காளத்தியில், வாயு மயமான ஸ்ரீகாளத்தி லிங்கமும், பூலோக மகா கைலாயம் என்ற புகழ்பெற்ற தில்லையில் ஆகாய மயமான திருமூல லிங்கமும் உள்ளது. இவ்வைந்து  லிங்கங்களின் பெயரைக் கேட்டாலும், சொன்னாலும் மனத்தில் நினைத்தாலும் அப்போதே அவன் புனிதமடைகிறான் என்றும் சொல்லும்போது, கண்ணாரக் கண்டால் பலனை விவரிக்க வேண்டுமா?
ஜோதிர்லிங்கம் பன்னிரண்டுக்கும் உபலிங்கங்கள் உண்டு.
சோமநாத லிங்கத்துக்கு உபலிங்கம்,
மஹீநதி சமுத்திர சங்கம தீரத்தில் உள்ள அந்தகேசலிங்கம் ஆகும்.

பிருகு பர்வதத்துக்குச் சமீபத்திலுள்ள
ருத்திர லிங்கம் மல்லிகார்ச்சுன லிங்கத்தின் உபலிங்கமாம்.

மகாகாள லிங்கத்திற்குத் துக்தேச லிங்கமும், ஓங்காரேசுவர லிங்கத்திற்குக் கர்த்தமேச லிங்கமும், உப லிங்கங்களாகச் சொல்லப்பட்டுள்ளன.

யமுனை தீரத்தில் உள்ள பூதேச லிங்கம், கேதார லிங்கத்திற்கு உபலிங்கமாகும்.

பீமசங்கர லிங்கத்திற்கு பீமேசுவர லிங்கம்,  விசுவேச்வர லிங்கத்திற்குச் சரஸ்யேச்வர லிங்கமும், திரியம்பக லிங்கத்திற்குச் சித்தேச்வர லிங்கமும் வைத்தியநாத லிங்கத்திற்கு வைஜநாத லிங்கமும், நாகேசுவர லிங்கத்திற்கு, ஜில்லிகா சரஸ்வதி சங்கமத்திலிருக்கும் பூதேசுவர லிங்கமும், இராமேசுவர லிங்கத்திற்குக் குப்தேச்வர லிங்கமும், குஸ்மேச லிங்கத்திற்கு வியாக்கிரேசுவர லிங்கமும் உபலிங்கங்களாகும்.
இவை தவிர இன்னும் சில முக்கிய லிங்கங்கள் உள்ளன. கங்காதீரத்தில் கிருத்திவாகேச லிங்கம், விருத்த காலகேச லிங்கம், திலபாண்டேசுவர லிங்கம், தசாசுவமேத லிங்கம் ஆகியவை உள்ளன. கங்காசாகர சங்கமத்தில் சங்கமேசுவர லிங்கம், யமுனை தீரத்தில் கோதூமேசுவர லிங்கம், பிருந்தாவன சமீபத்தில் நீலேசுவர லிங்கம், கல்லகி தீரத்தில் கடுகேச லிங்கம், புஷ்கர நதி தீரத்தில் பூரேச லிங்கம், பல்குநதி தீரத்தில் மண்டகேச லிங்கம், கோமதி நதி சங்கமத்தில் சித்த நாதேசுவர லிங்கம், பத்தனம் எனப்படும் பாட்னாவில் தூரேச லிங்கம், மிருகேச லிங்கம், ஜகந்நாத லிங்கம் ஆகிய லிங்கங்கள் விசேஷமாகச் சொல்லப்பட்டவை.

நர்மதை நதி தீரத்திலும் அநேக லிங்கங்கள் இருக்கின்றன. நர்மதை நதியே சிவரூபமாகப் போற்றப்படுவதாகும்.

அங்குள்ள மலைகளில் ஆவர்த்தேசர், பத்மேசர், சிம்ஹேசர், ஸுமேசர், குமாரேசர், புண்டரீகேசர், மண்டபேசர், தீக்ஷணேசர், துந்தரேசர், சூலேசர், கும்பேசர், குபேரேசர், சோமேசர், நீலகண்டேசர், மங்களேசர், நந்திகேசர் ஆகிய லிங்கங்கள் உள்ளன.

அவற்றுள் நந்திகேசர் கோடி பிரம்மஹத்திகளையும் போக்கடிப்பார் எனப் போற்றப் படுகிறார். நர்மதையில் ஸ்நானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கப் பெறுவர்.

ஹரி ஓம் !!!

Sunday, 19 April 2020

சிவ புராணம் ( 11 )

11. கணபதி விவாகம்

கைலயங்கிரியில் பார்வதி பரமேச்வரர் இருவரும் புத்திரர்களோடு ஆனந்தமாக இருந்துவரும் நாளில், குழந்தைகளுக்கு விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டனர். அதைப் பற்றி அறிந்த குமாரனும் கணேசனும் தனக்கே முதலில் விவாகம் செய்துவைக்க வேண்டுமென்று கேட்டனர். அவர்கள் போட்டியைக் கண்டு பார்வதி, பரமேச்வரர் இருவரும் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.
அவர்களிடையே எழுந்துள்ள இந்தப் போட்டியைத் தவிர்க்க சங்கரன் ஒரு யோசனை தெரிவித்தார். அதாவது இருவரில் யார் முதலில் பூலோகத்தைச் சுற்றிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கே முதலில் திருமணம் செய்து வைப்பதாகத் தெரிவித்தார். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆறுமுகன் மயிலேறி பூபிரதக்ஷிணத்திற்குப் புறப்பட்டார்.
கணேசனுக்கோ சகோதரனோடு போட்டி போட முடியாதென்று தெரிந்துவிட்டது. ஆகவே யோசித்தார். பின்னர், நீராடி நியம நிஷ்டையோடு தாய் தந்தையரை அணுகினார்.
நீங்கள் இருவரும் இப்படி ஆசனத்தில் அமருகிறீர்களா?" என்று சற்று பணிவோடு கேட்டார்.
எதற்குக் குமாரா?" என்று கேட்டாள் பார்வதி.
உங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்துப் பூஜிக்க விரும்புகிறேன்" என்றார் கணேசன்.
அவர் வார்த்தைப்படி பார்வதி பரமேச்வரர் இருவரும் ஆசனங்களில் வந்து அமர்ந்தனர். கணேசன் அவர்கள் இருவரையும் பூஜித்து மன நிறைவோடு ஏழு முறை வலம் வந்து வணங்கினார்.
தந்தையே, எனக்கு விரைவில் மணம் முடிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.
குமாரா! நான் சொன்ன சொல்லை மறந்து விட்டாயா? பூமியை வலம் வந்தால் திருமணம் செய்து வைக்கிறேன். குமரன் உன்னை முந்தி விடுவான். சீக்கிரமாகப் போ" என்றார் சங்கரன்.
ஆம், குமாரா! சீக்கிரம் புறப்பட்டுப் போய் வா" என்றாள் பார்வதி.
அம்மா, தந்தை சொல்வது போலத்தான் தாங்களும் கூறுகிறீர்கள். நான் உங்கள் விருப்பப்படி நடந்து கொண்டு விட்டேனே" என்றான் கணேசன்.
 பார்வதிக்கு அவன் கூறுவது விளங்கவில்லை.
என்ன சொல்லுகிறாய், குழந்தாய்?" என்று கேட்டாள் பார்வதி.
ஒரு முறை அல்ல; ஏழு முறை பூமியை வலம் வந்து நிற்கிறேன்" என்றான் கணேசன்.
அதெப்படி குழந்தாய்?" என்று கேட்டாள் பார்வதி.
கணேசன் ஈசனை மீண்டும் பணிந்து வணங்கி விட்டுச் சொன்னான்.
தந்தையே, வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதை மறந்து விட்டீர்களா? மாதா பிதாவைப் பூஜித்துப் பிரதக்ஷிணம் செய்து வணங்கினால் அவன் பூபிரதக்ஷிணம் செய்த பலனை அடைவதாக வேதங்கள் சொல்லவில்லையா? தீர்த்த யாத்திரையில் கிடைக்கும் பலனை ஒருவன் வீட்டிலிருக்கும் தன் தாய் தந்தையரைப் பூஜிப்பதால் அடைகிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் பாதங்களை அலம்பி அந்தத் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டால் கங்கா தீர்த்தத்துக்குச் சமம் என்றும் கூறப்பட்டுள்ளது. வேதங்கள் தங்கள் திருமுகத்திலிருந்து உண்டானவை அல்லவா. தங்களை வலம் வந்தது பூமியைப் பிரதக்ஷிணம் செய்ததற்கு ஒப்பாகாது என்றால் வேதங்கள் பொய் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?"
கணேசனின் சாதுர்ய மிகுந்த வார்த்தைகளைக் கேட்ட பார்வதி பரமேச்வரர் இருவரும் களிப்புற்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டனர்.
குமாரா ! உன் அறிவுத் திறனை எவ்வாறு புகழ்வது என்றே தெரியவில்லை. சத்தியமான வார்த்தைகளைத்தான் கூறினாய். உன் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகிறேன்" என்றார் சிவபெருமான்.
விசுவரூபனுடைய புத்திரிகளான சித்தி புத்தி இருவரையும் கணேசனுக்கு மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்யப் பட்டது. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. எல்லோரும் வந்திருந்து மகிழ்ச்சி தெரிவிக்கக் கணேசனின் திருமணம் கோலாகலமாக நடந்தது. சித்தியிடம் லக்ஷம் என்னும் பெயருள்ள குமாரனும், புத்தியிடம் லாபம் என்னும் குமாரனும் உண்டானார்கள்.
இது இப்படியிருக்க, பூமியை வலம் வரச் சென்ற குமரன், தான் மேற்கொண்ட காரியத்தை முடித்துக் கொண்டு கைலாயம் திரும்பினார். கலகமே தம் பேச்சாகக் கொண்ட நாரதர் அவரைச் சந்தித்து, குமரா! உன்னைப் பார்க்க எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா? உன்னை பூமியை வலம் வருமாறு அனுப்பிவிட்டுக் கணேசனுக்கு இரு பெண்களை மணம் முடித்து விட்டார்கள் உன் பெற்றோர்கள். இது நன்றாகத் தோன்றவில்லை. இது பெருத்த அநியாயம் அல்லவா! இவ்வாறு அநியாயம் செய்தவர்கள் முகத்தில் விழிக்கவே கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது" என்று சொல்லி குமரனின் உள்ளத்தில் கோபத்தை உண்டாக்கி விட்டுப் போய்விட்டார்.
குமரனின் வருத்தம் எல்லை மீறிவிட்டது. கணேசனுக்குத் தான் முதலில் திருமணம் செய்ய வேண்டும் என்ற விருப்ப மிருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே! அவ்விதம் சொல்லாமல் தன்னை பூபிரதக்ஷிணத்துக்கு அனுப்பி விட்டுத் திருமணத்தை நடத்தி விட்டனரே! என வருந்தினார்.
அதை நினைக்க நினைக்க அவன் உள்ளம் குமுறியது. வேண்டுமென்ற செய்த செயலாக எண்ணினான் குமரன். கோபத்தால் அவன் உடல் துடித்தது. கைலாயத்தில் நுழைய அவனுக்கு விருப்பமில்லை. ஆடம்பரமான உடைகளைக் களைந்து எறிந்தார். கோவணத்தை அணிந்து கொண்டு தாய் தந்தையிடம் சென்றார்.
நீங்கள் செய்வது நியாயம்தானா என்பதை யோசித்துப் பாருங்கள். என் கோரிக்கையை நிறைவேற்ற உங்களுக்கு விருப்பமில்லை எனில் முதலில் கணேசனுக்குத்தான் விவாகம் எனச் சொல்லியிருக்கலாமே. இப்படி என்னை வஞ்சித்திருக்க வேண்டாம். இனி எனக்குத் திருமணமும் தேவை இல்லை; இந்த ஆடம்பரமும் வேண்டாம். என்னை யாரும் கொண்டாடவும் வேண்டியதில்லை" என்று சொல்லி விட்டுக் கோபமாகப் புறப்பட்டார்.
பார்வதி பரமேச்வரர் இருவரும் அவனைத் தடுத்து நிறுத்தினர்.
குமரா! வீண் கோபம் கொள்ளாதே. நாங்கள் சொன்னது உண்மைதான். அதன்படி நீயும் பூமியை வலம் வரச் சென்றாய். ஆனால் கணேசனோ தன் அறிவின் மூலம் உன்னை  முந்தி விட்டான். தாய் தந்தையரைப் பூஜித்து வலம் வந்து நமஸ்கரித்தால் ஒருவன் பூபிரதக்ஷிணம் செய்த பலனை அடைவான் என்று வேதம் கூறுகிறது. அதன்படி அவன் எங்கள் இருவரையும் பூஜித்து ஏழுமுறை பிரதக்ஷிணம் செய்து தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கூறினான். இப்போது நீயும் பூமியை வலம் வந்துவிட்டாய். உனக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். சாந்தம் கொள்" என்றனர்.
ஆறுமுகனோ பெற்றோர்களின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை; அவர்கள் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து புறப்பட்டு கிரவுஞ்ச மலைக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். அது முதல் குமரக் கடவுளுக்கு குமாரப் பிரம்மசாரி என்ற பெயர் நிலவத் தொடங்கியது.
கார்த்திகை பௌணர்மி, குமரக் கடவுளுக்கு மிகவும் விசேஷமானது. அன்றையத் தினம் தேவர்களும் முனிவர்களும் கிரவுஞ்ச கிரிக்குச் சென்று ஆறுமுகனைத் தரிசித்து மகிழ்ந்தனர். அன்று குமரக் கடவுளைத் தரிசிப்பவர்கள், பாபங்கள் ஒழிந்து தங்கள் மனோபீஷ்டம் நிறைவேறப் பெறுவர்.
குமரன் கோபித்துக் கொண்டு போனது பார்வதிக்கு மிகவும்  மனவேதனையைக் கொடுத்தது. புத்திரனைக் காண வேண்டுமென்று அவளும் கிரவுஞ்சகிரிக்குச் சென்று விட்டாள். சிறிது காலத்தில் சிவபெருமானும், மல்லிகார்ஜுனன் என்ற பெயரில் ஜோதிர்லிங்க ரூபத்தில் கிரவுஞ்ச மலைக்கு வந்தார்.
பெற்றோர் இருவரும் தன்னைத் தேடி வந்து விட்டனர் என்பதைக் கண்டதும் குமரன் அங்கிருந்து புறப்பட்டு வேறிடம் செல்லும் விருப்பம் கொண்டான். ஆனால் தேவர்கள் அவனைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து அவ்வாறு கோபித்துக் கொண்டு செல்லக் கூடாதென்றும் மனச் சாந்தியோடு அங்கேயே தங்க வேண்டுமென்றும் பிரார்த்தித்தனர். குமரனும் அவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அங்கேயே தங்கினார். கோபம் நீங்கி அவர் உள்ளம் சாந்தமடைந்தது.
அமாவாசை அன்று சிவபெருமானும், பௌர்ணமி தினம் பார்வதியும் குமரனைக் காண கிரவுஞ்ச மலைக்கு வந்து செல்கிறார்கள்.


ஹரி ஓம் !!!